என் காதலி

என் கனவில் வந்தவளும் நீதானே – உன்

எண்ணத்திலே நானும் சிக்கிக் கொண்டேனே

கண்ணாலே என்னைக் கொத்தி சென்றாயே – உன்

கண்ணின் மையம்போல இங்கு நானானேன்

 

பின்னலிலே என்னைக் கட்டிச் சென்றாயே – உன்

பேச்சினிலே கொஞ்சும் தமிழ் நானானேன்

சின்னக்காயின் கொலுசொலி கேட்டேனே – உன்

சிற்றடியை தாங்கும் பூமி நானாவேன்

 

முந்தானை காற்றிலாடக் கண்டேனே – அதில்

முன்கொசுவம் நானாகிப் போவேனே

விந்தையிலும் விந்தையிது என்பேனே – உன்

விற்புருவம் நானாகிப் போவேனே

 

செந்தாழம் பூவின் வாசம் உன்மேனி – அதில்

சின்ன நாகமென இனி நானாவேன்

நந்தவன பூந்தோட்டம் உன்போல – இதழ்

நறுமலர் பூத்ததில்லை என்பேனே

 

அந்தியிலே வந்த நிலா உன்போல – நல்ல

அழகில்லை என்றே நானும் சொல்வேனே

சந்தனத்தின் நிறம் உன்மேனி தானே – அதில்

செந்தூரம் போல ஒட்டிக் கொள்வேனே

 

வெண்சங்கு கழுத்திலே பூமாலை – நான்

வேகமாக சூட்டிடத்தான் வந்தேனே

அன்போடு குலவையும் மேலோங்க – என்

ஆரணங்கே உன்னை மணம் செய்வேனே

இராசபாளையம் முருகேசன்

கைபேசி: 9865802942

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.