சொல் ஏர் உழவர் தினம் (ஆசிரியர் தினம்) கவிதை

வகுப்பறை நுழைவாயிலின் இருபுறத்தில்

உட்புறம் சுமையாய் இருந்தது

வெளிப்புறம் சுகமாய் இருந்தது!

உந்தன் வருகையைக் கண்டால் அச்சத்தில்

உள்மனம் படபடக்கும்…

 

உந்தன் கரப்பிடியில் கட்டுண்ட பிரம்பைக் கண்டால்

கடும் சுரமும் தொத்திக் கொள்ளும்!

விளையாட்டுப் பாடவேளை யென்றால்

விடுமுறையாய் மனம் பூரிப்படையும்…

 

நீயுரைத்த அறிவுரையில் எந்தன்

செவியேறிய வார்த்தைகள் சிலவே!

வார்த்தை குறைவென்றாலும் அதன்

வலிமை குறையவில்லை…

 

நான் தவறிழைத்ததால் தண்டனையென்று கால்கடுக்க

நிற்கவைத்தாய் வகுப்பறைக்கு வெளியே!

எந்தன் தவறை நானுணரவோ தவறிழைக்காமலேயே

தண்டணை யேற்றாய் வகுப்பறைக்கு உள்ளே…

 

வாழ்வின் பாடத்தை அன்றே

வகுப்பறையில் எடுத்துரைத்தாய்!

எதுவும் நம் கையில் இருக்கும் போது

அதன் மதிப்பு தெரிவதில்லை!

அதனை விட்டு நீங்கும் போதுதான்

அதன் மகத்துவம் புரியுமென்று…

 

அன்று நீர் கற்பித்த

“கல்வி தரத்தின்” பிரதிபலிப்பு …

இன்று ஒருசிலரைக் கண்டால்

சிரம் தாழ்த்தி சலிப்புடன் செல்ல வைக்கிறது!

இன்னும் ஒருசிலரைக் கண்டால்

சிரம் நிமிர்ந்து பண்புடன் பணிய வைக்கிறது…

 

உந்தன் பிரம்படி தான்

எந்தன் பிற்கால வாழ்வின் அடித்தளம்

என்பதைப் பிறகுணர்ந்தேன்…

 

என்றும் ஓர் மாணவனாய்

எந்தன் ஆசான்களுக்கு

சொல் ஏர் உழவர்  தின (ஆசிரியர் தின)

வணக்கங்களை உரித்தாக்குகிறேன்.

க.வடிவேலு
ஆசிரியர் பயிற்றுநர்
காட்பாடி
6374836353

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.