தாமரை – மருத்துவ பயன்கள்

தாமரை மலர்  இனிப்பு, துவர்ப்புச் சுவைகளும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. தாது வெப்பத்தைக் குறைக்கும்; குளிர்ச்சியுண்டாக்கும்; கோழையகற்றும்.தாமரை விதை, உடலை பலமாக்கும். தாமரை கிழங்கு  உள்ளுறுப்புகளின் புண்களை ஆற்றும்.

தாமரை கொடி வகையைச் சார்ந்த‌ தாவரம். வேர்க்கட்டுள்ள கிழங்கிலிருந்து நேராக வளரும் . நீர் ஒட்டாத, மெழுகுப்பூச்சு கொண்ட, பெரிய உருண்டையான இலைகளை நீர்ப்பரப்பில் பெற்றிருக்கும்.

தாமரை பெரிய, பகட்டான மலர்களைக் கொண்டது. மலர்கள் வெள்ளை அல்லது சிவப்பு நிறமாகக் காணப்படும். இவை முறையே வெண் தாமரை, செந்தாமரை என்கிற பெயர்களால் வழங்கப்படும்.

தாமரை ஓட்டமில்லாத நீர் நிலைகளில் மட்டுமே வளரும். பெரும்பாலும், கோயில் குளங்களில் காணலாம். தாமரை மலர்கள், வழிபாடு மற்றும் பூசைகளுக்குரியவை, தாமரை பூ, விதை, கிழங்கு ஆகியவை அதிகமான மருத்துவப் பயன் கொண்டவை.

தாது பலம் பெற, ஒரு கிராம் தாமரை விதையை அரைத்து, பாலில் கலந்து, காலை, மாலை சாப்பிடு வர வேண்டும்.

10 கிராம் தாமரைப்பூ, இதழ்களை ஒரு லிட்டர் நீரில் இட்டுக் காய்ச்சி, ¼ லிட்டராக்கி, வடிகட்டி, காலை, மாலை சாப்பிட்டுவர உடல் சூடு குணமாகும்.

தாமரை கிழங்கினை அரைத்து, எலுமிச்சம்பழ அளவு, தினமும் காலையில் பாலில் கரைத்துக் குடித்துவர பார்வை மங்கல் குணமாகும்.

தாமரை விதையைத் தேனுடன் அரைத்து, நாக்கில் தடவிவர வாந்தி, விக்கல் குணமாகும்.

நிழலில் உலர்த்திய வெண் தாமரை இதழ்கள் ஒரு கிலோ அளவு, மூன்று லிட்டர் நீரில் இட்டு, ஓரளவு ஊறவைத்து, மறுநாள் ஒரு லிட்டர் அளவாக காய்ச்சி, வடிகட்டி, ஒரு கிலோ சர்க்கரை கலந்து, தேன் பதமாகக் காய்ச்சி வைத்துக்கொண்டு, 2 தேக்கரண்டி, சிறிதளவு நீருடன் கலந்து சாப்பிட்டுவர வேண்டும். உடல் சூடு, தாகம் ஆகியவை குறையும். கண்கள் குளிர்ச்சியடையும்.

வெண்தாமரை – மலர்கள் வெண்மையானவை. தாமரையின் அனைத்து மருத்துவக் குணங்களும் இதற்கும் பொருந்தும். காம்புகள், துவர்ப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டவை.

வெண்தாமரை விதைகள், சிறுநீர் பெருக்கும், உடல் சூட்டைத் தணிக்கும். தண்டு, இலை ஆகியவை செரியாமை, பேதி ஆகியவற்றைக் குணமாக்கும்.

வெண்தாமரை பூ, உடல் வெப்பத்தால் ஏற்படும் கண் எரிச்சல், காய்ச்சல், நீர்வேட்கை ஆகியவற்றைக் குணமாக்கும்.

தாமரை மலரின் கொட்டையிலிருக்கும் பருப்பு புரதச் சத்து மிகுந்தது, நீடித்துச் சாப்பிட ஆண்மையைப் பெருக்கும். பருப்பைத் தூள் செய்து, பானம் தயாரித்து அருந்தும் பழக்கம் பிலிப்பைன்ஸ் மக்களிடம் உள்ளது.

வெண் தாமரை ஷர்பத் தயாரித்து சாப்பிட, இரத்தமூலம், சீதபேதி, ஈரல் நோய்கள் குணமாகும்; இருமல் கட்டுப்படும்; மூளைக்குப் பலம் தரும், மகரந்தங்களை உலர்த்தி பாலிலிட்டு குடிக்க பெண் மலட்டுத் தன்மை குணமாவதாக நம்பப்படுகிறது.

இரத்தக் கொதிப்பு கட்டுப்பட வெண் தாமரை இதழ்களை நன்கு உலர்த்தி, பொடி செய்து கொண்டு, 1½ தேக்கரண்டி அளவு, தேனில் குழைத்துச் சாப்பிட வேண்டும்.

கர்ப்பிணிகளுக்குப் பசி எடுக்க வெண்தாமரைப்பூவை அரைத்து, எலுமிச்சம்பழ அளவு, பசும்பாலில் கரைத்து உள்ளுக்குச் சாப்பிட வேண்டும்.

Comments are closed.