திருஅங்கமாலை

திருஅங்கமாலை என்பது திருநாவுக்கரசரால் திருப்பூந்துருத்தி என்னும் ஊரில் வைத்து சிவபெருமானைப் போற்றிப் பாடப்பெற்ற பாடல் ஆகும்.

நம் உடலின் ஒவ்வொரு உறுப்பும் இறைவனையே நாட வேண்டும் என்று சொல்லி நல்வழிப்படுத்தும் வண்ணம் பாடப்பட்டது திருஅங்கமாலை.

இதை இரவில் கோயில்களில் பள்ளியறை பூஜையின் போது பாடுகின்றார்கள். பெரும்பாலான பக்தர்கள் இரவில் தூங்குவதற்கு முன்பு இதைப் பாடுகிறார்கள்.

திருஅங்கமாலை

தலையே நீவணங்காய்! – தலை

மாலை தலைக்கணிந்து

தலையா லேபலி தேருந் தலைவனைத்

தலையே நீவணங்காய்!

கண்காள் காண்மின்களோ! – கடல்

நஞ்சுண்ட கண்டன்றன்னை

எண்டோள் வீசிநின் றாடும்பி ரான்றன்னைக்

கண்காள் காண்மின்களோ!

செவிகாள் கேண்மின்களோ! – சிவன்

எம்மிறை செம்பவள

எரிபோல் மேனிப்பி ரான்திற மெப்போதும்

செவிகாள் கேண்மின்களோ!

மூக்கே நீமுரலாய்! – முது

காடுறை முக்கணனை

வாக்கே நோக்கிய மங்கைம ணாளனை

மூக்கே நீமுரலாய்!

நெஞ்சே நீநினையாய்! – நிமிர்

புன்சடை நின்மலனை

மஞ்சா டும்மலை மங்கை மணாளனை

நெஞ்சே நீநினையாய்!

கைகாள் கூப்பித்தொழீர்! – கடி

மாமலர் தூவிநின்று

பைவாய்ப் பாம்பரை யார்த்த பரமனைக்

கைகாள் கூப்பித்தொழீர்!

ஆக்கை யாற்பயனென்? – அரன்

கோயில் வலம்வந்து

பூக்கையா லட்டிப் போற்றியென் னாதஇவ்

ஆக்கை யாற்பயனென்?

கால்க ளாற்பயனென்? – கறைக்

கண்ட னுறைகோயில்

கோலக் கோபுரக் கோகர ணஞ்சூழாக்

கால்க ளாற்பயனென்?

உற்றா ராருளரோ? – வுயிர்

கொண்டு போம்பொழுது

குற்றா லத்துறை கூத்தனல் லால்நமக்

குற்றா ராருளரோ?

இறுமாந் திருப்பன்கொலோ? – ஈசன்

பல்கணத் தெண்ணப்பட்டுச்

சிறுமா னேந்திதன் சேவடிக் கீழ்ச்சென்றங்கு

இறுமாந் திருப்பன்கொலோ?

தேடிக் கண்டுகொண்டேன்! – திரு

மாலொடு நான்முகனும்

தேடித் தேடொணாத் தேவனை யென்னுளே

தேடிக் கண்டுகொண்டேன்!