கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு

‘கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு’ என்ற பாடல் கோதை நாச்சியார் ஆண்டாள் அருளிய  கொஞ்சும் தமிழ் என போற்றப்படும் திருப்பாவையின் எட்டாவது பாசுரம் ஆகும்.

பாவை நோன்பின் போது கண்ணனின் வீரச்செயல்களைப் புகழ்ந்து பாடினால் அவன் நமக்கு விரும்பிய பலனைத் தருவான்.

விடிந்து கொண்டிருக்கும் இவ்வேளையில், கண்ணனின் புகழினைப் பாட உன்னுடைய உறக்கத்தை கலைத்து விட்டு வா என்று தூங்கிக் கொண்டிருக்கும் பெண்ணை அழைக்கும் பாசுரம் அழைக்கும் பாசுரம்.

திருப்பாவை பாடல் 8

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு

மேய்வான் பரந்தனக்காண் மிக்குள்ள பிள்ளைகளும்

போவான் போகின்றாரைப் போகாமல் காத்து, உன்னைக்

கூவுவான வந்து நின்றோம். கோதுகலமுடைய

பாவாய் எழுந்திராய் பாடிப்பறை கொண்டு

மாவாய் பிளந்தானை, மல்லரை மாட்டிய

தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்

ஆவாஎன்றுஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

 

விளக்கம்

எப்போதும் மகிழ்ச்சி நிறைந்த பெண்ணே, கிழக்கு வெளுத்து விட்டது. பனிகள் படர்ந்திருக்கும் பசுமையான புற்களை மேய்வதற்காக எருமைகளை அவிழ்த்து விட்டு விட்டார்கள்.

பாவை நோன்பிற்காக நம் கூட்டத்தைச் சார்ந்த பெண்கள் நோன்பு கொண்டாடும் இடத்திற்குச் சென்று கொண்டிருக்கிறார்கள்.

அவர்களை தடுத்து நிறுத்தி உன்னை அழைத்து செல்வதற்காக நாங்கள் வந்திருக்கிறோம்.

கேசி என்ற குதிரைமுக அரக்கனின் வாயைப்பிளந்து அழித்தவனும், சாணூரான், முஷ்டிகன் என்ற மல்லர்களை வென்றவனும், தேவர்களுக்கு எல்லாம் தேவனாக விளங்கும் கண்ணனை நினைத்து பாடி வழிபடுவோம்.

அவ்வாறு செய்தால் அக்கண்ணன் நம்மை வாருங்கள் வாருங்கள் என்று அழைத்து நாம் விரும்பிய பறையை (பலனை) நமக்கு தருவான். ஆதலால் உன்னுடைய உறக்கத்தை கலைத்து உடனே எழுந்து வா.

கிழக்கு வெளுத்தல், எருமைகள் பனிப்புல் மேய அவிழ்த்து விடப்பட்டுள்ளன ஆகியவை விடிந்ததற்கான அடையாளமாக இப்பாடலில் குறிப்பிட‌ப்பட்டுள்ளன.

 

இப்பாடல் குழு வழிபாட்டினை முன்னிறுத்துகின்றது. குழுவில் பலர் வந்த போதும், தம் குழுவைச் சேர்ந்த ஒருவர் வரவில்லை என்பதற்காக, அவர் வீட்டிற்குச் சென்று அவரை எழுப்பிச் செல்ல விரும்புகின்றனர்.

ஆன்மீகத்தில் தான் மட்டும் முன்னேறாமல், தன் நண்பர்களும் தம்மோடு சேர்ந்து உயர் நிலைக்கு வரவேண்டும் என்று நினைக்கின்ற எண்ணம்தான் அனைவருக்கும் மகிழ்ச்சி தரும்.

அத்தகைய கருத்துக்களை சொல்லும் திருப்பாவை, அனைவரும் கற்க வேண்டிய‌ ஒரு சிறந்த வாழ்வியல் நூல்.

கோதை என்ற ஆண்டாள்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.