துரோணாச்சார்யா விருது

துரோணாச்சார்யா விருது இந்திய அரசால் தேசிய அளவில் விளையாட்டுத் துறையில் வீரர்களின் முழுத்திறனை வெளிக்கொணரும் சிறந்த விளையாட்டு பயிற்றுனர்களை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படும் மிகப் பெரிய விருது ஆகும்.

இவ்விருது இந்திய இதிகாசக் கதையான மகாபாரதத்தில் வரும் பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களுக்கு ஆசிரியராக விளங்கிய துரோணாச்சார்யாரின் நினைவால் வழங்கப்படுகிறது.

துரோணாச்சார்யா விருது தனிநபர் விளையாட்டு மற்றும் குழு விளையாட்டு ஆகியவற்றில் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் பயிற்றுனர்களுக்கு வழங்கப்படுகிறது.

இவ்விருது மத்திய அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தால் வழங்கப்படுகிறது. இவ்விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவோர் மத்திய அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட குழுவினரால் தேர்ந்தெடுக்கப்படுவர்.

இவ்விருது ஒரு பதக்கம், பாராட்டுச் சான்றிதழ், சிலைவடிவம், அலங்கார உடை மற்றும் பணமுடிப்பைக் கொண்டுள்ளது. பணமுடிப்பானது ஐந்து இலட்சங்கள் ஆகும்.

இவ்விருதிற்கான பரிந்துரைப்போர் பட்டியல் விருது வழங்கும் குழுவினரிடம் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 30-க்குள் வழங்கப்பட வேண்டும்.

இவ்விருது ஒலிம்பிக் போட்டிகளில் உள்ள விளையாட்டுப் பிரிவுகளின் பயிற்றுனர்கள், ஒலிம்பிக் போட்டிகளில் இல்லாத இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுப் பிரிவுகளின் பயிற்றுனர்கள் மற்றும் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட உள்நாட்டு விளையாட்டுப் பிரிவுகளின் பயிற்றுனர்கள் ஆகியோர்களுக்கு வழங்கப்படுகிறது. இதுவரையிலும் சுமார் 95 விளையாட்டு பயிற்றுனர்கள்  இவ்விருதினைப் பெற்றுள்ளனர்.

தடகளம், மல்யுத்தம், குத்துச்சண்டை, சதுரங்கம், கிரிக்கெட், கால்பந்து, கைப்பந்து, பில்லியட்ஸ் மற்றும் ஸ்நூக்கர், பளுத்தூக்குதல், இறகுப்பந்தாட்டம், ஹாக்கி, கோ-கோ, துப்பாக்கி சுடுதல், கபடி, யாட்சிங், ஸ்குவாஷ், படகுப்பந்தயம், வில்வித்தை, ஜிம்னாஸ்டிக், டேபிள் டென்னிஸ், ஜூடோ மற்றும் நீச்சல் போன்ற விளையாட்டுகளின் பயிற்றுனர்களுக்கு இதுவரையிலும் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

இவ்விருதினைப் பெற்ற முதல் விளையாட்டு பயிற்றுனர்கள் ஓ.எம். நம்பியார், ஓம் பிரகாஷ் பரத்வாஜ், பாலச்சந்திர பாஸ்கர் பாக்வட் ஆகியோர் ஆவார். இவர்கள் முறையே தடகளம், குத்துச்சண்டை, மல்யுத்தம் ஆகிய விளையாட்டுகளுக்காக இவ்விருதினைப் பெற்றனர்.

 

இவ்விருது வழங்குவதற்கு உள்ள நியதிகள்

இவ்விருதிற்கு பயிற்றுனர்கள் நான்காண்டுகள் முழுநேரமாகவோ அல்லது பகுதிநேரமாகவோ பயிற்றுனராப் பணிபுரிந்து இருக்க வேண்டும்.

விளையாட்டுப் போட்டிகளில் விளையாட்டு வீரர்களின் சிறந்த சாதனைகளை வெளிக்கொணர்ந்த செயல்பாடுகளின் சாதனைகளானது விருது வழங்குவதற்கு முந்தைய ஆண்டில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

வாழ்நாள் பயிற்றுனர் என்பதற்கு 20 வருடங்களுக்கு மேல் பயிற்சி அளித்து சிறந்த சாதனை செய்த விளையாட்டு வீரர்களை உருவாக்கியவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவார்கள்.

சர்வதேச ஊக்க மருந்து தடுப்பு இயக்கத்தால் தடை செய்யப்பட்ட மருந்துகளை விளையாட்டு வீரர்கள் உட்கொள்ள ஊக்கப்படுத்தியதாக ஏற்பட்ட குற்றசாட்டுகளுக்கான விசாரணை நடைபெற்றுக் கொண்டிருப்பவர்களும், தண்டனை பெற்றவர்களும் இவ்விருதினை பெறுவதற்கு தகுதியற்றோர் ஆவர்.

ஏற்கனவே தியான்சந்த் விருது பெற்றோர் இவ்விருதினைப் பெறத் தகுதி நீக்கம் செய்யப்படுவர்.

இவ்விருதினை ஒரு விளையாட்டுவீரர் தனது வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே பெற இயலும்.

இவ்விருது ஒருவரின் இறப்புக்குப் பின்னரும் வழங்கப்படலாம்.
இவ்விருது வழங்கும் விழாவின்போது விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் மட்டுமே விருதினை வாங்க இயலும்.

விருது வழங்கும் விழாவிற்கு வரவியலாத தேர்ந்தெடுக்கப்பட்ட நபருக்கான விருது இந்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரால் பின்னர் வழங்கப்படும்.

இவ்விருதிற்கான விதிமுறைகளை இந்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மட்டுமே தளர்வு செய்ய இயலும். ஆனால் விதி தளர்விற்கான தகுந்த காரணங்கள் எழுத்துப்பூர்வமாக அமைச்சரால் தெரிவிக்கப்பட வேண்டும்.

 

இவ்விருதிற்கான பரிந்துரைகள்

இவ்விருதிற்கான பரிந்துரைகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு கூட்டமைப்புகள், இந்திய ஒலிம்பிக் சங்கம், இந்திய விளையாட்டு ஆணையம், விளையாட்டு மேம்பாடு மற்றும் கட்டுப்பாட்டு வாரியங்கள், மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் ஆகியோர்களிடமிருந்து பெறப்படுகின்றன.

மேற்கூறியவர்கள் ஒவ்வொரு வருடமும் இரண்டு நபர்களை மட்டுமே பரிந்துரை செய்ய இயலும். கிரிக்கெட்டை பொறுத்தவரையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரை செய்ய இயலும்.

இவ்விருதினை முந்தைய ஆண்டு பெற்றுள்ள விளையாட்டு வீரர், முந்தைய ஆண்டில் அர்ஜூனா விருது, துரோணாச்சர்யார் விருது, ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்றவர்கள் தங்கள் விளையாட்டுப்பிரிவிவைச் சேர்ந்த தகுதியான ஒரு விளையாட்டு பயிற்றுனரைப் பரிந்துரைக்கலாம்.

பரிந்துரைகள் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 30 அல்லது ஏப்ரல் மாத கடைசி வேலை நாளுக்குள் அனுப்பப்பட வேண்டும்.

 

இவ்விருதிற்கான தேர்வு முறை

இவ்விருதிற்கான பரிந்துரைகள் அனைத்தும் இந்திய விளையாட்டு ஆணையம் மற்றும் தேசிய ஊக்க மருந்து தடுப்பு நிறுவனம் ஆகியவற்றிற்கு அனுப்பப்பட்டு சரிபார்க்கப்படும்.

பின் விளையாட்டு ஆணையத்தின் துணைச் செயலாளர் / இயக்குநர் மற்றும் இணை செயலாளர், இந்திய விளையாட்டு ஆணையத்தின் இயக்குநர் ஆகியோரைக் கொண்ட குழுவினரால் சரிபார்த்து பரிசோதிக்கப்படும்.

பின் சரியான பரிந்துரைகள் இந்திய அரசினால் அமைக்கப்பட்ட பதினோரு நபர்கள் அடங்கிய தேர்வுக்குழுவினருக்கு அனுப்பப்படும். இக்குழுவில் ஒவ்வொரு விளையாட்டுப் பிரிவைச் சேர்ந்த ஒரு நபர் மட்டுமே இடம் பெறுவர். தேர்வுக்குழு உறுப்பினர்களின் விவரம்

1. இந்திய அரசால் அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் 1

2. மாண்புமிகு விளையாட்டு வீரர்கள் (ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்கள், ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்றவர்கள், அர்ஜூனா விருது பெற்றவர்கள்) 2

3.பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளின் கீழ் ஏற்கனவே துரோணாச்சார்யா விருது பெற்றவர்கள் 3

4. விளையாட்டு பத்திரிக்கையாளர்கள் / விளையாட்டு நிபுணர்கள் அல்லது வர்ணனையாளர்கள் 2

5. விளையாட்டு நிர்வாகி 1

6. இந்திய விளையாட்டு ஆணையத்தின் பொது இயக்குநர் 1

7. விளையாட்டு ஆணைய இணை செயலாளர் 1

மொத்தம் 11

1985-ல் இவ்விருது வழங்கும் வழக்கம் நடைமுறைபடுத்தப்பட்டது. தேர்வுக்குழு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களின் பெயரினை இந்திய இளைஞர்நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்திடம் ஒப்படைக்கும். விருது வழங்கும் இடம் மற்றும் நாளானது இந்திய அரசால் அறிவிக்கப்படும்.

ஒரு வருடத்தில் அதிகபட்சம் தகுதியான ஐந்து நபருக்கு மட்டுமே இவ்விருது வழங்கப்பட வேண்டும் என்ற விதி வகுக்கப்பட்டுள்ளது. எனினும் இவ்விதி சிலநேரங்களில் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தளர்த்தப்படுகிறது. அதிகபட்சமாக 2012-ஆம் ஆண்டு எட்டு இந்திய விளையாட்டு பயிற்றுனர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

– வ.முனீஸ்வரன்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.