அமுக்கரா – மருத்துவ பயன்கள்

அமுக்கரா முழுத்தாவரமும் வெப்பத் தன்மையும், காரச் சுவையும், கொண்டது. இவை சிறுநீர் பெருக்கும்; உடல் வெப்பத்தைக் கட்டுப்படுத்தும்; மலச்சிக்கலைப் போக்கும்; வீக்கத்தைக் குறைக்கும்; வாதநோயைக் கட்டுப்படுத்தும்; உடலைத் தோற்றும்; ஆண்மையை அதிகமாக்கும்.
அமுக்கரா வேரின் நோய் எதிர்ப்புத் திறன், நுண்ணுயிர்களைக் கட்டுப்படுத்தும் தன்மை போன்றவை தற்போதைய உயர்நிலை ஆய்வுகள் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளன.

அமுக்கரா மலைப்பகுதிகளில் புதர்ச்செடியாக வளரும். மாற்றடுக்கில் அமைந்த தனி இலைகளையும், சிறிய கிளைகளையும் கொண்ட செடி. 6 அடி உயரம் வரை வளரும். இலைகள் சாம்பல் பச்சையானவை. சொர சொரப்பானவை.

அமுக்கரா தண்டும், கிளைகளும் மெல்லிய உரோமத்தால் மூடப்பட்டு சாம்பல் நிறமாகக் காணப்படும். பூக்கள் சிறியவை, வெளிறிய பச்சை நிநமானவை. முதிர்ந்த கனிகள் சிவப்பாக, உருண்டையாக, வழவழப்பாக இருக்கும். பழுப்பு நிறமான தோலால் மூடப்பட்டிருக்கும்.

அமுக்கரா கோவை மாவட்டத்தின் மலைப்பாங்கான பகுதிகளில் இயற்கையாக வளர்கின்றது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் வாணிப ரீதியாக பயிர் செய்யபட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

அமுக்கிரி, அகவகந்தா, அகவகந்தி, ஆகிய மாற்றுப் பெயர்களும் இதற்கு உண்டு. அமுக்கரா இலைகள், விதை, வேர்க்கிழங்கு நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.
அகவகந்தா என்கிற பெயர் அமுக்கராவின் காய்ந்த வேர்களைக் குறிக்க இந்திய மொழிகள் அனைத்திலும் பொதுவாகப் பயன்படுத்தப் படுகின்றது.

நரம்புத் தளர்ச்சி கட்டுப்பட அமுக்கரா கிழங்கு 1 பங்கு, கற்கண்டு 3 பங்கு சேர்த்து, நன்கு தூளாக்கிக் கலந்து வைத்துக் கொண்டு காலை, மாலை வேளைகளில் 1 தேக்கரண்டி அளவு உட்கொண்டு, 1 டம்ளர் காய்ச்சிய பசும்பால் குடித்துவர வேண்டும்.

உடல் அசதி, மூட்டுவலி ஆகியவை தீர நன்றாகக் காய்ந்த அமுக்கரா கிழங்கை இடித்துத்தூள் செய்து கொள்ள வேண்டும். அத்துடன், சம அளவு சர்க்கரை சேர்த்து, காற்றுப்புகாத பாத்திரத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். தினமும், காலை, மாலை வேளைகளில் ஒரு தேக்கரண்டி அளவு, 200 மி.லி. காய்ச்சிய பாலுடன் கலந்து கொடுக்க வேண்டும் 4 வாரங்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

காய்ந்த அமுக்கரா கிழங்கைச் சம அளவு சுக்குடன் சேர்த்து, வெந்நீர் விட்டு அரத்து மேல் பூச்சாகப் பூச வீக்கம் குறையும்.

உடல் பலம் அதிகரிக்க பச்சையான அமுக்கரா கிழங்குகளிலிருந்து இரசம் தயார் செய்ய வேண்டும். இத்துடன் பனங்கற்கண்டு, தேன் மற்றும் திப்பிலி சேர்க்க வேண்டும். 21 நாட்கள் வரை தினம் இருவேளை அரை டம்ளர் அளவு இரசத்தைப் பருக வேண்டும்.

பிரசவ காலத்தில் ஏற்படும் உடல் அசதி நீங்க 2 தேக்கரண்டி கிழங்குத் தூளை இளஞ்சூடான பாலில் கலந்து, தினமும் இரண்டு வேளை பனங்கற்கண்டு சேர்த்து உட்கொள்ள வேண்டும்.

 

குறிப்பு

நாமே அமுக்கரா செடியை வளர்க்கலாம். ஒரு ஆண்டிற்குப் பின்னர், முதிர்ச்சியடைந்து பூத்துக் காய்ந்த பிறகு செடியைப் பிடுங்கி கிழங்குகளை பச்சையாகவோ, காயவைத்தோ உபயோகிக்கலாம். பசுமையான கிழங்குகளிலிருந்து இரசம் தயாரிக்கலாம்.

அமுக்கரா இலைகளிலிருந்து, மணித்தக்காளி இலைக் குழம்பு செய்யும் முறையைப் பின்பற்றி காரக்குழம்பு செய்து உபயோகிக்கலாம். மருந்துக் கடைகளில் கிடைக்கம் அமுக்கரா லேகியம், அஸ்வகந்தி லேகியம் போன்றவற்றை உடல் பலம், அழகு மற்றும் நீண்ட ஆயுளைப் பெற வாங்கி உபயோகிக்கலாம்

Comments are closed.