கார ப‌ணியாரம் செய்வது எப்படி?

கார ப‌ணியாரம் ஒரு சிறந்த சிற்றுண்டியாகும். இனிப்புக் குழிப்பணியாரமே பொதுவாக குழிப்பணியாரம் என்றழைக்கப்படுகிறது. ஆனால் குழிப்பணியாரத்தைக் காரமாகவும் செய்யலாம். அது ஒரு தனிச்சுவையுடையது.

 

கார ப‌ணியாரம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

பச்சரிசி – 200 கிராம்

புழுங்கல் அரிசி – 200 கிராம்

உளுந்தம்பருப்பு – 1 மேஜைக்கரண்டி

வெந்தயம் – ½ மேஜைக்கண்டி

சின்ன வெங்காயம் – 25 கிராம்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

பச்சை மிளகாய் – 2 எண்ணம்

சீரகம் – ஒரு ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

நல்ல எண்ணெய் – சிறிதளவு

 

செய்முறை

முதலில் பச்சரிசி, புழுங்கலரிசி, உளுந்தம் பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை சுமார் 3 மணி நேரம் ஊற வைக்கவும்.

குழிப்பணியாரம் செய்யத் தேவையான பொருட்கள்
குழிப்பணியாரம் செய்யத் தேவையான பொருட்கள்

 

பின் அதனை கிரைண்டரில் இட்டு இட்லி மாவு பதத்தில் ஆட்டிக் கொள்ளவும். அதனுடன் சிறிதளவு உப்பினைச் சேர்த்து பிசைந்து வைக்கவும். பின் அதனை சுமார் ஆறிலிருந்து ஏழு மணி நேரம் புளிக்க வைக்கவும்.

அரைத்த மாவு
அரைத்த மாவு

 

சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும். பின் அதனை சதுரங்களாக வெட்டிக் கொள்ளவும். பச்சை மிளகாயை பொடியாக அரிந்து கொள்ளவும்.

வாணலியில் சிறிது எண்ணை விட்டு நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் சீரகம் சேர்த்து வதக்கவும். சின்ன வெங்காயம் நிறம் மாறத் தொடங்கியவுடன் அடுப்பை அணைத்து விடவும்.

வெங்காயம், பச்சை மிளகாய் வதக்கும்போது
வெங்காயம், பச்சை மிளகாய் வதக்கும்போது

 

பின் வதக்கிய கலவையை ஆட்டிப் புளிக்க வைத்துள்ள மாவில் கொட்டிக் கிளறவும்.

மாவில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்க்கும்போது
மாவில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்க்கும்போது

 

பின் தேவையான அளவு உப்பினை மாவுக் கலவையில் சேர்க்கவும். பணியாரத்திற்கு மாவு தயார்.

சரியான பதத்தில் மாவு
சரியான பதத்தில் மாவு

 

அடுப்பில் பணியாரக் கல்லை வைத்து சூடேறியதும் குழிகளில் சிறிது எண்ணெய் தடவவும். பின் குழியின் முக்கால் பாகத்திற்கு மாவினை ஊற்றவும்.

கார ப‌ணியாரம் வேகும்போது
கார ப‌ணியாரம் வேகும்போது

 

மாவானது ஓரங்களில் வெந்தவுடன் குச்சியைக் கொண்டு திருப்பிப் போடவும்.

ஒருபுறம் வெந்த கார ப‌ணியாரம்
ஒருபுறம் வெந்த கார ப‌ணியாரம்

 

பின்புறமும் வெந்தவுடன் பணியாரங்களை எடுத்து விடவும். சுவையான கார ப‌ணியாரம் தயார்.

சுவையான கார ப‌ணியாரம்
சுவையான கார ப‌ணியாரம்

 

இதனை குழந்தைகள் விரும்பி உண்பர். காலை டிபனாகவும் இதனை தேங்காய் சட்னியுடன் உண்ண சுவையாக இருக்கும்.

 

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் நறுக்கிய கொத்தமல்லி இலைகளை மாவுடன் கலந்தும் பணியாரம் தயார் செய்யலாம்.

பணியாரங்கள் கருகாமல் இருக்க அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.

ஜான்சிராணி வேலாயுதம்

 

2 Replies to “கார ப‌ணியாரம் செய்வது எப்படி?”

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.