கடுகு – மருத்துவ பயன்கள்

கடுகு காரச் சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டது. குன்மம், வாதநோய் ஆகியவைகளைக் குணமாக்கும்; ஜீரண உறுப்புகளைப் பலப்படுத்தும்; வாந்தியுண்டாக்கும்; சிறுநீர் பெருக்கும்; விஷத்தை முறிக்கும்.

கடுகு பாக்டீரியாக்கள் போன்ற கிருமிகளை அழிக்கும் மருத்துவக் குணம் உடையது, எனவே கடுகை ஊறுகாய், தொக்கு போன்றவற்றிலும் சேர்க்கிறார்கள். இதனால், இவை கெட்டுப்போகாமல் பாதுகாக்கப்படும்.

கடுகு எண்ணெய் நெடியும் விறுவிறுப்பும் கொண்டதாகும். தோல் நோய்களைக் குணமாக்கும்.பொதுவாக‌ கடுகு எனக் குறிப்பிடப்படுவது கடுகுச் செடியிலிருந்து பெறப்படும் விதைகளையே குறிக்கும்.

கடுகு ஓராண்டு மட்டுமே உயிர்வாழும் செடி வகையைச் சேர்ந்த‌ தாவரம். 1 மீ. உயரம் வரை வளரும். பூக்கள் நுனியில் கொத்தாக அமைந்தவை, மஞ்சள் நிறமானவை. விதைகள் கடுகு எனப்படுபவை.

வெள்ளைக் கடுகு மற்றும் சமையலில் பயன்படுத்தும் கடுகு என இரண்டு வகைகள் உண்டு. கடுகில் இருந்து பெறப்படுவது கடுகு எண்ணெய் ஆகும். கடுகு பெருமளவில், உணவு மற்றும் மருத்துவ உபயோகங்களுக்குப் பயிர் செய்யப்படுகின்றன.

தமிழகத்தில் பெரும்பாலும் துணைப் பயிராகவும், தரிசு நிலங்களிலும், சமவெளி பகுதிகளிலும் கூட வளர்கின்றன.

சமையல் கடுகு மளிகைக் கடைகளில் சாதாரணமாகக் கிடைப்பதாகும். நம் அனைவருக்கும் நன்கு பழக்கமானதாகும். கடுகு எண்ணெய் மற்றும் வெள்ளைக் கடுகு ஆகியவை நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.

தேவையான அளவு கடுகை, தேனுடன் சேர்த்து அரைத்து, பசையாகச் செய்து, கட்டிகளின் மீது பூச கட்டிகள் உடையும்.

கிரந்திப்புண், தோல் நோய்கள் குணமாக கடுகு எண்ணெயை பாதிக்கப்பட்ட இடத்தில் மேல் பூச்சாகப் பூசிவர வேண்டும்.

ஒரு தேக்கரண்டி கடுகை, நீர் சேர்த்து அரைத்து, குடிக்கக் கொடுத்தால் வாந்தியுண்டாகும்; குடிபோதை மாறும்.

வெள்ளைக்கடுகு காரச்சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டவை. குழந்தைகளுக்கு ஏற்படும் தோஷங்களைப் போக்கும்; முடக்குவாத நோயைக் கட்டப்படுத்தும்.

வெள்ளைக்கடுகு பூச்சிக் கடி விஷத்தைக் குறைக்கும். விஷத்தை உட்கொண்டவர்களுக்கு வெள்ளைக்கடுகை நீரில் ஊறவைத்து, நெல்லிக்காய் அளவு அரைத்துக் கொடுக்க, குமட்டல் இன்றி வாந்தியை உண்டாக்கி நஞ்சை வெளியேற்றும்.

வெள்ளைக்கடுகை அரைத்து, பருத்தித் துணியில் தடவி, கீல்வாயு, இரத்தக்கட்டு உள்ள இடங்களில் பற்றாகப் போட அவை குணமாகும்.

¼ தேக்கரண்டி அளவு வெள்ளைக் கடுகைத் தூளாக்கி, தேனில் குழைத்து உள்ளுக்குள் சாப்பிட இரைப்பு, இருமல், சுவாச நோய்கள் குணமாகும்.