கோரைக்கிழங்கு – மருத்துவ பயன்கள்

கோரைக்கிழங்கு சிறு நீர் பெருக்கும்; வியர்வையை அதிகமாக்கும்; உடல் வெப்பத்தை அகற்றும்; உடல் பலமுண்டாகும்; வயிற்றுப் புழுக்களைக் கொல்லும்; மாதவிடாயை தூண்டும்; குழந்தைகளுக்கான செரிமான சக்தியை அதிகரிக்கும். பதிவுரிமை செய்யப்பட்ட பல மருந்துகளில் கோரைக்கிழங்கு சேர்கின்றது.

இந்தியாவின் சமவெளிப் பகுதிகளில் வளர்கின்ற ஒரு புல்வகைச் சேர்ந்த சிறுசெடி. தாவரம். தாவரத்தின் வேர்க் கிழங்குகளே கோரைக் கிழங்கு எனப்படும். தண்டுகள் மூன்று பட்டையானவை. உறுதியற்றவை.

கோரைக்கிழங்கு இலைகள் தட்டையானவை, கூரானவை, நீண்டவை. கிழங்குகள் முட்டை வடிவமானவை. தமிழகமெங்கும், கடற்கரை ஓரங்கள், காடுகள், பாழ்நிலங்களில் தானே வளர்கின்றது.

கோரைக்கிழங்கு காய்ந்த நிலையில் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். சில நாட்டு மருத்துவர்கள் கோரைக்கிழங்கை முத்தக்காசு என்றும் அழைக்கின்றனர்.

கோரைக்கிழங்கை காய வைத்து தூள் செய்து கொண்டு ½ தேக்கரண்டி வீதம் தினமும் காலை, மாலை இரண்டு வேளைகள் 1 டம்ளர் பாலில் கலந்து குடிக்க மூட்டு வலி, தசை வலி குணமாகும்.

கோரைக்கிழங்கு, காய்ச்சாத பசும் பால் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து உடலில் பூசிக் குளித்து வர வியர்வை நாற்றம் குணமாகும்.

இஞ்சி, கோரைக்கிழங்கு இரண்டையும் சம அளவாக அரைத்து பசையாக்கி தேன் சிறிதளவு சேர்த்து சுண்டைக்காய் அளவு சாப்பிட குடல் புழுக்கள் வெளிப்படும்

கோரைக்கிழங்கு நான்கினை எடுத்து நசுக்கி இரண்டு டம்ளர் நீரில் இட்டு கொதிக்க வைத்து, குடி நீர் செய்து வேளைக்கு 2 தேக்கரண்டி அளவு 2 நாட்கள் உள்ளுக்கு கொடுக்க குழந்தைகளுக்கு ஏற்படும் அஜீரணம் குணமாகும்.

பச்சையான கோரைக் கிழங்குகளைச் சேகரித்து நீரில் கழுவி சுத்தம் செய்து கொண்டு அரைத்து மார்பகத்தல் பூசி வர தாய்ப்பால் சுரப்பு அதிகமாகும்.

கோரைக்கிழங்கு சூரணம் ½ தேக்கரண்டி அளவு காலை, மாலை தேனில் உட்கொள்ள புத்தி கூர்மை அதிகமாகும்.