அணில்

வாலைத் தூக்கிக் கத்திக் கத்தி

மரத்தில் பாயும் அணிலே – ‍பழுத்த‌

மரத்தில் பாயும் அணிலே

 

காலைத் தூக்கிக் கோதிக் கோதிக்

கடிப்பது என்ன அணிலே – நீயும்

கடிப்பது என்ன அணிலே

 

வெள்ள ரிக்காய்த் தோலைப் போல‌

வெள்ளைக் கோடு முதுகில் – மூன்று

வெள்ளைக் கோடு முதுகில்

 

பிள்ளை அணிலே உனக்குத் தீட்டிப்

பிறக்க விட்டார் யாரோ  – அழகு

சிறக்க விட்டார் யாரோ

 

பழுக்கும் முன்னர்ச் செங்காய் கோதும்

பண்பை எங்குக் கற்றாய் – கெட்ட

பண்பை எங்குக் கற்றாய்

 

இழுத்துப் பறித்துப் போடு செங்காய்

எடுத்துத் தின்பேன் அணிலே – நானும்

எடுத்துத் தின்பேன் அணிலே

– வாணிதாசன்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.