பிரண்டை சூப் செய்வது எப்படி?

பிரண்டை சூப் ஆரோக்கியமானதும், அவசியமானதுமான சூப். பிரண்டை குறுக்கு வலி, கைகால் வலி, எலும்பு முறிவு ஆகியவற்றிற்குச் சிறந்த மருந்து.

எலும்புகளை பலப்படுத்துவதோடு முறிந்த எலும்புகளை எளிதில் குணமாக்கும் தன்மை கொண்டதால் பிரண்டை வஜ்ரவல்லி என்றும் அழைக்கப்படுகிறது.

பிரண்டைத் தண்டை சுத்தம் செய்யும் போது மேல் தோல் சாறு கைகளில் அரிப்பினை ஏற்படுத்தும். ஆதலால் பிரண்டையின் மேற்தோலை நீக்கும் போது முதலில் கைகளில் நல்ல எண்ணெய் தடவிக் கொண்டு பின்னர் சுத்தம் செய்யவும்.

பிரண்டை சூப் செய்வதற்கு நான்கு பட்டைகள் கொண்ட சாதாரண பிரண்டையை உபயோகிக்கவும். இனி சுவையான ஆரோக்கியமான பிரண்டை சூப் செய்யும் முறை பற்றிப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

பிரண்டைத் தண்டு – 1 கட்டு

சின்ன வெங்காயம் – 10 எண்ணம்

வெள்ளைப் பூண்டு – 3 பற்கள் (பெரியது)

சீரகம் – 1 ஸ்பூன்

மிளகு – 2 ஸ்பூன்

மல்லி இலை – 2 கொத்து

கறிவேப்பிலை – 2 கீற்று

உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் கைகளில் நல்ல எண்ணெய் பூசிக் கொண்டு பிரண்டையின் மேற்தோலை பிரித்து எடுத்து சுத்தம் செய்யவும்.

சுத்தம் செய்த பிரண்டை தண்டு

சுத்தம் செய்த பிரண்டையை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த பிரண்டை விழுது

சின்ன வெங்காயத்தை காம்பு நீக்கி நேராக நறுக்கிக் கொள்ளவும்.

வெள்ளைப் பூண்டினை தோல் நீக்கி நேராக நறுக்கிக் கொள்ளவும்.

நறுக்கிய வெங்காயம்

மல்லி இலை, கறிவேப்பிலை ஆகியவற்றை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

1 ஸ்பூன் மிளகினை ஒன்றிரண்டாகப் பொடித்துக் கொள்ளவும்.

குக்கரில் அரைத்த பிரண்டை விழுதினைச் சேர்க்கவும்.

விழுதினை குக்கரில் சேர்த்ததும்

பின்னர் அதனுடன் நறுக்கிய சின்ன வெங்காயம், வெள்ளைப் பூண்டு ஆகியவற்றைச் சேர்க்கவும்.

வெங்காயம், வெள்ளைப்பூண்டு சேர்த்ததும்

வெள்ளைப்பூண்டு சேர்த்ததும்

அதனுடன் 1 ஸ்பூன் மிளகு, 1 ஸ்பூன் சீரகம், கறிவேப்பிலை, கொத்த மல்லி இலை ஆகியவற்றைச் சேர்த்து கலந்து கொள்ளவும்.

மிளகு, சீரகம் சேர்த்ததும்

அதனுடன் 4 டம்ளர் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி விடவும்.

தேவையான தண்ணீர், உப்பு சேர்த்ததும்

ஒரு விசில் வந்ததும் அடுப்பினை சிம்மில் 5 நிமிடங்கள் வைத்து இறக்கி விடவும்.

குக்கரின் ஆவி அடங்கியதும் வெளியே வடிகட்டி கட்டவும். வடிகட்டில் தங்கியுள்ளதை நன்கு மசித்து மீண்டும் சூப்பில் நன்கு கலந்து விடவும்.

பரிமாறும் போது கொத்த மல்லி இலை, மிளகுப் பொடி சேர்த்து சூடாகப் பரிமாறவும்.

மிளகு பொடி சேர்த்ததும்

சுவையான பிரண்டை சூப் தயார்.

இதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அருந்தலாம்.

குறிப்பு

பிரண்டையை தேர்வு செய்யும் போது இளம்பச்சை நிறத்தில் உள்ள இளந்தண்டினைத் தேர்ந்தெடுக்கவும். இளந்தண்டு கைகளில் அரிப்பினை அவ்வளவாக ஏற்படுத்தாது.

ஜான்சிராணி வேலாயுதம்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.