குங்கிலியம் – மருத்துவ பயன்கள்

குங்கிலியம் கைப்புச் சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டது. வெப்பமுண்டாக்கும்; கோழையகற்றும்; சிறுநீரைப் பெருக்கும். கீல்வாதம், நகச்சுற்று, சீழ்ப்புண், விஷக்கடி, எலும்பு நோய்களைக் குணமாக்கும்.

குங்கிலியத்தைக் கொண்டு, குங்கிலிய வெண்ணெய், குங்கிலிய பற்பம், குங்கிலியத் தைலம் போன்றவைகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்குக் கிடைக்கின்றன. அவற்றையும் வாங்கிப் பயன்படுத்தலாம்.

மேகப்புண், வெட்டை போன்ற நோய்களைக் குணப்படுத்துவதில் இந்த மருந்துகள் முக்கிய இடம் வகிக்கின்றன.தென்னிந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும், வட இந்தியாவில் இமயமலை அடிவாரத்தில் உள்ள காடுகளிலும் விளையக் கூடிய கருமருது மரத்தின் பிசினே குங்கிலியம் எனப்படுகின்றது.

கருமருது மரத்தினைக் கீறி, வடு ஏற்படுத்தப்பட்டு, அதிலிருந்து வடியும் பிசின் சேகரிக்கப்படுகிறது. இது உறைந்து, மருத்துவத்தில் பயன்படும் குங்கிலியமாகிறது. குங்கிலியம் காய்ந்த நிலையில், நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். குங்கிலியத்திற்கு, குக்கில், குக்கிலியம் ஆகிய மாற்றுப் பெயர்களும் உண்டு. இது கற்பூரத் தைலத்தில் கரையும்.

50 கிராம் குங்கிலியத்தை தூள் செய்துக் கொண்டு, ½ லிட்டர் நல்லெண்ணெய் உடன் சேர்த்து, நன்றாகக் காய்ச்சி, கண்ணாடி சீசாவில் பத்திரப்படுத்திக் கொண்டு, மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி தீரும்.

வெள்ளைபடுதல் குணமாக குங்கிலியத்தை நெய்விட்டுப் பொரித்து, தண்ணீர் விட்டு நன்றாகக் குழைத்து, ½ தேக்கரண்டி அளவு உள்ளுக்குக் கொடுக்க வேண்டும்.

1 கிராம் குங்கிலியத்தைத் தூள் செய்து, 1 டம்ளர் பாலில் கலந்து குடிக்க இருமல், மார்புச் சளி, இரத்த மூலம் கட்டுப்படும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் சீதக் கழிச்சல் குணமாக 1 கிராம் குங்கிலியப் பொடியுடன், சிறிதளவு சர்க்கரை சேர்த்து, உள்ளுக்கு கொடுக்க வேண்டும்.

புண்கள் ஆற குங்கிலியக் களிம்பு: குங்கிலியம், மெழுகு, வகைக்கு 100 கிராம், சிறு தீயில் உருக்கி, 350 மி.லி. நல்லெண்ணெய் சேர்த்து, சூடாக இருக்கும்போதே வடிகட்டிக் கொள்ள வேண்டும். இதனைத் துணியில் தடவி, புண்கள் மீது பற்றாகப் போட வேண்டும்.

வெள்ளைக் குங்கிலியம், சிவப்புக் குங்கிலியம் மற்றும் பூனைக்கண் குங்கிலியம் என்கிற மூன்று வகைகள் உண்டு. மருத்துவப் பயன் அனைத்திற்கும் பொதுவானதே. இருப்பினும் அவற்றிற்கென்று தனித்தனியான, சிறப்பு வாய்ந்த மருத்துவப் பயன்களும் உள்ளன.

வெள்ளைக் குங்கிலியம்
நிறம் ஏதுமின்றி இருக்கும்; உள் மூலத்தைக் கட்டுப்படுத்தும்; மாதவிலக்கைச் சீராக்கும்; மூட்டுவலிக்குச் சிறப்பான மருந்துகள் இதிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.

சிவப்புக் குங்கிலியம்
பழுப்பு வெள்ளை அல்லது மஞ்சள் அல்லது பச்சை நிறமாக இருக்கும். விஷக்கடி மருத்துவத்தில் முக்கியமாகப் பயன்படுகின்றது.

கட்டிகள், காயங்கள் போன்றவற்றைக் குணப்படுத்த, சிவப்பு குங்கிலியத்தை, 2 கிராம் அளவில் தூளாக்கி, 1 டம்ளர் பாலில் இட்டுக் கலக்கி, சரியாகும்வரை, தினமும் காலையில் குடித்துவர வேண்டும்.

பூனைக்கண் குங்கிலியம்
உருண்டையானவை, மஞ்சள் அல்லது தங்க நிறம் கொண்டதாகவும், பூனைக்கண் போன்றும் இருக்கும். இதிலிருந்து தயாரிக்கப்படும் தைலம் வீக்கத்தைக் கரைக்கப் பயன்படுகின்றது.