பித்துக் கொண்ட மனிதர்கள் மாற வேணுமே

ஒத்தைப்பனை ஓரத்துல நித்தம் ஒரு சத்தம் கேட்கும்

அது என்னன்னு இப்ப நாம பாக்கலாமா? ‍- அந்த‌

சத்தத்துக்கு ஏத்த தாளம் போடலாமா?

சந்தோசமாக அங்க தூங்கலாமா?

 

கத்துங்குருவி சத்தம் எங்க போச்சு? ‍- அந்த‌

கானாங் குயிலுக் கூட்டம் என்ன ஆச்சு?

அத்துவான காடும் ஏன் அமைதியாச்சு? – அதில்

ஆடிப்பாடும் பறவை ஏன் முடமாகிப் போச்சு?

 

மெல்ல ஓடும் ஆறும் இப்போ எங்க போச்சு? – அதில்

மீன்கள் விளையாடிடுமே! என்ன ஆச்சு?

முள்நிறைஞ்ச இண்டங்காடு மொட்டையாச்சு – இப்போ

மொத்தமாக காடு ஏன் மலடாச்சு?

 

நன்னாரி வாசனையே அத்து போச்சு – சின்ன

நாயுருவி செடியும் காஞ்சு போச்சு

பொன்வண்டு கூட்டத்தோடு அழிஞ்சிடுச்சு – இங்க‌

பூக்களோடு எருக்கே நிறைஞ்சிருக்கு

 

ஒத்தப்பனை வெத்துப்பனை ஆயிருச்சே

ஓயாத பாட்டு சத்தம் நின்னு போச்சே

மொத்தத்துல இத்தனையும் நாம் பெறவே

முழுபூமி எங்கும் நோயொன்று பரவிடனும்

 

சத்தமின்றி இயற்கையும் வெல்ல வேணுமே – நம்

சந்ததிக்கு இயற்கை மீண்டும் வேணுமே

பித்துக் கொண்ட மனிதர்கள் மாற வேணுமே – அதுக்கு

புது நோயொன்று பரவிட வேண்டும் உண்மையே

இராசபாளையம் முருகேசன்

கைபேசி: 9865802942

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.