கற்பூரவல்லி – மருத்துவ பயன்கள்

கற்பூரவல்லி புதர்ச்செடி வகையைச் சேர்ந்தது. கற்பூரவல்லிக்கு ஓமவல்லி என்கிற மாற்றுப் பெயரும் சில‌ பகுதிகளில் வழங்கப்படுகிறது. அடர்ந்த புதர்களில் பெரும்பாலும் தேன்கூடுகளைக் காணமுடியும்.
தண்டுகளை ஒடித்து மற்றொரு இடத்தில் நட்டால் முளைத்துக் கொள்ளும் தன்மை கொண்டது. இந்த வகையிலேயே கற்பூரவல்லி இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. நகரத்தில் வசிப்பவர்கள் இந்தச் செடியைத் தொட்டியிலும் வளர்த்துப் பயன்பெறலாம்.

கற்பூரவல்லியின் இலைகளே மருத்துவத்தில் பயன்படுபவை.கற்பூரவல்லி இலையைக் கையால் தொட்டுத் தடவி, முகர்ந்தால் ஓமத்தின் மணம் தரும். இலையில் சுரக்கும் ஒருவிதமன ஆவியாகும் தன்மையுடைய நறுமண‌ எண்ணெய் இந்த மனத்திற்குக் காரணமாகும்.

கற்பூரவல்லி வறண்ட சமவெளிகள், சரிவான நிலப்பகுதிகளில்,கொத்தான இலைத் தொகுப்புகளுடன் காணப்படும். பல்லாண்டுகள் உயிர் வாழ்பவை. இலைகள், மணமுள்ளவை, பசுமையானவை, தடிப்பானை சதைப்பற்றுடன் காணப்படும்.

கற்பூரவல்லி தண்டுகள் மெல்லியதாகவும், வளைந்தும், ஒடியும் தன்மையுடனும் இருக்கும். நீலநிறமான பூங்கொத்துகள் வாசனையுடன் காணப்படும்.

கற்பூரவல்லி இலைகள் கார்ப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை. உடல் வெப்பத்தை அதிகரிக்கும்; வியர்வையை அதிகமாக்கும்; கோழையகற்றும்.

கற்பூரவல்லி காசநோய், கபக்கட்டு, அம்மைக் கொப்புளம் ஆகியவைகளைக் கட்டுப்படுத்தும்.குழந்தை மருத்துவத்திலும் கற்பூரவல்லி உயர்ந்த இடத்தை வகிக்கின்றது. மழைக்காலத்தில் ஏற்படும் ஜலதோஷத்தைத் தவிர்க்க, கற்பூரவல்லி இலையை பஜ்ஜி செய்து சாப்பிடலாம்.

குழந்தைகளின் மார்பில் கட்டிய சளி கரைய பசுமையான கற்பூரவல்லி இலைகளைத் தேவையான அளவு சேகரித்துக் கொள்ள வேண்டும். இதனை, இளஞ்சூடாக வதக்கி, சாறு எடுத்து, ஒரு தேக்கரண்டி அளவு சாற்றுடன், அதே அளவு தேன் கலந்து குடிக்கக் கொடுக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் குணமாக ஒரு தேக்கரண்டி கற்பூரவல்லி இலைச் சாற்றுடன் ¼ தேக்கரண்டி சர்க்கரை கலந்து உள்ளுக்குள் கொடுக்க வேண்டும்.

ஜலதோசம் கட்டுப்பட இரண்டு நாட்கள் காலை, மாலை வேளைகளில் கற்பூரவல்லி இலைச் சாறு ¼ டம்ளர் அளவுட‌ன் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து குடிக்க வேண்டும்.

கற்பூரவல்லி இலைகளை கசக்கி சாறு பிழிந்து சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்துக் குழப்பி நெற்றியில் பூச தலை வலி குணமாகும்.