புதினா என்னும் மருத்துவ மூலிகை

புதினா என்னும் மருத்துவ மூலிகை பற்றி எல்லோரும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டும். பிரியாணி, சால்னா உள்ளிட்ட உணவுப் பதார்த்தங்களின் அற்புதமான மணம் மற்றும் சுவைக்கு முக்கிய காரணம் புதினாவாகும்.

அதனால்தான் உலகெங்கும் உள்ள சமையல்காரர்களுக்குப் பிடித்த சமையல் பொருட்களில் ஒன்றாக இது உள்ளது.

உலகெங்கும் சுமார் 30 புதினா இனங்களில் 500 வகைகள் உள்ளன. இதனுடைய அறிவியல் பெயர் மெந்தா ஸ்பிகேட்டா என்பதாகும். இது லாமியாசி என்னும் தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது.

இதனடைய சுவை, நறுமணம் மற்றும் புத்துணர்ச்சி தரும் பண்புகளின் காரணமாக ஆசியா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளின் கலாசாரங்களில் நீண்ட காலமாக அடையாளம் காணப்பட்ட தாவரமாக இது விளங்குகிறது.

புதினாவின் அமைப்பு மற்றும் வளரியல்பு

இது ஈரப்பதமான, வளமான, தளர்வான மண்ணில் நன்கு செழித்து வளரும். இது 1-2 அடி உயரம் வரை வளரும் செடி வகை தாவரத்தின் இலைப்பகுதியாகும்.

இதனுடைய தண்டுகள் பசுமையாகவும், சதைப்பற்றுடனும் சதுர வடிவத்துடன் காணப்படுகிறது. சதுர வடிவத் தண்டுகள் புதினா மூலிகையின் முத்திரையாகக் கருதப்படுகிறது.

இத்தாவரம் நிலத்தடி வேர்த்தண்டு கிழங்குகளைக் கொண்டுள்ளது. அக்கிழங்குகள் மூலமாக தரைக்கடியில் பரந்து விரிந்து புதிய தாவரமாக தோன்றுகிறது.

இதனுடைய இலைகள் 5-9 செமீ நீளம், 1.5-3 செமீ அகலத்துடன் ரம்பம் போன்ற விளிம்புகளையும் கொண்டுள்ளது. இலைகள் அடர் பச்சை, சாம்பல்-பச்சை, ஊதா, நீலம், வெளிர் மஞ்சள் ஆகிய நிறங்களில் காணப்படுகிறது.

இத்தாவரத்தில் பூக்கள் வெள்ளை முதல் கருநீலம் வரை வண்ணங்களில் தோன்றுகின்றன. இதனுடைய பழம் நான்கு விதைகளைக் கொண்டுள்ளது.

புதினாவின் வரலாறு

புதினாவின் மணம், சுவை மற்றும் மருத்துவ குணங்களின் காரணமாக இது வரலாற்று மூலிகையாக விளங்குகிறது. இது வாசனை திரவிய மூலிகைகளில் முக்கியமான ஒன்றாகும்.

இது பல்வேறு கலாச்சாரங்களில் விருந்தோம்பலை பிரதிநிதிப்படுத்தியுள்ளது.

கிரேக்கத்தில் விருந்தினர்களை வரவேற்க சாப்பாட்டு மேசைகளில் புதினாயிலை தேய்க்கப்பட்டது.

மத்திய கிழக்கில் விருந்தினர்கள் வருகையில் வரவேற்பு பானமாக புதினாத் தேநீர் வழங்கப்பட்டது.

அமெரிக்காவில் பூர்வீக மக்களால் ஐரோப்பியர்களின் வருகைக்கு முன்பே இத்தாவரம் பயன்பாட்டில் இருந்துள்ளது.

புதினாவின் தோற்றம் பற்றி கிரேக்க புராணத்தில் கூறப்பட்டுள்ளது. புதினா ஆங்கிலத்தில் மின்ட் என்று அழைக்கப்படுகிறது. மின்ட் என்பது மிந்தே என்ற சொல்லிலிருந்து தோன்றியது.

மிந்தே என்பது கிரேக்க புராணப்படி இயற்கை இடங்களில் வசிக்கும் கன்னி தேவதை. கிரேக்க புராணத்தில் மிந்தே புளுட்டோவின் பெண் தோழியாகச் சொல்லப்படுகிறார்.

புளுட்டோவின் மனைவி பெர்சபோன் மிந்தேவின் மீது பொறாமை கொண்டு அவரை நிலத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் மின்ட் தாவரமாக மாற்றினார்.

புளுட்டோவால் மிந்தேவை மீண்டும் தேவதையாக மாற்ற இயலவில்லை. மின்ட்டின் இலைகள் மற்றும் தண்டுகளை நசுக்கும் போது காற்றினை இனிய வாசத்தில் பரவவிடும் தன்மையை மின்ட்டிற்கு புளுட்டோ கொடுத்தார் என்று கூறப்படுகிறது.

புதினாவின் ஊட்டச்சத்துக்கள்

புதினா மிகஅதிகளவு விட்டமின் ஏ-வையும், அதிகளவு விட்டமின் சி மற்றும் பி9(ஃபோலேட்டுகள்) கொண்டுள்ளது. மேலும் இதில் விட்டமின் பி1(தயாமின்), பி2(ரிஃபோப்ளோவின்), பி3(நியாசின்), பி6(பைரிடாக்ஸின்) ஆகியவையும் உள்ளன.

இதில் மிகஅதிகளவு இரும்புச்சத்து, செம்புச்சத்தையும், அதிகளவு மாங்கனீசு, பொட்டாசியத்தையும் கொண்டுள்ளது. மேலும் இதில் கால்சியம், மெக்னீசியம், துத்தநாகம் போன்ற தாதுக்களும் காணப்படுகின்றன.

இதில் கார்போஹைட்ரேட், புரதம், நார்ச்சத்து ஆகியவையும் காணப்படுகின்றன.

புதினாவின் மருத்துவப் பண்புகள்

ஆரோக்கியமான செரிமானத்திற்கு

இது பசியுணர்வினை உண்டாக்குகிறது. இதனை வாயில் போட்டு உண்ணும் போது உண்டாகும் புத்துணர்ச்சி மற்றும் நறுமணத்தால் உமிழ்நீர் மற்றும் செரிமான நொதிகள் நன்றாக சுரக்கப்பட்டு உணவு நன்கு சீரனமாகிறது.

புதினாவில் கார்வோன் என்ற செயல் பொருள் ஒன்று உள்ளது. கார்வோன் குடலின் மெல்லிய தசைகளில் பிடிப்பு ஏற்படாமலும், பிடிப்பு ஏற்படின் அதனைக் குறைக்கவும் உதவுகிறது.

மேலும் புதினாவில் உள்ள மெந்தால் செரிமான மண்டலத்தில் உண்டாகும் வயிற்றுப்போக்கு, வாயு தொந்தரவு போன்றவற்றிற்கு நிவாரணம் அளிக்கிறது.

ஆரோக்கியமான செரிமானத்திற்கு இதனை அடிக்கடி அளவோடு உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

நினைவாற்றல் அதிகரிக்க

புதினாவில் உள்ள பாலிபீனாலான ரோஸ்மரினிக் அமிலம் வயதானவர்களின் நினைவாற்றலை அதிகப்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மேலும் இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் மனஅழுத்தம் குறைந்து நினைவாற்றல் அதிகரிப்பு, விழிப்புணர்வு ஏற்படுவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.

வாயினை பராமரிக்க

புதினாவை வாயில் போட்டு மெல்லும் போது அது கிருமிநாசினியாக செயல்பட்டு வாய்க்கு புத்துணர்ச்சி அளிக்கிறது.

இது நாக்கு மற்றும் பற்களை சுத்தம் செய்வதோடு வாயில் பாக்டீரியாக்களின் வளர்ச்சியையும் தடுக்கிறது. ஆதலால்தான் மவுத்வாஷ், பற்பசை உள்ளிட்ட வாயினை சுத்தம் செய்யும் பொருட்களில் இது சேர்க்கப்படுகிறது.

ஈறுகள் மற்றும் பற்கள் ஆரோக்கியத்திற்கு இதனை அடிக்கடி வாயில் போட்டு மெல்லலாம்.

தலைவலிக்கு நிவாரணம் பெற

தலைவலி தைலத்துடன் புதினாயிலைச் சாறு, புதினா எண்ணெய் சேர்த்து தலையில் தேய்த்தால் தலைவலி குணமாகும். இதனை ஆய்வு முடிவுகளும் உறுதி செய்கின்றன. எனவே இது தலைவலி மற்றும் ஒற்றை தலைவலியைக் குறைக்கும் இயற்கை நிவாரணியாக உள்ளது.

மனஅழுத்தத்தைக் குறைக்க

இதில் உள்ள மெந்தால் மூளை மற்றும் நரம்புகளில் உண்டாகும் அழுத்தத்தை குறைக்கிறது. புதினாவின் நறுமணத்தை நுகரும் போது மனசாந்தி கிடைக்கிறது.

இதனை உண்ணும்போது உண்டாகும் வாசனையால் மந்தம், பதட்டம், மனசோர்வு ஆகியவை நீங்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மனஅழுத்தம் குறைத்து ஆழ்ந்த உறக்கம் கிடைக்க புதினா எண்ணெயை தலையணையில் தோய்த்து அதில் சாய்ந்து உறங்கும் பழக்கம் நடைமுறையில் உள்ளது.

குமட்டலுக்கு தீர்வு காண

குமட்டல் மற்றும் தலைவலிக்கு புதினாவானது உடனடியாக தீர்வளிக்கிறது.

குமட்டல் உணர்வு தோன்றும் போது புதினாயிலைகளை பிய்த்து கையில் கசக்கி நுகரும் போது புதினாவின் நறுமணம் உள்ளே சென்று புத்துணர்ச்சியை உண்டாக்கி குமட்டலுக்கு தீர்வளிக்கிறது.

பயணத்தின்போது குமட்டல் ஏற்பட்டால் உடனடியாக புதினாவை நசுக்கி நுகர்ந்து தீர்வினைப் பெறலாம்.

சுவாசக் கோளாறுகள் நீங்க

புதினாவில் உள்ள மெந்தால் மூக்கடைப்பினை நீங்குவதாக ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் ஜலதோசம், ஆஸ்துமா ஆகியவற்றால் தொண்டை, மூச்சுக்குழாய், நுரையீரல் ஆகியவற்றில் உண்டாகும் சுவாசக் கோளாறுகளை நீக்கி அவை நன்கு செயல்பட புதினா உதவுகிறது.

இது நாள்பட்ட இருமலால் தொண்டை, மூக்கு உள்ளிட்ட சுவாசப் பாதைகளில் உண்டாகும் எரிச்சலை போக்க உதவுகிறது. ஆதலால்தான் இருமல் டானிக்குகளில் புதினாவானது சேர்க்கப்பட்டு தயார் செய்யப்படுகிறது.

சரும பராமரிப்பிற்கு

புதினா எண்ணெய் ஆன்டிசெப்டிக் மற்றும் அரிப்பு நீக்கும் தன்மையைக் கொண்டுள்ளது. மேலும் இது தோலில் நோய் தொற்று மற்றும் நமச்சலை நீக்கி தோல் சுத்தப்படுத்தியாகவும் செயல்படுகிறது.

முகத்தில் தோன்றும் பருக்கள் மற்றும் வடுக்களை நீக்கவும் இது உதவுகிறது. மேலும் குளவிகள், தேனீக்கள் உள்ளிட்ட பூச்சிகளின் விஷக்கொடுக்குகள் தாக்குதலால் தோலில் உண்டாகும் எரிச்சல் மற்றும் நமச்சலை சீர்செய்ய புதினா இலைச்சாறு உதவுகிறது.

ஆரோக்கிய எடை இழப்பிற்கு

புதினாவில் உள்ள மெந்தால் செரிமான சுரப்புகளைத் தூண்டி செரிமானம் நன்கு நடைபெறச் செய்வதோடு உணவில் உள்ள ஊட்டச்சத்துகளை உறிஞ்சவும், கொழுப்பினை முழுவதும் எரித்து ஆற்றலினை பெறவும் உதவுகிறது. எனவே ஆரோக்கிய உடல் எடையை இழக்க விரும்புபவர்கள் புதினாவை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

புதினாவைப் பற்றிய எச்சரிக்கை

இதனைக் கர்ப்பிணிகள் அளவுக்கு அதிகமாக உண்ணும்போது கருப்பைக்கு பிரச்சினையை ஏற்படுத்தக்கூடும். எனவே இதனை கர்ப்பிணிகள் அளவோடு பயன்படுத்த வேண்டும்.

இதனை அளவுக்கு அதிகமாக உண்ணும் போது கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களில் பிரச்சினை ஏற்படக்கூடும்.

புதினாவை வாங்கும் முறை

இது ஆண்டு முழுவதும் பச்சையாகவோ காய்ந்த நிலையிலோ கிடைக்கிறது. பச்சையாக இதனை வாங்கும் போது ஒரே சீரான நிறத்துடன் புதிதாக இருக்கும் இலைகளை வாங்க வேண்டும்.

புதிதாக உள்ள புதினா இலைகளை அலசி நிழலில் உலர வைத்து காய்ந்த பின்பு பயன்படுத்திக் கொள்ளலாம்.

இது அப்படியோவோ, உணவுகளில் சேர்த்தோ உண்ணப்படுகிறது. சில நேரங்களில் உணவினை சமைத்து முடித்தப் பின்பு வாசனை மற்றும் சுவையாகவும் இது சேர்க்கப்படுகிறது.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.