சுய கட்டுப்பாடு

ஐம்பொறிகளையும் அடக்கி வாழும் பண்பு ஒருவனின் ஏழு பிறவிக்கும் பாதுகாப்பைத் தரும் என்பது  வள்ளுவர் வாக்கு. எனவே மனிதன் பாதுகாப்பாக, இன்பமாக வாழ புலன் அடக்கம் வேண்டும். அதாவது சுயகட்டுப்பாடு வேண்டும்.

பொறி நுகர்வில் வெறி கொண்டவன் புலையனாய் நிலை குலைந்து வீழ்வான். அவ்வாறு வெறி கொள்ளாமல் அறிவால் புலன்களை அடக்கி சுய கட்டுப்பாட்டுடன் ஒருவன் வாழ வேண்டும்.

கண்ணால் காண்பது, மூக்கால் முகர்வது, வாயால் நுகர்வது, செவியால் கேட்பது, மெய்யால் ஸ்பரிசிப்பது என்னும் ஐந்து துறைகளில் நெறிமுறையே ஒழுகி வர வேண்டும். அப்போதுதான் அவன் மனிதனாக நீதிமானாக வாழ முடியும்.

சுய கட்டுப்பாடு இல்லாத மனிதன் பழிபாவங்களை அடைந்து துயரங்களிலே அகப்பட்டுக் கொண்டு தவிக்க வேண்டும். எனவே மனிதன் சுய கட்டுப்பாட்டுடன் உடல், உள்ளம், உணர்வு, உயிர் என்னும் நான்கு நிலைகளிலும் பண்போடு வாழ வேண்டும்.

சுய கட்டுப்பாடு என்பது பெரியவர்களுக்கு மட்டுமல்ல, சிறியவர்களுக்கும் மிக மிக அவசியம். மாணாக்கர்களுக்குப் பெரிதும் இன்றியமையாதது.

இன்றைய சூழ்நிலையில் மாணவர்களைக் கவர்கின்ற டி.வி., சி.டி., செல்போன், கம்ப்யூட்டர் கேம் என்பனவற்றைத் தேவையான போது மட்டுமே பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவற்றிற்கு அடிமையாகி விடக் கூடாது. மாணவர் தம் கல்வி பாதிக்கக் கூடாது. அதனால் இன்றைய மாணவர் உலகம் இந்த சுய கட்டுப்பாட்டை உணர்ந்து, மதித்து, செயல்;படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும்.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.