மனம் கொள்ளும் கணம்

நிழல்கள் இளைப்பாறும்

குளத்தில் மீன்களாய்

குதித்துக் கொண்டாடின

என் கண்கள்

அலைகளெழுப்பும் வட்டங்கள்

பிரிதிகளாய் விரிய

பிம்பங்களாக வரித்துக் கொண்டன

கைகளுள்

எட்டிப்பார்த்த என்னை

பறவைகளென

கிளைகளிலிருந்து பறந்து மிதந்தன

சிறுவர்கள் விடும் கப்பல்களாய்

இலைகள்

ஒவ்வொரு வளையமும்

விளக்க முயலும் மனம் போல

சுழன்று கொண்டிருந்தன

கவிதை வரிகள்

ஆவலாய்

எதிர்ப்பார்த்திருக்கும் வெண்மேகம்

நீர் மேடையில் அமர்ந்து கொள்ள

கருமுகில்களும் சூழ்ந்து கொண்டன

அங்கொன்றும் இங்கொன்றுமாய்

தாகம் தணித்துக்கொள்ள

இடை குளத்தில் நிர‌ம்பிக் கொண்ட

அவள்மனக்கண்களில் நிறைந்து கொள்ள

முயன்ற போது

தானாக வந்து கலக்கிக் கொண்டிருந்தன

குளத்தில் எருமைகள்

கா.அமீர்ஜான்

கா.அமீர்ஜான்
திருநின்றவூர்
7904072432

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.