சுவைமிகு சுடர்தமிழ்

ஆதியில் நின்ற அருமொழியாம் – அணி

ஆயிரம் கொண்ட தனிமொழியாம்

ஓதிடும் செம்மொழி யாவினுமே – புகழ்

ஓங்கி இருக்கும் தமிழ்மொழியே!

அறிவு சிறந்திட நெறியருளும் – அன்பு

ஆர்ந்த வழிசொலும் நூல்கள்தரும்

செறிவு மிகுந்த பொருளுணர்த்தும் – பல

தீங்கவி யாக்கித் தெளிவளிக்கும்

சோர்வுறும் போது துணிவுதரும் – துயர்

சூழ்ந்திடும் போது துணையிருக்கும்

ஆர்வம் உடையவர்க் காற்றல்தந்தே – அவர்க்கு

அருங்கவி பாடும் வலிமைதரும்

விருத்தம் எனும்சுவை விருந்தளித்தே – உயர்

வெண்பா எனும்நறும் தேன்பொழிந்து

பொருந்தும் கலியினில் பண்ணமைத்தே – புகழ்

புரிந்து மிளிர்பவள் தமிழன்னை

சிந்து கவிதையில் களிநடனம் – ஆடிச்

சிந்தை களிப்புறச் செய்திடுவாள்

சந்தம் மிகுந்திடும் பள்ளுச்சொல்லித் – தினத்

தாளத் திசைமழை பெய்திடுவாள்

கன்னல் கரும்பின் சுவையதனை – வெல்லும்

காதல் சுவையுடை காவியங்கள்

அன்னை எமக்களித் தேற்றமுற்றாள் – நெஞ்சை

ஆளும் தமிழமு தூற்றிவிட்டாள்!

இமயவரம்பன்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.