ஓவியக் கலை

காண்பவரைக் கவர்ந்திழுத்து உள்ளங்களைத் தன்வயப்படுத்தும் உயர்ந்த கலை ஓவியக் கலை. எல்லைகளையெல்லாம் கடந்து எங்கும் பரந்து வாழும் மக்களின் மனங்களைக் கொள்ளை கொண்டு வியக்க வைக்கும் விந்தை மொழி ஓவியக் கலை.

ஓவியம் பேசும் செய்திகள் பல. உணர்த்தும் கருத்துக்களோ மிகப்பல. தமிழர் வளர்த்த நுண்கலைகளின் வரிசையில் ஓவியக்கலை முன்னணியில் நிற்கிறது.

பழங்கால மக்கள் தம் உள்ளக் கருத்துகளைப் புலப்படுத்த பாறைகளிலும், குகைகளிலும் கீறி எழுதினர். தம் எண்ணத்தைச் சித்திரம் வரைந்து வெளிப்படுத்தினர். இவற்றை தொல் பொருள் ஆய்வுகளாலும், இலக்கியச் சான்றுகளாலும் அறிந்து கொள்ள முடிகிறது.

தமிழ்நாட்டில் இருபத்தைந்திற்கும் மேற்பட்ட இடங்களில் குகை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஓவியமே சித்திர எழுத்துக்களாகவும் நாளடைவில் மொழிக்குறியீடுகளாகவும் வளர்ந்துள்ளன.

ஓவியம் வரைவதற்கு நேர்கோடு, கோணக்கோடு, வளைகோடு முதலியன அடிப்படையாகும். இவ்வாறு வரையப்படுபவை கோட்டோவியங்கள் ஆகும். அவ்வரைகோடுகள் மேல் சிவப்பு, கருப்பு, மஞ்சள், நீலம் போன்ற வண்ணங்கள் பூச அழகிய ஓவியங்களாக உருவெடுக்கும்.

சிற்பி, தான் செதுக்கவிருக்கும் உருவத்தை முதலில் வரைந்து பார்த்த பின்னரே, அதனைக் கொண்டு கல்லில் உருவம் அமைப்பதே மரபு. இதன்மூலம் சிற்பம் செதுக்குவதற்கு ஓவியக்கலை துணை புரிந்ததையும், ஓவியம் முன்னரே வளர்ந்திருந்ததையும் அறியலாம்.

ஓவியக்கலை ஓவு, ஓவியம், சித்திரம், படம், படாம், வட்டிகைச் செய்தி என பல பெயர்களால் குறிப்பிடப்படுகிறது. ஓவிய நூலின் நுணுக்கத்தை நன்கு கற்று புலமை பெற்றவரை ஓவியப் புலவன் என்றும், ஓவியக் கலைஞர் குழுவை ஓவிய மாக்கள் என்றும் குறிப்பிடப்படுகின்றனர். ஆண் ஓவியர் சித்ராங்கதன் எனவும், பெண் ஓவியர் சித்ரசேனா எனவும் அழைக்கப்படுகின்றனர்.

பல்வகைக் காட்சிகள், உருவங்கள் வரைய ஓவியர் அக்காலத்தில் பல்வகைக் கருவிகளைப் பயன்படுத்தினர். வண்ணந்தீட்டும் கோல்தூரிகை வட்டிகை எனப்பட்டது. வண்ணங்கள் குழப்பும் பலகைக்கு வட்டிகைப் பலகை எனப்பெயரிட்டிருந்தனர்.

அக்காலத்தில் ஓவியங்கள், வரைவதற்கென்று தனியிடங்கள் அமைந்திருந்தன. இவ்விடங்கள் சித்திரக்கூடம், சித்திரமாடம், எழுதுநிலை மண்டபம், எழுதெழில் அம்பலம் என்ற பெயர்களில் அழைக்கப்பட்டன.

அரசர் வாழும் அரண்மனைகள், செல்வர் வாழும் வளமனைகள், மாளிகைகள், ஆடலரங்குகள், கோவில் மண்டபங்கள், பொதுமன்றங்கள் முதலிய இடங்களின் கட்டடச் சுவர்கள், மேற்கூரைகள், துணிகள் ஆகியவற்றில் ஓவியங்களை வரைந்தனர்.

சுடுமண் சுவர் மீது வெண்சுதை (சுண்ணாம்பு) பூசிச் செந்சாந்து கொண்டு ஓவியங்கள் தீட்டினர்.அதுமட்டுமல்லாமல் மரப்பலகை, துணிச்சீலை, திரைச்சீலைகளில் ஓவியம் வரைந்தனர்.நாடக மேடைகளில் பல வண்ணங்களில் கவின்மிகு காட்சிகள் தீட்டப்பட்ட திரைச்சீலைகள் தொங்கிய‌வற்றை ‘ஓவியஎழினி’ கொண்டு அறிகிறோம். சுவர் இருந்தால் தான் சித்திரம் எழுத முடியும் என்ற பழமொழி இவ்வாறுதான் உருவாயிற்று.

வண்ணங்கலாவாமல் கரித்துண்டுகளால் வடிவம் மட்டும் வரைவதை புனையா ஓவியம் என்றழைத்தனர். இன்றும் இது மென்கோட்டு ஓவியமாக நடைமுறையில் உள்ளது.

இயற்கைக்காட்சிகள், கற்பனைக் காட்சிகள், சமுதாய வாழ்க்கை முறை, இதிகாச புராணக் கதைகள் ஆகியவை ஓவியத்துக்குரிய கருப்பொருட்களாகும்.

ஓவியங்களில் நிற்றல், இருத்தல், கிடத்தல் ஆகிய மனித இயல்புகளையும், வீரம், சாந்தம், சினம், வியப்பு, உவகை முதலிய மெய்பாடுகளையும், உத்தமம், மத்திமம், அதமம் மற்றும் தசதாளம், நவதாளம், பஞ்சதாளம் முதலிய அளவுகளையும் வலியுறுத்துவது தமிழருக்குரிய‌ ஓவிய மரபுகளாக விளங்குகின்றன.

சங்க காலத்தில் செழித்திருந்த ஓவியக்கலை இடைக்காலத்தில் சிதைந்து மறைந்து போகத் தொடங்கியது. மறைந்து கொண்டிருந்த ஓவியக்கலைக்கு புத்துயிர் ஊட்டியவர்கள் பல்லவ மன்னர்கள்.

கி.பி. 7ஆம் நூற்றாண்டில் தமிழகத்தை ஆண்ட முதலாம் மகேந்திரப் பல்லவ அரசன் கலையார்வம் மிக்கவன். இக்காலத்தில் ஓவியக்கலை எழுச்சி பெற்றது. இவ்வரசனே சிறந்த ஓவியன். அதனால் சித்திரகாரப்புலி என்ற சிறப்பு பெயர் இவ்வரசனுக்கு உண்டு என்பதை கல்வெட்டுகள் மூலம் உணரலாம். தட்சிண சித்திரம் என்னும் ஓவிய நூலுக்கு மகேந்திர பல்லவன் உரை எழுதி உள்ளான்.

பல்லவர்கால ஓவியங்களை பனமலை, திருமலை மாமல்லபுரக் குகைக் கோவில், மாமண்டூர், காஞ்சிக் கைலாசநாதர் கோவில் முதலிய இடங்களில் சிதைந்த தோற்றத்தோடு காணலாம்.

பார்வதி தேவி, கின்னார், கின்னரி, கந்தவர் ஓவியங்களை காண்போரை கவர்ந்திருக்கும், திருநந்திக்கரையில் சேரர் கால ஓவியங்கள் கிடைத்துள்ளன.

புதுக்கோட்டைக்கு அருகில் சித்தன்ன வாசல் என்னும் குகைக் கோவில் ஓவியங்கள் ஓவியக் கருவூலங்களாக வைத்துப் போற்றுதலுக்கு உரியன. கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் அவனிப சேகர ஸ்ரீவல்லபன் என்ற பாண்டிய மன்னன் காலத்தில் மதுரை ஆசிரியர் இளம்கௌதமன் இவ்வோவியங்களை வரைந்தார் என்று கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.அங்குள்ள தாமரைத்தடாகம், ஆடல் அணங்குகள், அரசன் அரசி ஓவியங்கள் ஆகியவை நம் கண்ணை கவர்வன.

சோழர் கால அழகிய ஓவியங்களைத் தஞ்சைப் பெரிய கோவிலில் காணலாம். சேரமான், சுந்தரர் கயிலை செல்லும் காட்சி, சிவபெருமான் முப்புரம் எரித்த காட்சி, நாட்டிய மகளிர், மாமன்னன் இராசராசன் ஆகியவை வரலாற்றுச் சிறப்பை உணர்த்துவன.

திருவரங்கம், திருப்பதி, தில்லை, திருவாரூர், குடந்தை, மதுரை, காஞ்சி, முதலிய இடங்களில் விஜயநகர நாயக்க மன்னர்களின் ஓவியங்கள் காணப்படுகின்றன.

கி.பி. 18ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்கள் காலத்தில் ஓவியக்கலை நன்கு வளர்ச்சியுற்றது. ஓலைகளிலும், கண்ணாடிகளிலும், தந்தங்களிலும் ஓவியங்கள் தீட்டப்பெற்றன. வண்ணங்களின் வனப்புக்கேற்ப இரத்தினங்கள் பதிக்கப்பெற்றன.

ஓவியர்களின் கைவண்ணங்களை இன்றும் கோவில் கூரைகளிலும் சுவர்களிலும் மரச்சிற்பங்களிலும் காணலாம்.ஈராயிரம் ஆண்டுகள் பழமையான ஓவியக் கலை அழியாமல் நாமும் போற்றிப் பாதுகாப்போம்.