தான்றிக்காய் – மருத்துவ பயன்கள்

தான்றிக்காய் பழங்கள் துவர்ப்புச் சுவையை அதிகமாக்கும்; கோழையகற்றும்; மலமிளக்கும்; உடலைப் பலப்படுத்தும். வயிற்றுக் கோளாறுகளுக்கும், அஜீரணத்திற்கும் மிகவும் ஏற்றவை.

மூளையைப் பலப்படுத்தவும், கண் எரிச்சலைக் குறைக்கவும் பயன்படுகின்றது. மூலம், தொழுநோய், முறைக்காய்ச்சல், காய்ச்சல் ஆகியவற்றையும் குணமாக்கும். பாதியளவிற்கு பழுத்த பழங்கள் (செங்காய்) பேதிமருந்தாகப் பயன்படுகின்றன.

உறுதியான வேர்களுடன் கூடிய பெரிய மரம், இலைகள் பெரியவை, 15-25 செ.மீ. வரை நீளமானவை, கிளைகளின் நுனிகளில் கொத்தாகக் காணப்படும்.

பூக்கள் சிறியவை, வெளிறிய பச்சை நிறமானவை, நெருடலான மணத்துடன், சிறிய காம்புகளில் காணப்படும். பழங்கள் 4 செ.மீ. வரை நீளமானவை. நீள்வட்ட வடிவத்தில் பழுப்பு நிறத்தில் இருக்கும். அடர்த்தியாக மூடப்பட்ட மயிரிழைகளில் காணப்படும்.

மேற்கு இந்தியாவின் வறண்ட பகுதிகளைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் பொதுவாகக் காணப்படுகின்றது. இலையுதிர்க்காடுகளில் உயரம் அதிகமான மரங்கள் காணப்படுகின்றன.

தான்றிக்காய் சூரணம் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். மரக்கட்டைகள் ஈரத்தைத் தாங்கக்கூடிய தன்மை கொண்டவை. இவை, படகுகள், வேளாண் கருவிகள் செய்யப் பயன்படுகின்றன. மரத்தின் பட்டை, துணிகள் மற்றும் தோலுக்கு சாயமேற்றப் பயன்படுகின்றது.

குறிப்பு:- தான்றிக்காயின் உள்ளிருக்கும் கொட்டையை நீக்கி, காயின் மேல்தோலை மட்டுமே மருத்துவத்தில் பயன்படுத்த வேண்டும்.

ரத்தமூலம் குணமாக தான்றிக்காயைக் கொட்டை நீக்கி, தோலை, கருகாமல், இலேசாகச வறுத்து, தூள் செய்து, 1 கிராம் அளவு, சிறிதளவு சர்க்கரை, 1 டம்ளர் மோருடன் கலந்து, காலை, மாலை உள்ளுக்குச் சாப்பிட வேண்டும்.

பல்வலி குணமாக தான்றிக்காய்த் தூளால் பல்துலக்கிவர வேண்டும்.
புண், சிரங்குகள் குணமாக காயை நீர்விட்டு உரைத்து, பசையாக்கி, பாதிக்கப்பட்ட இடத்தில் பூச வேண்டும்.

கண்பார்வை தெளிவடைய தான்றிக்காய் தூள் 1 தேக்கரண்டி, ஒரு டம்ளர் நீருடன் கலந்து காலை, மாலை தொடர்ந்து 4 வாரங்கள் சாப்பிட வேண்டும்.

திரிபாலா சூரணம்:
தான்றிக்காய் திரிபாலா சூரணத்தில் ஒரு மருந்துப் பொருளாகச் சேர்கின்றது.