ஆறு துணை

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்-பரா சக்தி

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி -ஓம் சக்தி

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

 

கணபதி ராயன்-அவனிரு

காலைப் பிடித் திடுவோம்;

குண முயர்ந் திடவே-விடுதலை

கூடி மகிழ்ந்திடவே                                                (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)

 

 
சொல்லுக் கடங்காவே-பரா சக்தி

சூரத் தனங்க ளெல்லாம்;

வல்லமை தந்திடுவாள்-பரா சக்தி

வாழியென்றேதுதிப்போம்.                                 (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)

 

 
வெற்றி வடிவேலன்-அவனுடை

வீரத்தினைப் புகழ்வோம்

சுற்றி நில்லாதே போ!-பகையே!

துள்ளி வருகுது வேல்.                                       (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)

 

 
தாமரைப் பூவினிலே-சுருதியைத்

தனியிருந் துரைப்பாள்

பூமணித் தாளினையே-கண்ணி லொற்றிப்

புண்ணிய மெய்திடுவோம்.                                 (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)

 

 
பாம்புத் தலைமேலே-நடஞ் செயும்

பாதத்தினைப் புகழ்வோம்;

மாம்பழ வாயினிலே-குழலிசை

வண்மை புகழ்ந்திடுவோம்.                                (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)

 

 
செல்வத் திருமகளைத்-திடங்கொண்டு

சிந்தனை செய்திடுவோம்;

செல்வமெல்லாம் தருவாள்-நமதொளி

திக்க னைத்தும் பரவும்.                                        (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)

– பாரதியார்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.