இளைய பாரதத்தினாய் வா வா வா

ஒளிப டைத்த கண்ணினாய் வா வா வா 

      உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா 

களிப டைத்த மொழியினாய் வா வா வா 

      கடுமை கொண்ட தோளினாய் வா வா வா 

தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா 

      சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா 

எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா 

      ஏறு போல்ந டையினாய் வா வா வா

 

மெய்மை கொண்ட நூலையே அன்போடு 

      வேத மென்று போற்றுவாய் வா வா வா 

பொய்மை கூற லஞ்சுவாய் வா வா வா 

      பொய்மை நூல்க ளெற்றுவாய் வா வா வா 

நொய்மை யற்ற சிந்தையாய் வா வா வா 

      நோய்க ளற்ற உடலினாய் வா வா வா 

தெய்வ சாபம் நீங்கவே,நங்கள் சீர்த் 

      தேச மீது தோன்றுவாய் வா வா வா

 

இளைய பார தத்தினாய் வா வா வா 

      எதிரி லாவ லத்தினாய் வா வா வா 

ஒளியி ழந்த நாட்டிலே நின்றேறும் 

      உதய ஞாயி றொப்பவே வா வா வா 

களையி ழந்த நாட்டிலே முன்போலே 

      களைசி றக்க வந்தனை வா வா வா 

விளையு மாண்பு யாவையும் பார்த்தன்போல் 

      விழியி னால்வி ளக்குவாய் வா வா வா

 

வெற்றி கொண்ட கையினாய் வா வா வா 

      விநயம் நின்ற நாவினாய் வா வா வா 

முற்றி நின்ற வடிவினாய் வா வா வா 

      முழுமை சேர்மு கத்தினாய் வா வா வா 

கற்ற லொன்று பொய்க்கிலாய் வா வா வா 

      கருதிய தியற் றுவாய் வா வா வா 

ஒற்று மைக்கு ளுய்யவே நாடெல் லாம் 

      ஒருபெ ருஞ்செயல் செய்வாய் வா வா வா

– சுப்பிரமணிய பாரதியார்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.