அரிவாட்டாய நாயனார்

அரிவாட்டாய நாயனார் சிவவழிபாட்டுக்குரிய பொருட்களை தவறி கீழே விட்டதால், சிவவழிபாடு தடைபட்டதாகக் கருதி அரிவாளால் தன்னுடைய கண்டத்தை அறுத்த வேளாளர்.

அரிவாட்டாய நாயானார் சோழ நாட்டில் இருந்த கணமங்கலம் என்னும் ஊரில் வேளாளராக வாழ்ந்தவர். இவருடைய இயற்பெயர் தாயனார் என்பதாகும். இவரும் இவர் மனைவியும் சிவபெருமானிடம் மாறாத அன்பு கொண்டிருந்தனர்.

கணமங்கலம் தற்போது தண்டலைச்சேரி என்றழைக்கப்படுகிறது. இது திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் அமைந்துள்ளது.

நல்லொழுக்கத்தில் சிறந்தவரும், செல்வந்தருமான இவர் சிவதொண்டுகள் பல செய்து வந்தார். கணமங்கலத்தில் கோவில் கொண்டிருந்த நீள்நெறி நாதருக்கு செந்நெல் அரிசி, செங்கீரை, மாவடு ஆகியவற்றை படையல் பொருட்களாக படைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

இவர் இறைவனாருக்கு படையல் பொருட்களை படைப்பதை பெறும் பேறாகக் கருதினார். எந்த சூழ்நிலையிலும் சிவானருக்கு படையல் பொருட்கள் படைப்பதை தவற விடக் கூடாது என்று தனக்குள் உறுதி கொண்டிருந்தார்.

தாயனார் இறைவன் மீது கொண்டிருந்த பேரன்பினையும், அவர் தம் உறுதியையும் உலகிற்கு எடுத்துரைக்க சிவனார் விருப்பம் கொண்டார்.

இறைவனாரின் விருப்பப்படி தாயனாரிடம் இருந்த செல்வ வளம் குறையத் தொடங்கியது. எனினும் தாயனார் நீள்நெறி நாதருக்கு செந்நெல் அரிசி, செங்கீரை, மாவடு ஆகியவற்றை தவறாது படைத்து வந்தார்.

கூலியாட்களை கொண்டு வேளாண்மை செய்து வந்த நாயனார் தன்னுடைய செல்வ வளம் அழிந்ததால், நாளடைவில் வேளாண்மை கூலியாக கூலி வேலைக்குச் சென்றார். அப்போதும் அவர் தம்முடைய படையல் வழிபாட்டை நிறுத்தவில்லை.

வேளாண்மை கூலியாக வேலை செய்ததற்கு கூலியாக தாயானார் செந்நெல்லையும், கார்நெல்லையும் பெற்று வந்தார். கூலியாகப் பெற்ற செந்நெல்லை இறைவனாருக்கும், கார்நெல்லை தம்முடைய பயன்பாட்டிற்கும் பயன்படுத்தினார் தாயனார்.

இறைவனின் திருவருளால் கார்நெல்லிற்குப் பதிலாக செந்நெல்லே அப்பகுதியில் விளைந்தது. ஆதலால் தாயனாருக்கும் கூலியாக செந்நெல்லே வழங்கப்பட்டது. கூலியாக பெறப்பட்ட செந்நெல் முழுவதையும் இறைவனாருக்கே படையலிட்டார்.

‘என்னுடைய கூலி முழுதும் செந்நெல்லாகவே வழங்கப்பட்டதால் படையல் வழிபாடு தடைபாடாது. என்னே இறைவனின் கருணை.’ என்று மனதிற்குள் மகிழ்ந்தார்.

கார்நெல் கிடைக்காததால் தாயனாரின் மனைவியார் சோற்றிற்கு அரிசி இல்லாமல் வீட்டுத் தோட்டத்தில் இருந்த கீரைகளை மட்டுமே உணவாக்கினார். அதனை மட்டும் உண்டுவிட்டு தம்பதியர் இருவரும் படையலிடும் தொண்டினைத் தொடர்ந்தனர்.

நாளடைவில் கீரைகளும் இல்லாது போகவே தண்ணீரை மட்டும் அருந்தி படையல் தொண்டினைத் தம்பதியர் தொடர்ந்தனர்.

ஒருநாள் செந்நெல் அரிசி, செங்கீரை, மாவடு ஆகியவற்றை தலையில் வைத்துக் கொண்டு, நீள்நெறி நாதர் கோவிலை நோக்கிச் செல்லத் தொடங்கினார் தாயனார்.

அவருடைய மனைவியார் மண்பானையில் பஞ்சகவ்வியத்தை எடுத்துக் கொண்டு தாயனாரைப் பின் தொடர்ந்தார்.

உணவின்றி மெலிந்த தேகம் கொண்டிருந்த தாயனா,ர் பசி மயக்கத்தால் நிலப்பிளவில் கால் தட்டி கீழே விழப் போனார். தாயனாரின் மனைவியார் அவரை தம்முடைய கையால் தாங்கிப் பிடித்தார்.

எனினும் இறைவனின் படையல் பொருட்கள் நிலத்தில் சிந்தின. அதனைக் கண்டதும் திகைத்த தாயனார் ‘இனி கோவிலுக்குச் சென்று என்ன செய்வது?’ என்று எண்ணினார்.

பின்னர் ஒருமுடிவுக்கு வந்தவராக ‘இறைவன் இல்லாத இடம் ஏது? எங்கும் அவன் நீக்கமற நிறைந்து இருக்கிறான். ஆவன் திருவுள்ளம் கொண்ட இவ்விடத்தில் உள்ள பொருட்களைப் படையலாக ஏற்றுக் கொள்ளலாம்.

அப்படி இறைவன் ஏற்றுக் கொள்ளவதற்கு நான் புண்ணியம் செய்து இருக்க வேண்டும். நான் விரும்புவதற்காக இறைவன் இவற்றை படையலாக ஏற்றுக் கொள்வனா? இனி நான் உயிர் வாழ்வதில் அர்த்தமில்லை’ என்று எண்ணி இடுப்பில் சொருகியிருந்த கதிர் அரிவாளால் தன்னுடைய கழுத்தை அறுக்கத் தொடங்கினார்.

அப்போது பிளவுபட்ட நிலத்திலிருந்து வெண்ணீறும், உருத்திராட்சமும் அணிந்த இறைவனாரின் திருக்கை வெளிப்பட்டு தாயனாரின் கையைத் தடுத்தது. மாவடுவினை கடிப்பதால் உண்டாகும் ஓசையும் பிளவிலிருந்து கேட்டது.

இறைவனின் திருக்கரம் பட்டதால் தாயனாரின் பிணிகள் முழுவதும் நீக்கியது. நடந்தவைகளைக் கண்ட தாயனாரும், அவர் தம் மனைவியாரும் இறைவனின் கருணையை எண்ணி வியந்தனர்.

அப்போது இடப வாகனத்தில் உமையம்மையுடன் காட்சியளித்த சிவனார் ‘உன்னுடைய அன்பினைக் கண்டு வியந்தோம். நீ உன்னுடைய மனைவியுடன் சிவலோகத்தை அடைவாயாக’ என்று அருளினார்.

இறைவன் இவ்விடத்தில் அமுது செய்யும் பேற்றினை நான் பெறவில்லையே என்றெண்ணி அரிவாளால் தன்னுடைய கழுத்தை அறுக்க முயன்றதால் தாயனார் அரிவாள் தாய நாயனார் என்ற அழைப்பட்டார். நாளடைவில் அதுவே அரிவாட்டாய நாயனார் என்றானது.

அரிவாட்டய நாயனார் குருபூஜை தை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

தவறாது கடைபிடித்து வந்த சிவபாட்டிற்குரிய பொருட்களை தவற விட்டதால் தன் உயிரை மாய்த்துக் கொள்ள துணிந்த அரிவாட்டாய நாயனாரை ,சுந்தரர் திருத்தொண்ட தொகையில்எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன்‘ என்று வியக்கிறார்.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.