சுபிட்சம் தரும் சுந்தர காண்டம்

இராமாயணத்தில் வரும் சுந்தர காண்டம் பகுதியை தினமும் படிப்பவர்களுக்கு கஷ்டங்கள் விரைந்து மறையும். வெற்றிகள் விரைவில் ஓடி வரும்.


சுந்தர காண்டம் என்று பெயர் சொல்லுவார்
சுகம் தரும் சொர்க்கம் என்று கருத்தில் கொள்வார்
கண்டேன் சீதையை என்று காகுத்தனிடம் சொன்ன
கருணை மிகு இராமபக்தன் ஆஞ்சநேயர் பெருமை இது

அஞ்சனை தனையன் அலைகடல் தாண்டவே
ஆயுத்தமாகி நின்றார் ராம பாணம் போல்
ராட்சசர் மனைநோக்கி ராஜ கம்பீரத்தோடு
ராமதூதனும் விரைந்தே சென்றான்

அங்கதனும் ஜாம்பவானும் அனைத்து வானரங்களும்
அன்புடன் விடை கொடுத்து வழியனுப்பினரே
வானவர்கள் தானவர்கள் வருணாதி தேவர்கள்
வழியெல்லாம் நின்று பூமாரி பொழிந்தனரே

மைநாக பர்வதம் மாருதியை உபசரித்து
மாருதியும் மைநாகத்தை திருப்தி செய்து
சிரசியை வெற்றிக்கொண்டு சிம்ஹிகை வதம் செய்து
சந்தோசமாய் சமுத்திரத்தை தாண்டியே இலங்கை சேர்ந்தார்

இடுக்காகப் பேசியே இலங்கையின் தேவதையை
இடக்கையால் தண்டித்தவன் இதயத்தை கவர்கிறான்
அழகான இலங்கையில் அன்னை ஜானகியை
அங்குமிங்கும் தேடியே அசோகவனத்தில் கண்டான்

சிம்சுபா மரத்தடியில் ஸ்ரீராமனைத் தியானம் செய்யும்
சீதாப்பிராட்டியைக் கண்டு சித்தம் கலங்கினார்
ராவணன் வெகுண்டிட ராட்சஸியர் கலங்கிட
வைதேகி அரண்டிட வந்தான் துயர் துடைக்க

கருணாழியைக் கொடுத்து ஜெயராமன் சரிதம் சொல்லி
சூடாமணியைப் பெற்ற சுந்தர ஆஞ்சயநேயர்
அன்னையின் கண்ணீர் கண்டு அரக்கன் மேல் கோபம் கொண்டு
அசோகவனம் அழித்து அனைவரையம் ஒழித்தான்

பிரம்மாஸ்திரத்தினால் பிணைத்திட்ட ஆஞ்சநேயர்
பட்டாராமன் தன் பெருமையை எடுத்துரைக்க
வெகுண்ட இலங்கை வேந்தன் வையுங்கள் தீ வாலுக்கென்றான்
வைத்த நெருப்பினால் வெந்ததே இலங்கை நகர்

அரக்கனின் அகந்தையை அழித்திட்ட அனுமானும்
அன்னை ஜானகியிடம் அனுமதி பெற்றுக் கொண்டார்
ஆகாய மார்க்கத்தில் ஆஞ்சநேயர் தாவி வந்தார்
அன்னையை கண்டுவிட்ட ஆனந்தத்தில் மெய்மறந்தார்

ஆறாத சோகத்தில் ஆழ்ந்திருந்த ராமனிடம்
கைகூப்பிக் கண்டேன் சீதையை என்றான்
வைதேகி வாய்மொழியை அடையாளமாகக் கூறி
சொல்லின் செல்வன் ஆஞ்சநேயர் சூடாமணி அளித்தார்

மனம் கனிந்து மாருதியை மார்போடு அணைத்து ராமர்
மைதிலியை சிறைமீட்க மறுகணம் சித்தமானார்
ஆழ்கடலில் அற்புதமாய் அணைகட்டிப் படைகள்சூழ
அனுமனும் இலக்குவனும் உடன் வரப்புறப்பட்டார்

அழித்திட்டான் ராவணனை ஒழித்திட்டான் அதர்மத்தை
அன்னை சீதாதேவியை கண்டு அடைந்திட்டான்
அயோத்தி சென்று ராமர் ஜெகம் புகழ ஆட்சி செய்தார்
அவனை சரணடைந்தோருக்கு அவன் அருள் என்றும் உண்டு

எங்கெங்கு ரகுராமன் கீர்த்தனமோ கரம்குவிந்து
மனம் உருகி நீர் சொரிந்து ஆனந்தத்திலே மூழ்கி
கேட்கும் பரிபூரண பக்தனே ஸ்ரீ ஆஞ்சனேயா – உன்னைப்
பணிகின்றோம் பன்முறை உன்னைப் பணிகின்றோம்

வரும் புத்தாண்டு முதல் எல்லோரும் இதனை தினந்தோறும் பாராயணம் செய்து வளமான வாழ்வைப் பெறுங்கள்.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.