காரடையான் நோன்பு உப்பு அடை செய்வது எப்படி?

காரடையான் நோன்பு உப்பு அடை, இனிப்பு அடை என இரு வகையான பதார்த்தங்களை காரடையான் நோன்பின் போது படைப்பது வழக்கம். 

இனி காரடையான் நோன்பு உப்பு அடை செய்முறை பற்றிப் பார்ப்போம்.

 

தேவையான பொருட்கள்

தேவையான பொருட்கள்
தேவையான பொருட்கள்

 

பச்சரிசி மாவு (பதப்படுத்தியது) – 1 கப்

காராமணி (தட்டை பயிறு) – ¼ கப்

உப்பு – தேவையான அளவு

தண்ணீர் – 2 கப்

இஞ்சி – சுண்டு விரல் அளவு

பச்சை மிளகாய் – 3 எண்ணம் (மீடியம் சைஸ்)

 

தாளிக்க

நல்ல எண்ணெய் – 4 ஸ்பூன்

கடுகு – ½ ஸ்பூன்

உளுந்தம் பருப்பு – 3 ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

 

செய்முறை

பச்சரிசி மாவினை பதப்படுத்தும் முறை

முதலில் பச்சரிசியை அரை மணிநேரம் ஊற வைக்கவும். பின் அதனை வடிதட்டில் போட்டு வடித்துக் கொள்ளவும்.

ஊற வைத்த பச்சரிசி
ஊற வைத்த பச்சரிசி

 

தண்ணீர் நன்கு வடிந்தவுடன் மிக்ஸில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

பின்  வாயகன்ற பாத்திரத்தில் மாவினைப் போட்டு வறுக்கவும்.

வறுத்த பச்சரிசி மாவு
வறுத்த பச்சரிசி மாவு

 

நன்கு வறுத்தபின் அதனை சல்லடையில் போட்டு சலித்துக் கொள்ளவும்.

சல்லடையின் மேற்புறத்தில் உள்ள கப்பியை மிக்ஸியில் போட்டு சலித்துக் கொள்ளவும். இதுவே மாவினை பதப்படுத்தும் முறையாகும்.

 

காராமணியை (தட்டைப்பயறு) வெறும் வாணலியில் போட்டு சிவக்க வறுக்கவும்.

வறுத்த தட்டைப் பயறு (காராமணி)
வறுத்த தட்டைப் பயறு (காராமணி)

 

பின் அதனை தண்ணீரில் போட்டு குழைய வேக வைக்கவும்.

பின் காராமணியில் உள்ள தண்ணீரை வடித்து விடவும்.

இஞ்சியை தோல் நீக்கி சுத்தம் செய்து மிக்ஸியில் தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ளவும்.

பச்சை மிளகாயை சிறுதுண்டுகளாக்கவும். கறிவேப்பிலையை தண்ணீரில் அலசி உருவிக் கொள்ளவும்.

வாணலியில் நல்ல எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிதம் செய்யவும்.

தாளிக்கும் போது
தாளிக்கும் போது

 

பின் அதனுடன் அரைத்த இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும்.

இஞ்சி பச்சை மிளகாய் சேர்த்து வதக்கும் போது
இஞ்சி பச்சை மிளகாய் சேர்த்து வதக்கும் போது

 

வாயகன்ற பாத்திரத்தில் தண்ணீரில் தேவையான உப்பினைச் சேர்த்து தள தள என கொதிக்க வைக்கவும்.

தண்ணீர் கொதிக்கும் போது
தண்ணீர் கொதிக்கும் போது

 

பின் அதனுடன் குழைய வேக வைத்த காராமணி, வதக்கிய இஞ்சி பச்சை மிளகாய் கலவை ஆகியவற்றைச் சேர்க்கவும்.

பின் அதனுடன் பதப்படுத்திய பச்சரிசி மாவினை சிறிது சிறிதாக சேர்த்து கிளறிக் கொண்டே இருக்கவும்.

கொதித்த நீரில் அனைத்துப் பொருட்களையும் சேர்த்ததும்
கொதித்த நீரில் அனைத்துப் பொருட்களையும் சேர்த்ததும்

 

மாவுக்கலவை நன்கு சுருண்டு வரும்.

சரியான பதத்தில் மாவு
சரியான பதத்தில் மாவு

 

அதனை இறக்கி மிதமான சூடு இருக்கும்போது மாவுக்கலவையில் சிறுஉருண்டை எடுத்து வடை போல் தட்டவும். இவ்வாறே எல்லா மாவினையும் தட்டவும்.

வடைகளாகத் தட்டி வைத்த போது
வடைகளாகத் தட்டி வைத்த போது

 

இந்த வடைகளை இட்லிப் பானையில் வைத்து அவித்து எடுக்கவும். சுவையான காராடையான் நோன்பு உப்பு அடை தயார்.

சுவையான காரடையான் நோன்பு உப்பு அடை
சுவையான காரடையான் நோன்பு உப்பு அடை

 

இதனை சாவித்திரி விரத வழிபாட்டில் பயன்படுத்தலாம்.

 

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் வேக வைத்த காராமணியை மிக்ஸியில் லேசாக அரைத்துக் கொள்ளலாம்.

விருப்பமுள்ளவர்கள் தேங்காயினை பற்களாகக் கீறிப் போட்டு உப்பு அடை தயார் செய்யலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.