இந்தியாவில் உள்ள‌ உலக பராம்பரியச் சின்னங்கள்

இந்தியாவில் உள்ள 32 இடங்களை உலக பராம்பரியச் சின்னங்கள் என‌ ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ  அறிவித்துள்ளது.

இதில் 25 இடங்கள் இந்திய கலாச்சாரம் மற்றும் பராம்பரியத்தை விளக்குவதாகவும், 7 இடங்கள் இயற்கைச் சிறப்பு மிக்க இடங்களாகவும் உள்ளன.

1983-ல் ஆக்ராக் கோட்டையும், அஜந்தா குகைகளும் முதலில் பராம்பரிய இடங்களாக அறிவிக்கப்பட்டன.

இந்தியாவில் உள்ள 32 இடங்களை உலக பராம்பரியச் சின்னங்கள் எவை என்று பார்ப்போம்.

 

கிரேட் இமாலயன் தேசியப் பூங்கா, ஹிமாச்சலப் பிரதேசம்

இது ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் குல்லு என்ற இடத்தில் அமைந்துள்ளது. இது உயர்ந்த சிகரங்களையும், புல்வெளிகளையும், ஆற்றுப்படுகைகளில் காடுகளையும் கொண்டுள்ளது.

இப்பகுதியில் உள்ள மலைகளின் மேல் உள்ள பனிகள் உருகுவதால் சிந்து நதியின் கிளை நதிகள் இங்கிருந்து உருவாகுகின்றன. 375-க்கும் மேற்பட்ட தாவர, விலங்கினங்கள் இங்கு காணப்படுகின்றன.

ஊசியிலைக் காடுகள், பனிச்சிகரங்கள், பனியாறுகள் இவ்விடத்திற்கு அழகு சேர்க்கின்றன. 2014 –ல் பராம்பரிய இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ராணியின் குளம், குஜராத்

இது குஜராத் மாநிலம் பதான் என்னும் நகரத்தில் அமைந்துள்ளது. நூற்றுக்கணக்கான படிக்கட்டுகளுடன் கூடிய இக்கிணற்றை ராணி உமயமதி கட்டினார்.

இக்கிணறு அடுக்கடுக்கான தாழ்வாரங்கள், கல்சிற்பங்கள் ஆகியவற்றைக் கொண்டு மழை நீர் சேகரிக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.அக்காலத்தில் இக்கிணற்றைச் சுற்றிலும் விஷக்காய்ச்சலை நீக்கும் மூலிகைத் தாவரங்கள் வளர்க்கப்பட்டுள்ளன.

இக்கிணற்றின் பக்கவாட்டு சுவற்றில் 800-க்கும் மேற்பட்ட சிற்ப செதுக்கல்கள் காணப்படுகின்றன. விஷ்ணுவின் பத்து அவதாரங்கள், மகிசாசூரமர்த்தினி, கௌதமபுத்தர் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. 2014 –ல் பராம்பரிய இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

குதுப் நினைவுச் சின்னங்கள்

குதுப் நினைவுச் சின்னங்கள் என்பவை குதுப்மினார், அலை டார்வார்சா, அலை மினார், குவ்வத்-இல்-இஸ்லாம் மசூதி, இல்டுமிஷ் கல்லறை மற்றும் இரும்புத்தூண் ஆகிய இடங்களின் தொகுப்பு ஆகும். இது இந்தியாவில் டெல்லியில் அமைந்துள்ளது.

குதுப்மினார் குத்புதீன் ஐபெக் என்பவரால் கட்டப்பட்டது. செங்கற்களால் கட்டப்பட்ட உலகிலேயே உயர்ந்த பள்ளிவாசல் தூபி ஆகும். இது 73 மீ உயரமும், அடிப்பாகத்தில் 15 மீ அகலமும், மேல்பாகத்தில் 2.5 மீ அகலமும் உடையது.

இக்கட்டிடம் இந்தோ இஸ்லாமிய கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. 1993 –ல் பராம்பரிய இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சம்பானேர்-பாவாகேத் தொல்லியல் பூங்கா

இது குஜராத் மாநிலம் பஞ்சமஹால் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பாவாகேத் என்னும் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள வரலாற்றுப் புதையலான இவ்விடம் சம்பானேர்-பாவாகேத் என்று அழைக்கப்படுகிறது.

இங்கு மசூதிகள், கோயில்கள், அரண்மனைகள், கல்லறைகள், நுழைவுவாயில்கள், கோட்டைகள் உள்ளிட்ட 11 விதமான கலாச்சார சின்னங்கள் காணப்படுகின்றன. சேம்புக் காலத்தைச் சேர்ந்த வீடுகளும்; காணப்படுகின்றன.

இந்து-முஸ்லீம் கட்டக்கலையை பறைசாற்றும் விதமாக இத்தொல்லியல் பூங்கா அமைந்துள்ளது. 2004-ம் ஆண்டு உலக பாராம்பரிய சின்னமாக இவ்விடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ஹம்பிலுள்ள நினைவுச் சின்னங்கள்

இந்நினைவுச்சின்னங்கள் கர்நாடக மாநிலத்தின் வடக்குப் பகுதியில் துங்கபத்திரை ஆற்றின் கரையில் காணப்படுகின்றன. விஜய நகரப் பேரரசின் பண்டைய இடிபாடுகளின் தொகுப்புக்களே ஹம்பி நினைவுச் சின்னங்கள் ஆகும். இது திராவிட கலை மற்றும் கட்டிடக் கலை அமைப்பினைப் பறைசாற்றுகின்றது.

இன்றும் இவ்விடத்தில் உள்ள விருபாட்சர் கோயில் புகழ் பெற்ற வழிபாட்டு தலமாக விளங்குகிறது. ஹரிவிட்டல் கோயில், கிருஷ்ணர் கோயில், பட்டாபிராமர் கோயில், ஹனுமன் கோயில் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

கடைத்தெருக்கள், வீடுகள் ஆகியவை கோவில்களைச் சுற்றிலும் காணப்பட்டன என்பதனை அழிபாடுகளின் மூலம் அறியலாம். 1986-ல் இவ்விடம் உலக பராம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.

 

பட்டடக்கல், கர்நாடகா

இந்நினைவுச்சின்னம் கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில் மலப்பிரபா ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இந்நகரம் சாளுக்கியர்களின் தலைநகரமாக விளங்கியது.

இங்கு காணப்படும் கோயில்கள் 7,8 நூற்றாண்டைச் சார்ந்தவை. மொத்தம் பத்து கோயில்கள் உள்ளன. அவற்றில் நான்கு திராவிடக் கலையிலும், நான்கு நாகரப் பாணியிலும், இரண்டு திராவிட மற்றும் நாகரக் கலை இணைந்தும் காணப்படுகின்றன.

விருபாட்சர் கோயில், சங்கமேசுவரர் கோயில், மல்லிகார்ஜூனர் கோயில், காசிவிஸ்வநாதர் கோயில், கடசித்தேசுவரர் கோயில், ஜம்புலிங்கேஸ்வரர் கோயில், கல்கநாதர் கோயில், பாபநாதர் கோயில் மற்றும் சமணக் கோயில் ஆகியவை குறிப்பிடத்தக்கவை ஆகும். 1987-ல் இவ்விடம் உலக பராம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.

 

கஜூராகோ, மத்தியபிரதேசம்

இந்நினைவுச்சின்னம் மத்தியப்பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இவை மத்திய கால இந்து மற்றும் சமணக் கோயில்களின் தொகுப்பு ஆகும்.

இது இந்தியாவின் ஏழு அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இவற்றில் சிற்றின்ப சிற்பங்கள் மிகுந்து காணப்படுகின்றன. இவற்றை சந்தேல இராஜபுத்திர அரசர்கள் கட்டினார்கள்.

கஜூராகோ சந்தேல இராஜபுத்திரர்களின் கலாச்சாரத் தலைநகராக விளங்கியது. இங்குள்ள கோயில்கள் மணற்பாறைகளால் ஆனவை. இவை கி.பி.950 முதல் 1150 வரை 200 ஆண்டுகளில் கட்டப்பட்டவை ஆகும். இவ்விடம் 205 சதுர கி.மீ பரப்பளவில் சுமார் 85 கோவில்களைக் கொண்டுள்ளது.

இக்கோயில்களில் கண்டரியாக் கோயில் புகழ் பெற்றது ஆகும். இக்கோயில்கள் நாகரா கட்டிடக்கலையைச் சார்ந்தவை. 1986-ல் இவ்விடம் உலக பராம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.

 

இராஜஸ்தானின் மலைக்கோட்டைகள்

இந்நினைவுச்சின்னம் இராஜஸ்தான் மாநிலத்தில் ஆரவல்லி மலைத்தொடரில் வரிசையாக அமைந்துள்ளன. சித்தூர்கார்க் கோட்டை, கும்பல்கார்க் கோட்டை, ரன்தம்பூர் கோட்டை, காக்ரான் கோட்டை, ஆம்பர் கோட்டை, ஜெங்சால்மர் கோட்டை ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

இவைகள் இராஜபுத்திரர்களின் படை வலிமை, போர் திறமை ஆகியவற்றை பறைசாற்றும் வகையில் உள்ளன. இக்கோட்டைக்குள் சந்தைகள், அங்காடித்தெருக்கள், கோவில்கள், அரண்மனைகள் ஆகியவை இருந்தன.

இக்கோட்டையினுள் உள்ள மழைநீர் சேமிப்புத் தொட்டிகள் இன்றளவும் பயன்பாட்டில் உள்ளன. 2013-ம் ஆண்டு இவ்விடம் உலக பராம்பரிய சின்னங்கள் பட்டியலில் இக்கோட்டைகள் இடம் பெற்றுள்ளன.

 

மகாபோதி கோயில், புத்தகயா

இந்நினைவுச் சின்னம் பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலின் மேற்குப் புறத்தில் புனித போதி மரம் உள்ளது. இம்மரத்தைச் சுற்றிலும் சில குறிப்பிட்ட எல்லைக்கு புல் போன்ற தாவரங்கள் கூட வளருவதில்லை.

இக்கோயில் அமைந்துள்ள இடத்திலேயே புத்தர் ஞானம் பெற்றதாகக் கருதப்படுகிறது. இவ்விடம் உலகெங்கிலும் உள்ள புத்த மதத்தினர் புனித யாத்திரை செல்லும் இடமாகக் கருதப்படுகிறது.

அசோகர் இக்கோயிலைக் கட்டியதாகக் கருதப்படுகிறது. தற்போது உள்ள கோயில் கி.பி.5 மற்றும் 6-ம் நூற்றாண்டுக்கு இடையில் அமைக்கப்பட்டது.

குப்தர் காலத்தின் பிற்பகுதியைச் சேர்ந்த இக்கோயில் முழுமையாகச் செங்கற்களால் கட்டப்பட்டு இன்றும் நிலைத்திருக்கும் மிகப் பழமையான கோயில்களில் முக்கியமானது. 2002ல் இவ்விடம் உலக பராம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

கோவாவின் தேவாலங்களும், மடங்களும்

இந்நினைவுச் சின்னம் கோவாவின் வடக்கு கோவா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இவ்விடம் பழைய கோவா என்றழைக்கப்படுகிறது. இது தலைநகர் பானர்ஜியிலிருந்து 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

போர்த்துகீசியர்களின் ஆளுகையின் போது பல தேவாலயங்கள் கட்டப்பட்டன. சான்டா கேதரீனா செ தேவாலயம், புனித அசிசியின் பிரான்சு தேவாலயம், புனித அகஸ்டின் தேவாலயம் போன்றவை பராம்பரியமிக்கவை.

இவை அனைத்தும் 16-17 நூற்றாண்டுகளில் கட்டப்பட்டவை. 1986ல் இவ்விடம் உலக பராம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சாஞ்சியிலுள்ள புத்த நினைவுச் சின்னங்கள்

இந்நினைவுச்சின்னங்கள் மத்திய பிரதேச மாநிலம் ராய்சென் மாவட்டத்தில் அமைந்துள்ளன. புத்த நினைவுச் சின்னங்கள் என்பவை சாஞ்சி ஸ்தூபி, ஒரே கல்லிலான கற்றூண், அரண்மனைகள், வழிபாட்டிடங்கள், மடாலயங்கள் ஆகியவற்றின் தொகுப்பு ஆகும்.

இது இந்தியாவின் பழமையான கற்கட்டிடம் ஆகும். இந்நினைவுச்சின்னங்கள் கி.மு.3 முதல் 12 வரை கட்டப்பட்டவை. சாஞ்சி ஸ்தூபி அசோகரால் கட்டப்பட்டது.

இத்ஸ்தூபி புத்தரின் நினைவுப் பொருட்கள் மீது அமைக்கப்பட்ட அரைக் கோள வடிவ செங்கல் கட்டுமானம் ஆகும். இந்நினைவுச் சின்னங்கள் மௌரியர் கால கட்டிடக் கலையை பறைசாற்றுகின்றன. 1989-ல் இச்சின்னங்கள் உலக பராம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளன‌.

 

சோழப்பெருங்கோயில்கள்

இந்நினைவுச்சின்னங்கள் தென்னிந்தியாவில் சோழ அரசர்களால் கட்டப்பட்டவை. இவற்றுள் தஞ்சாவூரில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயம், கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயம், தாராசுரத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் ஆலயம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

இவை சோழர் கால கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக உள்ளன.. இன்றைக்கும் இக்கோயில்களில் 1000-ம் ஆண்டு பழமையான விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன.

இவை தமிழர்களின் கலை, பாராம்பரியம், கலாச்சாரம் ஆகியவற்றை பறைசாற்றுகின்றன. 1987-ல் இவ்விடங்கள் உலக பராம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டன‌.

 

மாமல்லபுரம் மரபுச்சின்னங்கள்

இந்நினைவுச்சின்னங்கள் தமிழ்நாட்டில் மாமல்லபுரத்தில் கோரமண்டலக் கடற்கரையில் அமைந்துள்ள குடைவரைக் கோயில்கள் ஆகும். இவை 7-ம் நூற்றாண்டைச் சார்ந்தவை.

இவைகள் முதலாம் நரசிம்மப் பல்லவ மன்னனால் கட்டப்பட்டவை. இவற்றுள் மாமல்லபுர ரதக்கோயில்கள், குகைக்கோயில்களான மகிசாசுரமர்த்ததினி மண்டபம், பஞ்சபாண்டவர் மண்டபம், கிருஷ்ணர்கோயில், அர்ஜூனன் பாவசங்க கீர்த்தனம் (கங்கை மரபுச்சின்னங்கள்), மாமல்லபுரக் கடற்கரை கோயில்கள் ஆகியவை உலகப் பாராம்பரிய சின்னங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. 1984ல் இவ்விடங்கள்; உலக பராம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டன‌.

 

பீம்பேட்கா பாறைவாழிடங்கள்

இந்நினைவுச் சின்னங்கள் மத்தியப்பிரதேசம் மாநிலம் ராய்ச்சென் மாவட்டத்தில் விந்திய மலைகளின் அடிவாரமான தக்காண பீடபூமிப் பகுதிகளில் அமைந்துள்ளன.

இவை வரலாற்றுக்கு முந்திய கால இந்தியாவின் மனித வாழ்க்கையைப் பற்றி உதவுகின்றன. அக்கால மக்களின் நடனம், வேட்டையாடும் முறைகள் ஆகியவை குகை ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன.

இவ்வோவியங்கள் பாலியோலித்திக் காலத்தினை சார்ந்தவை. இவை 30,000 ஆண்டுகள் பழமையானவை ஆகும்.

மகாபாரத வீரனான பீமன் அமர்ந்த இடம் என்னும கருத்தில் இவ்விடம் பீம்பேட்கா என்றழைக்கப்படுகிறது. 2003ல் இவ்விடங்கள் உலக பராம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டன‌.

 

அஜந்தா குகைகள்

இந்நினைவுச் சின்னங்கள் மகாராஷ்டிர மாநிலம் அஜந்தா என்னும் ஊருக்கு அருகில் காணப்படுகின்றன. இக்குகைகள் வகோரா நீரோடையை தொட்டபடி குதிரைக் குளம்பு வடிவத்தில் 76 மீ உயரம் வரை காணப்படுகின்றன.

இக்குகைகளில் புத்தமத சிற்பங்களும், ஓவியங்களும் குடைவரைக் கோயில்களும் காணப்படுகின்றன. புத்தமதக் கொள்கைகளை முதன்மைப்படுத்தியும், புத்தருடைய வாழ்கை வரலாற்றைப் பற்றியும் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

இக்குகையின் தரைப்பகுதியைத் தவிர எல்லா இடங்களிலும் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இவ்வோவியங்கள் இயற்கை வண்ணங்கள் கொண்டு வண்ணம் தீட்டப்பட்டுள்ளன.

கி.மு 200 முதல் கி.பி.650 வரை இவை உருவாக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. இவ்வோவியங்கள் மூலமே இந்திய ஓவியக்கலை வெளி உலகுக்கு தெரியப்படுத்தப்பட்டது.

கலைநயம் மிக்க தூண்கள், மண்டபங்கள், சிலைகள், புத்தரின் பல்வேறு வடிவங்கள் ஆகியவை இவற்றை சிறப்புறச் செய்கின்றன. 1983-ல் இவ்விடம் உலக பராம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.

 

எல்லோரா குகைகள்

இந்நினைவுச்சின்னங்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் அவுரங்காபாத்திலிருந்து 30 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. ராஷ்டிரகூடர்கள் இங்கு குடைவரைக் கோயில்களை அமைத்துள்ளனர்.

இவையே குடைவரைக் கோயில்களின் முன்னோடியாக திகழ்கின்றன. இங்கு இந்து, புத்த, சமணக் கோயில்கள் காணப்படுகின்றன. இவை கி.பி 5 முதல் 10 நூற்றாண்டைச் சேர்ந்தவை ஆகும்.

இங்கு காணப்படும் 34 கோயில்களில் 17-இந்து சமயத்தையும், 12-புத்த சமயத்தையும், 5-சமண சமயத்தையும் சார்ந்தவை. இங்கு காணப்படும் கைலாசநாதர் கோயில் சிறப்பு வாய்ந்தது. 1983ல் இவ்விடம் உலக பராம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.

 

எலிபண்டா குகைகள்

மகாராஷ்டிரம் மாநிலம் மும்பையின் துறைமுகப் பகுதியில் உள்ள காராப்புரித் தீவில் காணப்படுகின்றன. இங்கு காணப்படும் சிற்பங்கள் 9 முதல் 13 நூற்றாண்டைச் சேர்ந்தவை ஆகும்.

இவற்றுள் சில சில்காரா அரசர்களின் காலத்தையும், சில ராஷ்டிரகூடர்களின் காலத்தையும் சார்ந்தவை. இங்கு உள்ள சிவன் சிலையில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் முகங்கள் இணைந்து காணப்படுகின்றன. இவ்வடிவமே ராஷ்டிரகூடர்களின் அரசு சின்னமாக விளங்கியது.

குடைவரைக் கோயில்கள் 60,000 சதுர அடி அளவில் அமைந்துள்ளன. இங்கு காணப்படும் நடராஜர், சதாசிவன் போன்ற புடைப்புச் சிற்பங்கள் சிறப்பு வாய்ந்தவை. 1987-ஆம் ஆண்டு இவ்விடம் உலக பராம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.

 

காசிரங்கா தேசியப்பூங்கா

காசிரங்கா தேசியப்பூங்கா அஸ்ஸாம் மாநிலத்தில் கோலாகாட், நாகான் மாவட்டங்களில் அமைந்துள்ளது. இது உயரமான புற்களை உடைய புல்வெளிகளை அதிகம் கொண்டு கிழக்கு இமயமலைப்பகுதியில் அமைந்துள்ளது.

1905-ல் ஆரம்பிக்கப்பட்டு தற்போது 429 சதுர கி.மீ பரப்பினைப் பெற்றுள்ளது. பிரம்மபுத்திரா உட்பட நான்கு நதிகள் இப்பூங்காவினை வளப்படுத்துகின்றன. உலகிலேயே ஒற்றைக் கொம்பு காண்டா மிருகங்கள் இங்கு தான் அதிகம் காணப்படுகின்றன.

உலகப்புகழ் பெற்ற இப்பூங்கா சிறந்த பறவைகள் சரணாலயமாகவும் திகழ்கிறது. இங்கு இடம் பெயரும் பறவையினங்கள் அதிகம் வாழ்கின்றன. இப்பூங்காவினைப் பார்வையிட நவம்பர் முதல் ஏப்ரல் வரை உள்ள காலம் ஏற்றதாகும்.

ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம், புலிகள், யானைகள், காட்டு நீர் எருமைகள், சேற்று மான்கள், காட்டுப்பன்றிகள், பல்வேறு பறவையினங்கள், உயரமான புற்கள் காணப்படுகின்றன. 1985ல் இவ்விடம்; உலக பராம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.

 

மானசு வனவிலங்கு காப்பகம்

இந்நினைவுச் சின்னம் அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியிலிருந்து 167 கி.மீ தொலைவில் பூட்டான் நாட்டு எல்லையை ஒட்டி உள்ளது. இங்கு மானசு நதி பாய்கிறது. அதனால் இக்காப்பகம் மானசு என்ற பெயரால் வழங்கப்படுகிறது. இது 391 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. இவ்விடம் 1928-ல் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.

புலி, யானை, ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம், பலவகைப் பறவைகள், ஆமைகள், தங்கநிற லங்கூர் வகைக் குரங்குகள் காணப்படுகின்றன. 1992-ல் இவ்விடம் உலக பராம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

கேவலாதேவ் தேசியப்பூங்கா

இந்நினைவுச்சின்னம் இராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது. இது புகழ் பெற்ற பறவைகள் சரணாலயம் ஆகும். இங்கு உள்ளுர் நீர் பறவைகளுடன் புலம் பெயர்ந்து வாழும் வெளிநாட்டுப் பறவைகளும் அதிகம் காணப்படுகின்றன. இது மொத்தம் 29 சதுர கி.மீ பரப்பளவில் காணப்படுகிறது.

இங்கு 300-க்கும் அதிகமான பறவையினங்கள் காணப்படுகின்றன. இப்பூங்காவிற்கு ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்து சைபீரியக் கொக்குகள் வருகை தருகின்றன.

இங்கு 379-வகை தாவரங்கள், 7-வகைப்பல்லிகள், 7-வகை ஆமைகள், 13-வகை பாம்புகள் காணப்படுகின்றன. இது பெரிய உயிரின பாராம்பரிய சின்னமாக விளங்குகிறது. 1985ல் இவ்விடம் உலக பராம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.

 

நந்ததேவி மற்றும் மலர்பள்ளத்தாக்கு தேசியப்பூங்கா

இந்நினைவுச்சின்னம் உத்ரகண்ட் மாநிலத்தில் மேற்கு இமயமலைப்பகுதியில் அமைந்துள்ளது. இப்பூங்கா முழுவதும் இயற்கை அழகு நிறைந்த மலர்கள் நிரம்பியுள்ளன.

இங்கு கருப்புக் கரடிகள், பனிச்சிறுத்தைகள், பழுப்புக் கரடிகள், நீலஆடுகள் காணப்படுகின்றன. இங்கு 600 தாவர இனங்கள், 520 வகை விலங்கினங்கள் காணப்படுகின்றன. 1988-ல் இவ்விடம் உலக பராம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.

 

சுந்தர்பன் தேசியப்பூங்கா

சுந்தர்பன் தேசியப்பூங்கா மேற்கு வங்காளத்தில் கங்கை, பிரம்மபுத்திரா, மேக்னா நதிகளின் முகத்துவாரப் பகுதிகளில் அமைந்துள்ளது. இப்பூங்கா சதுப்பு நிலக்காடுகளான மாங்குரோவ் காடுகளை அதிகம் கொண்டுள்ளது.

சதுப்புநிலத் தாவரங்களில் ஒன்றான சுந்தரி என்பதன் பெயரால் இப்பூங்கா சுந்தர்பன் என்றழைக்கப்படுகிறது. இது 1984-ல் தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது. வங்கப்புலிகளுக்கான அதிகப் பரப்பினைப் பெற்று பெரிய சரணாலயாமாக உள்ளது.

இது இந்தியாவில் மட்டும் 4262 சதுர கி.மீ பரப்பிகைக் கொண்டுள்ளது. இச்சரணாலயத்தை படகுகள், சிற்றோடைகள், சிற்றாறுகள் மூலம் காணலாம். இப்பூங்காவினைப் பார்வையிட டிசம்பர் முதல் பிப்ரவரி வரை உள்ள காலம் ஏற்றதாகும்.

இப்பூங்காவில் புலிகள், சிறுத்தைகள், காட்டுப்பன்றிகள், நரிகள், பறக்கும் நரிகள், மீன் பிடிக்கும் பூனைகள், காட்டுப்பூனைகள், உப்பு நீர் முதலைகள், எறும்புண்ணிகள், பழுப்பு நிறக் கீரிகள், கங்கை டால்பின்கள், மரத்தவளைகள், பல்வேறு பறவையினங்கள், மாங்குரோவ் காடுகள் காணப்படுகின்றன. 1997ல் இவ்விடம் உலக பராம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.

 

மேற்குத் தொடர்ச்சி மலைகள்

இம்மலைகள் இந்தியாவின் தக்காணபீடபூமிப் பகுதியில் அரபிக் கடலுக்கு இணையாக வடக்கு தெற்காக அமைந்துள்ளன. இவை மொத்தம் 1,60,000 சதுர கி.மீ பரப்பளவில் பரவியுள்ளது.

இவற்றின் மொத்த நீளம் 1600 கி.மீ, அகலம் 100 கி.மீ, உயரம் 1200 மீ ஆகும். இம்மலைகள் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் அமைந்து ஏராளமான உயிரினங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது.

உலகில் பல்லுயிர் வளம் மிக்க எட்டு இடங்களில் இதுவும் ஒன்று. இங்கு 5000 – வகை பூக்கும் தாவரங்கள், 139 – வகை பாலூட்டிகள், 508 – வகை பறவையினங்கள், 176 – வகை இருவாழ்விகள் காணப்படுகின்றன. 2012ல் இவ்விடம் உலக பராம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.

 

ஹுமாயூனின் சமாதி

இந்நினைவுச் சின்னம் டெல்லியில் நிஜாமுதீன் கிழக்குப் பகுதியில் ஹுமாயூன் கட்டுவித்த புராணாக்கிலா என்னும் நகருக்கு அருகில் உள்ளது.

இச்சமாதியை ஹுமாயூனின் முதல் மனைவியான அமீதா பானு பேகம் என்பவர் 1565-1572 வரை கட்டிமுடித்தார். இதனை வடிவமைத்தவர் மிராத் மிர்சாக் கியாத் என்ற பாரசீகக் கலைஞர் ஆவார்.

சிவப்பு நிற மணற்கற்களைப் பயன்படுத்தி இக்கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இச்சமாதிக் கட்டிடத்தினுள் ஹுமாயூனின் சமாதி, ஹுமாயூனின் முதல் மனைவியான அமீதா பானு பேகத்தின் சமாதி, இரண்டாம் ஆலம்கீர் உள்ளிட்டோர்களின் சமாதிகளும் உள்ளன. 1993ல் இவ்விடம் உலக பராம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.

 

செங்கோட்டை வளாகம்

இந்நினைவுச்சின்னம் டெல்லியில் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது. இக்கோட்டை முகலாயப் பேரரசர் ஷாஜகானால் 1638ல் ஆரம்பிக்கப்பட்டு 1648ல் முடிக்கப்பட்டது.

இது அரசகுடும்பங்களின் வசிப்பிடமாக இருந்தது. செங்கோட்டையின் கட்டிட நேர்த்தி, அழகு மற்றும் செயல்திறன் முகலாயர்களின் திறனை வெளிப்படுத்துகிறது.

இக்கோட்டை யமுனை நதிக்கரையில் பெரும்பாலும் சுற்றிலும் சுவர்களைக் கொண்ட அகழியால் சூழப்பட்டுள்ளது. தற்போது இக்கோட்டை சிறந்த சுற்றுலாத் தளமாக உள்ளது.

இந்தியா சுதந்திரம் பெற்ற நாளான ஆகஸ்ட் 15 முதல் இந்திய பிரதமர் இங்கு கொடியேற்றி நாட்டு மக்களுக்கு இங்கு உரை நிகழ்த்துகிறார். 2007-ல் இவ்விடம் உலக பராம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.

 

சத்திரபதி சிவாஜி தொடருந்து நிலையம்

இந்நினைவுச்சின்னம் மும்பையிலுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க ரயில் நிலையம் ஆகும். இது 1889 முதல் 1897 வரை கட்டப்பட்டது. இந்நிலையம் பிரெட்டரிக் வில்லியம் ஸ்டீவென்ஸ் என்பவரால் வடிவமைக்கப்பட்டது.

இந்த இடம் மத்திய ரயில்வேயின் தலைமையிடமாக உள்ளது. இது இந்தியாவின் மிக பரபரப்பான இரயில் நிலையம் ஆகும். 2004-ல் இவ்விடம் உலக பராம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சூரியக் கோவில், கொனார்க்

இந்நினைவுச்சின்னம் ஒடிசா மாநிலத்தில் கொனார்க் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. இது கல்லில் செதுக்கப்பட்ட தேர் வடிவ சூரியக்கோயில் ஆகும். இதனைக் கட்டியவர் கீழைக் கங்கர் வமிசத்தைச் சேர்ந்த முதலாம் நரசிம்ம தேவன் ஆவார்.

இக்கோயில் சிவப்பு மணற்பாறைகளாலும், கருப்பு கிரானைட் கற்களாலும் கட்டப்பட்டது. இதனைக் கட்டுவிக்க 12 வருட அரசின் வருமானம் செலவு செய்யப்பட்டது.

இங்குள்ள சிலைகள் நுண்ணிய வேலைப்பாட்டுடன் மிக பிரசித்தி பெற்றவையாக உள்ளன. கடவுள்கள், நடனமாடும் மங்கையர், யானைகள், சிங்கங்கள், குதிரைகள் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. 1984ல் இவ்விடம் உலக பராம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.

 

ஜந்தர் மந்தர், ஜெய்ப்பூர்

இந்நினைவுச் சின்னம் இராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கட்டப்பட்ட வானவியற் கருவிகளின் தொகுப்பாகும். இவற்றை இரண்டாம் ஜெய்சிங் மகாராஜா என்பவர் கட்டினார். தில்லி, ஜெய்ப்பூர் உட்பட‌ ஐந்து இடங்களில் இவற்றை கட்டுவித்தார். ஆனால் ஜெய்ப்பூரில் உள்ள வானவிற் ஆய்வுக் கூடமே பெரியது.

ஜந்தர் மந்தர் என்ற சொல்லுக்கு கணிப்பு கருவி என்பது பொருளாகும். நேரத்தைக் கணக்கிடுவது, கிரகணங்களை முன்னறிவிப்பது, கோள்களின் சாய்மானங்களை அறிவது போன்றவற்றிக்கான வடிவியற் கருவிகளைக் கொண்டுள்ளது. 2010ல் இவ்விடம் உலக பராம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.

 

ஆக்ரா கோட்டை

இந்நினைவுச் சின்னம் உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள முகலாயர் காலத்துக் கோட்டையாகும். இக்கோட்டையில் பாபர், அக்பர், ஷாஜகான், ஒளரங்கசீப் முதலான மொகலாயப் பேரரசர்கள் வசித்தனர்.

முகலாயர்களின் தலைநகராக விளங்கியதோடு இது இந்தியாவில் உள்ள கோட்டைகளில் மிக முக்கியமானது. இங்கு தான் மிகப்பெரிய நிதிக் கருவூலமும், நாணயத் தயாரிப்பு இடமும் உள்ளன. ஆரம்பத்தில் செங்கற்காலால் ஆன இக்கோட்டை ராசபுத்திரர்கள் வசம் இருந்தது.

பின் காசுண வைத்தியப் படைகளால் கைபற்றப்பட்டு பின் லோடி வம்சத்தினரின் வசமாகி, முகலாய மன்னர் பாபரால் கைபற்றப்பட்டது. இக்கோட்டை அக்பர் மற்றும் ஷாஜகானால் சீர்செய்யப்பட்டது.

ஷாஜகான் தனது இறுதிக்காலத்தில் இக்கோட்டையிலேயே சிறைவைக்கப்பட்டார். இக்கோட்டை தாஜ்மாகாலுக்கு வடகிழக்கில் 2.5 கி.மீ தொலைவில் உள்ளது. 1983-ல் இவ்விடம் உலக பராம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.

 

பதேபூர்சிக்ரி

பதேபூர்சிக்ரி உத்திரபிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரமாகும். பேரரசர் அக்பர் இந்நகரை 1570-ல் உருவாக்கினார். 1571 முதல் 1585 வரை அக்பரின் தலைநகரமாக விளங்கியது.

பதேபூர் என்னும் சொல்லுக்கு வெற்றி என்பது பொருளாகும். சித்தூர், ரன்தம்பூர் கோட்டைகளை கைப்பற்றியதன் மூலம் பெற்ற வெற்றியின் நினைவாக இந்நகர் உருவாக்கப்பட்டது.

அக்பரின் ஆக்கத்திறன் மற்றும் அழகுணர்வினை இங்குள்ள அரண்மனைகளும், மண்டபங்களும் பிரதிபலிக்கின்றன. 1986ல் இவ்விடம் உலக பராம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.

 

தாஜ்மகால்

இந்நினைவுச் சின்னம் உத்திரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது. ஏழு உலக அதிசயங்களில் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை முகலாய அரசனான ஷாஜகான் தன் காதல் மனைவியான மும்தாஜின் நினைவாக 1631ல் ஆரம்பித்து 1648ல் கட்டிமுடித்தார். உலகப்புகழ் பெற்ற இச்சின்னம் முகலாய கட்டிடக்கலையின் சிறப்பை எடுத்துக் கூறுவதாக உள்ளது.

எனவே இது முஸ்லீம் கட்டிடக்கலையின் பொன்னாபரணம் என்று புகழப்படுகிறது. 1983ல் இவ்விடம் உலக பராம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.

 

இந்திய மலைப்பாதை தொடருந்துகள்

இந்நினைவுச்சின்னங்களில் மொத்தம் ஆறு மலைப்பாதை தொடருந்துகள் உள்ளன. டார்ஜிலிங் இமாலயன் இரயில்வே, கால்கா-ஷிம்லா இரயில்வே, காங்க்ரா பள்ளத்தாக்கு இரயில்வே, காஷ்மீர் இரயில்வே, நீலகிரி மலை இரயில் பாதை, மாதெரன் மலை இரயில் பாதை ஆகியவை இச்சின்னங்களில் அடங்கும்.

இவை 19,20 –ம் நூற்றாண்டைச் சார்ந்தவை ஆகும். இந்த மலை இரயில் பாதைகள் நல்ல நிலையில் இயங்குவதோடு அடிவாரத்தில் உள்ள முக்கிய இடங்களை இணைக்கின்றன.

சிறந்த தொழில் நுட்பம் மற்றும் கட்டுமானத்திற்கு எடுத்துக்காட்டாக உள்ளன. 2008ல் இவ்விடங்கள் உலக பராம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டன.

இந்தியாவில் உள்ள உலக பராம்பரியச் சின்னங்கள் அனைத்தையும் பாதுகாக்க வேண்டியது நம் கடமை.

– வ.முனீஸ்வரன்

 

Comments are closed.