கோதுமை இடியாப்பம் செய்வது எப்படி?

கோதுமை இடியாப்பம் கோதுமை மாவினைக் கொண்டு செய்யப்படும் எண்ணை இல்லாத உணவுப் பொருள் ஆகும்.

கோதுமை பொதுவாக நார்ச்சத்து மிக்கது. எனவே இதனை ஆவியில் வேகவைத்து உண்ணும்போது முழு நார்சத்தும் கிடைப்பதோடு எளிதில் செரிமானமும் ஆகிறது.

கோதுமையில் சப்பாத்தி, தோசை போன்ற உணவுகளையே நாம் வழக்கமாகச் செய்வோம்.

பொதுவாக நாம் அரிசியில் இருந்து இடியாப்பம் தயார் செய்வோம்.

கோதுமைஇடியாப்பம் என்பது கோதுமையினைக் கொண்டு செய்யப்படும் மாற்று உணவு ஆகும். இதனை எல்லோரும் விரும்பி உண்பர்.

இனி சுவையான, சத்தான கோதுமை இடியாப்பம் செய்முறை பற்றிப் பார்ப்போம்.

 

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு – ¼ கிலோ கிராம்

கல் உப்பு – தேவையான அளவு

தண்ணீர் – தேவையான அளவு

 

செய்முறை

முதலில் வாணலியை அடுப்பில் வைத்து நன்கு சூடேறியதும் கோதுமை மாவை போட்டு வறுக்கவும். மாவு நன்கு சூடேறியதும் இறக்கி விடவும்.

மாவினை வறுக்கும்போது
மாவினை வறுக்கும்போது

 

பின் அதனை நன்கு ஆறவிடவும்.

தேவையான அளவு கல் உப்பினை தண்ணீரில் சேர்த்து சூடேற்றவும்.

வறுத்து ஆறவிட்ட கோதுமை மாவில் உப்பு சேர்த்த சுடு தண்ணீரைச் சேர்த்து மாவாகப் பிசையவும்.

இந்த மாவானது திரட்டும் போது கைகளில் ஒட்டாமல் வரும். இதுவே சரியான பதமாகும்.

சரியான பதத்தில் மாவு
சரியான பதத்தில் மாவு

 

 

இம்மாவினை தேவையான அளவு எடுத்து இடியாப்பக் குழலில் இட்டு இட்லித் தட்டில் இடியாப்பமாகப் பிழியவும்.

 

மாவினைப் பிழியும்போது
மாவினைப் பிழியும்போது

 

வரிசையாகப் பிழிய வேண்டும்
வரிசையாகப் பிழிய வேண்டும்

 

அவிப்பதற்கு முன்பு
அவிப்பதற்கு முன்பு

 

பின் இதனை இட்லிப் பானையில் வைத்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

அவித்த பின்
அவித்த பின்

 

சுவையான கோதுமை இடியாப்பம் தயார்.

சுவையான கோதுமை இடியாப்பம்
சுவையான கோதுமை இடியாப்பம்

 

சத்துக்கள் நிறைந்த இதனை சிறு குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.

சர்க்கரை நோயாளிகளுக்கு இவ்வுணவு மிகவும் ஏற்றது.

இந்த இடியாப்பத்துடன் தேங்காய் பால், தேங்காய்ப் பூ, குருமா, சாம்பார் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றினைச் சேர்த்து உண்ணலாம்.

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் கோதுமையை முதலில் வறுத்து பின் அதனை அரைத்து தண்ணீர் ஊற்றி இடியாப்பம் தயார் செய்யலாம்.

விருப்பமுள்ளவர்கள் கடுகு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், உளுந்தம் பருப்பு சேர்த்து தாளித்து அதனுடன் இடியாப்பம் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து கார இடியாப்பமாகவும் உண்ணலாம்.

-ஜான்சிராணி வேலாயுதம்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.