தந்தையை இழந்த மகளின் ஏக்கம்

தோளின் மேலே என்னைச் சுமந்தாய்

துவண்ட போதென் துன்பம் துடைத்தாய்

என்றும் உன்னை மனதில் வைக்கும் உந்தன் பிள்ளையே

எங்கு சென்றாய் என்னைப் பிரிந்து எந்தன் தந்தையே?

 

கண்ணில் நீர் பொங்கி அழுதேனே

கருத்தில் உனை வைத்துத் தொழுதேனே

எந்தன் அன்புதான் தெரியாதா?

ஏங்கும் என்மனம் புரியாதா?

 

அழுகின்றேனே உந்தன் பிள்ளை

ஆறுதல் சொல்ல யாரும் இல்லை

அப்பா உன்னைக் காணவில்லை

அகிலத்தில் எங்கும் தெய்வம் இல்லை

 

நீயில்லா இந்த உலகத்திலே

நிம்மதி இல்லை நெஞ்சினிலே

உன்னை நினைத்து இந்த பெண்கிளி

உருகிப் பாடுதொரு சிறுகவி

 

துயரத்தைச் சொல்ல மொழிகள் இல்லை

துடிக்கின்றதே இங்கு உந்தன் பிள்ளை

அன்பு காட்டவே யாரும் இல்லை

ஆலமரத்தில் இங்கு வேரும் இல்லையே

 

 

 

த . கிருத்திகா

 

One Reply to “தந்தையை இழந்த மகளின் ஏக்கம்”

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.