இனிப்பு சாப்பிடாதே!

ஒரு முறை ஒரு தாய் காந்திஜியிடம் வந்து தன் மகனைக் கூடுதல் இனிப்பு சாப்பிடாமலிருக்க அறிவுறுத்தும்படிக் கேட்டுக் கொண்டார்.

காந்திஜியோ அவர்களை மறுநாள் வரும்படிக் கூறினார்; மறுநாள் அவர்கள் வந்தனர்.

மறுநாள் காந்திஜி குழந்தையிடம், “இனிப்பு சாப்பிடுவதைக் குறைத்துக் கொள்” எனக் கூறினார். உடன் அந்தத் தாய் இதைத் தாங்கள் நேற்றே கூறியிருக்கலாம் அல்லவா? என வினவினார்.

உடன் காந்திஜி, “நேற்றே கூறியிருக்கலாம். ஆனால், நானே மிகுதியாக இனிப்பு உண்ணும் பழக்கம் உடையவன். நான் குறைக்காமல் மற்றவர்களைக் குறைக்கக் கூறுவது தவறு என்பதால், இன்று இனிப்பைக் குறைத்த பின்பு கூறுகிறேன்” என்றார்.

‘எனது வாழ்க்கையே மக்களுக்கு நான் விடுக்கும் செய்தி’ என்று மகாத்மா சொன்னது எவ்வளவு உண்மை என்பது விளங்குகிறது அல்லவா?

– சிவகாசி, ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்