எங்கள் ஆசான், நல் ஆசான்

எனது முனைவர் பட்ட ஆய்வு வழிகாட்டி பேராசிரியர் வெ.நாராயணன் (சென்னை பல்கலைக்கழகம்) அவர்களின் பணி நிறைவு நாள் விழாவை முன்னிட்டு நான் (முனைவர்.ஆர்.சுரேஷ்) எழுதிய கவிதை.

 

சங்கத் தமிழ் வளர்த்த மண்ணில்

துளிர் விட்ட ஆசான்

எங்கள் ஆசான், நல் ஆசான்

 

உம்மை

ஒளி தேடும் செடியைப் போல்

வளி நாடும் விதையைப் போல்

நாடி வந்தோம்

நாட்டமுடன் ஏற்றீர்

நல்வினைகள் செய்தீர்

எங்கள் ஆசான், நல் ஆசான்

 

நாட்பலவும் உந்தன்

சொற்கேட்டு போக

செயலற்ற வினையும்

வினையூக்கம் பெருமே

எங்கள் ஆசான், நல் ஆசான்

 

விந்தை பல வந்து

வீழ்த்தும் போதெல்லாம்

விழி பிதுங்கி நிற்க

வீழ்வதில்லை என்பாய்

தொடந்து உழை என்றாய்

எங்கள் ஆசான், நல்ஆசான்

 

சேர்மம் பல கண்டு ‍அதன்

பண்பு நலன் கொண்டு

வித்தை பல பற்றி

விளைபயன்கள் பல உண்டு

என்று உரைக்கச் செய்தீர்

உலகறிய வழி செய்தீர்

எங்கள் ஆசான், நல் ஆசான்

 

வழிகாட்டும் உந்தன்

பாங்கை பறை சாற்ற‌

பெரும் மலையின் உயரம்

மாக்கடலின் ஆழம்

என்று உரைத்த போதும்- அஃது

குறை உவமையாகும்

நிறை உவமை யாதோ

எங்கள்ஆசான், நல்ஆசான்

 

உமக்கு

நன்றியென நாவும்

வணங்குகின்ற கரமும்

இயல்பு நிலையில் தாமே

விரைந்து வந்து ஆற்ற

சிந்தை முழுதும் உந்தன்

சொற்கள் சுழன்று நிற்க

வணங்குகின்றோம் ஆசான்

எங்கள் ஆசான், நல் ஆசான்.

 

கவலைகளை அகற்று

உதவியினை ஆற்று

வீரந்தனை கொண்டு

விரைந்து செயலாற்று

பொழுது ஒன்று வருமே

வாழ்வு ஒன்று உண்டு என‌

ஊக்கம் நல்கும்

உம்நுட்பம் பற்றி

எந்நாளும் நடப்போம்

எங்கள்ஆசான், நல்ஆசான்

– முனைவர்.ஆர்.சுரேஷ்
ஆராய்ச்சியாளர்
பகுப்பாய்வு மற்றும் க‌னிம வேதியியல் துறை
கன்செப்ஷன் ப‌ல்கலைக்கழகம், சிலி
WhatsApp +91 9941633807

 

2 Replies to “எங்கள் ஆசான், நல் ஆசான்”

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.