சாமை புலாவ் செய்வது எப்படி?

சாமை புலாவ் சிறுதானியமான சாமையைக் கொண்டு செய்யப்படும் அருமையான உணவு ஆகும். தினமும் அரிசி உணவினை உண்பவர்களுக்கு சிறுதானிய உணவு மாற்று உணவாகவும், சத்துமிகுந்ததாகவும் இருக்கிறது.

இனி சுவையான சாமை புலாவ் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

சாமை அரிசி – 2 கப் ( 400 கிராம்)

முருங்கை பீன்ஸ் – 200 கிராம்

காரட் – 200 கிராம்

பச்சை பட்டாணி – 100 கிராம்

பெரிய வெங்காயம் – 1 எண்ணம் (சற்று பெரியது)

இஞ்சி – சுண்டு விரல் அளவு

வெள்ளைப் பூண்டு – 4 பற்கள் (பெரியது)

உப்பு – தேவையான அளவு

சுடுதண்ணீர் – 1½ கப்

 

தாளிக்க

நல்ல எண்ணெய் – 3 ஸ்பூன்

பட்டை – ஒரு சிறிய துண்டு

கிராம்பு – 2 எண்ணம்

ஏலக்காய் – ஒரு எண்ணம்

பச்சை மிளகாய் – 1 எண்ணம்

 

அலங்கரிக்க

கொத்த மல்லி இலை – 5 கொத்து

புதினா இலை – தேவையான அளவு

 

செய்முறை

சாமை அரிசியை கழுவி ½ மணி நேரம் ஊற வைக்கவும்.

 

ஊற வைத்த சாமை அரிசி
ஊற வைத்த சாமை அரிசி

 

முருங்கை பீன்ஸை நார் நீக்கி சுத்தம் செய்து சிறுதுண்டுகளாக வெட்டவும்.

காரட்டை கழுவி சிறுதுண்டுகளாக வெட்டவும்.

பச்சைப் பட்டாணியை தோலுரித்து அலசி வைத்துக் கொள்ளவும்.

 

காய்கறிக் கலவைகள்
காய்கறிக் கலவைகள்

 

பெரிய வெங்காயத்தை தோலுரித்து சுத்தம் செய்து சதுரத்துண்டுகளாக வெட்டவும்.

இஞ்சி மற்றும் வெள்ளைப் பூண்டினை தோல் நீக்கி விழுதாக்கிக் கொள்ளவும்.

பச்சை மிளகாயினை கழுவி நேராகக் கீறிக் கொள்ளவும்.

கொத்த மல்லி இலை மற்றும் புதினாவை சுத்தம் செய்து சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

குக்கரை அடுப்பில் வைத்து நல்ல எண்ணெய் ஊற்றவும்.

எண்ணெய் காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து தாளிதம் செய்யவும்.

 

தாளிதம் செய்யும் போது
தாளிதம் செய்யும் போது

 

பின் பெரிய வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுதினைச் சேர்த்து வதக்கவும்.

ஒரு நிமிடம் கழித்து நறுக்கிய முருங்கை பீன்ஸ், காரட், பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கவும்.

 

வெங்காயத்தை வதக்கும் போது
வெங்காயத்தை வதக்கும் போது

 

காய்கறிகளை வதக்கும் போது
காய்கறிகளை வதக்கும் போது

 

ஊற வைத்த சாமை அரிசியை வடித்து குக்கரில் போட்டு அதனுடன் 1½ கப் சுடுதண்ணீர் சேர்த்து ஒரு சேரக் கிளறவும்.

பின் அதில் தேவையான உப்பு சேர்த்து குக்கரை மூடி விடவும்.

 

சாமை அரிசி, சுடுதண்ணீர், உப்பு சேர்த்ததும்
சாமை அரிசி, சுடுதண்ணீர், உப்பு சேர்த்ததும்

 

அடுப்பினை மிதமான தீயில் வைத்து ஒரு விசில் வந்ததும் சிம்மில் ஒரு நிமிடம் வைத்து அடுப்பினை அணைத்து விடவும்.

குக்கரின் ஆவி அடைந்ததும் குக்கரைத் திறந்து பொடியாக நறுக்கிய மல்லி இலை மற்றும் புதினா இலை சேர்த்து ஒரு சேரக் கிளறவும்.

 

குக்கரைத் திறந்ததும்
குக்கரைத் திறந்ததும்

 

சுவையான சாமை புலாவ் தயார்.

 

சுவையான சாமை புலாவ்
சுவையான சாமை புலாவ்

 

இதனுடன் வெங்காய தயிர் பச்சடி, அப்பளம், மொச்சை கிரேவி சேர்த்து உண்ணலாம்.

குறிப்பு

குக்கரினை மேலே குறிப்பிட்டுள்ள விதத்தில் அணைத்து விடவும். தாமதமாக அடுப்பினை அணைத்தால் புலாவ் அடியில் பிடித்துவிடும். விரைவில் அடுப்பினை அணைத்தால் புலாவ் நீர்த்து இருக்கும்.

விருப்பமுள்ளவர்கள் நல்ல எண்ணெய்க்கு பதிலாக நெய் சேர்த்து புலாவ் தயார் செய்யலாம்.

– ஜான்சிராணி வேலாயுதம்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.