கடற்கரை அழகினைப் பாடிடுவோம் – கடற்
காற்று தரும்சுகம் நாடிடுவோம்
படர்மணற் பரப்பினில் கால்பதித்தே – பிணி
பறந்திட உடல்வளம் கூடிடுவோம்
வானகம் கடல்தொடும் தனியழகும் – கடல்
வாழ்ந்திடும் மீன்களின் களிப்பழகும்
மீனவர் படகிடும் துடுப்பழகும் – நிறை
வேடிக்கைக் காட்டும் கடற்கரையே
முதியவர் இளையவர் சிறுவர்களும் – அவர்
உடன்வரும் துணையுடன் வலம்வருவார்
புதுமணல் வடிவுற வீடமைத்தே – இன்பம்
பொங்கிட மழலையர் ஆர்ப்பாரிப்பார்
தோண்டி மணற்கிண றமைத்திடுவார் – சிலர்
சோர்வறப் பந்துகள் வீசிக்கொள்வார்
தாண்டிடும் அலைகளின் தலைமேலே – நின்று
தாண்டவம் ஆடிட சிலர்முனைவார்
கரைதனில் ஏறிடக் கைநீட்டும் – அலை
காளையின் வேகத்தில் பாய்ந்துவரும்
நுரையெனும் படமெடுத் தாடிவந்தே – அலை
நொடியினில் பாம்பெனச் சீறிவிடும்
நீந்திடும் குழந்தைபோல் தவழ்ந்துவந்தே – அலை
நெருங்கிட அடிமணல் கிளர்ந்திழுக்கும்
ஊர்ந்து நகர்ந்திங்கு வருவதுபோல் – அலை
மோதி இடித்து வியப்பளிக்கும்
இமயவரம்பன்
மிக நன்று. கடற்கரையும் அங்குள்ள பறவைகளும் எனக்கு என்றுமே நெஞ்சூறும் அனுபவம் அளிக்கும். மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
ஆமாம், கடல் அலைகள் துள்ளி வரும் அழகும், அலை எழுப்பும் ஓசையும் கண்ணுக்கும் செவிக்கும் பேரினிமை.
தங்கள் கருத்தளிப்பிற்கு மிக்க நன்றி சந்திரன்!
சந்திர மௌலீஸ்வரன் ம கி,
16 அக்டோபர் 2021-சனிக்கிழமை.
மனமார்ந்த பாராட்டுக்கள், திரு. இமய வரம்பன்!
உங்களுடைய “களிப்பூட்டும் கடற்கரை” யின் சந்தம் மிகவும் நன்றாக உள்ளது.
“தந்தனத் தந்தனத் தானனன்னா – தனத்,
தானன்னத் தானன்னத் தானதன்னா!”
கேட்டு வெகு நீண்ட காலம் ஆகிவிட்டது!
பதினெட்டுப் பேரைச் சேர்த்துக் கொண்டு ஒரு பாட்டம் வட்டக்கும்மி ஆடலாம் என ஆசை தோன்றுமளவில் உள்ளது, இந்தப் பா! நல்ல சந்தப்பா!
மிக்க நன்றி, வணக்கம்!