தேவையற்றதை நீக்கினால்

ஓர் அற்புதமான சிற்பி ஒருநாள் தெருவில் போய்க் கொண்டிருந்தார். அவர் ஒரு கடையருகே கனத்த பாறாங்கல் ஒன்றைப் பார்த்தார்.

ஏதோ பெரிய புதையலைப் பார்த்த மகிழ்ச்சி அவருக்கு ஏற்பட்டது.

அந்தக் கடைக்காரரிடம், ‘ஐயா, இந்தப் பாறாங்கல் தங்களுக்குத் தேவையா அல்லது இதை நான் எடுத்துச் செல்லலாமா?’ என்று கேட்டார்.

‘தாராளமாய் எடுத்துச் செல்லுங்கள். இது இந்த இடத்தில் பெரிய இடையூறாய்க் கிடக்கிறது. போவோர் வருவோரெல்லாம் இடறி விழுகின்றனர்! என்றார் கடைக்காரர்.

பாறாங்கல்லை உருட்டிச் சென்ற அந்த சிற்பி, அதை நுட்பமாகச் செதுக்கி அற்புதமான கடவுள் சிலை ஒன்றை உருவாக்கினார்.

அந்தச் சிலையைக் கடைத்தெருவிற்கு விற்பனைக்குக் கொண்டு வந்தார்.

போட்டி போட்டுக் கொண்டு மக்கள் அதை விலைக்குக் கேட்டார்க‌ள். அப்படிக் கேட்டவர்களுள் கல்லைக் கொடுத்த கடைக்காரரும் ஒருவர்.

முடிவில் அந்தக் கடைக்காரரே அதிக விலை கொடுத்து அந்தச் சிலையைப் பெற்றுக் கொண்டார்.

அந்த சிற்பியை மறந்துவிட்ட அந்தக் கடைக்காரர், “இந்த அற்புதமான சிலைக்குரிய கல்லை எந்த மலையிலிருந்து எடுத்து வந்தீர்கள்?” என்று கேட்டார்.

அதற்கு சிற்பி, “வேறு எங்கிருந்தும் இல்லை. தங்கள் கடை வாசலில் தான் இதைக் கண்டெடுத்தேன்” என்று கூறினார்..

“என்னை நினைவில்லையா தங்களுக்கு? ஆறு மாதங்களுக்கு முன் இடையூறாய்க் கிடக்கிறது என்று சொல்லி என்னிடம் நீங்கள் கொடுத்த கல் தான் இது” என்றார் சிற்பி.

கடைக்காரர் வியந்தார்.

“ஆம். தங்கள் பார்வையில் இது தடைக் கல்லாய்த் தெரிந்தது. என் பார்வையில் கடவுளைப் பொதிந்து வைத்திருக்கும் சிற்பக் கல்லாய்த் தெரிந்தது” என்றார் சிற்பி.

“வேண்டாத பகுதியையெல்லாம்செதுக்கி எடுத்தேன். உள்ளே இருந்த கடவுளின் உருவம் வெளிப்பட்டது!” என்றார் சிற்பி.

தேவையற்றதை நீக்கினால் உள்ளே உள்ள சிறப்பு வெளியே வரும்.

 

கதையின் நீதி

நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு மிகச்சிறந்த மனிதன் இருக்கின்றான். நாம் நமது தேவையற்ற இழிந்த குணங்களை நீக்கினாலே போதும்; அந்த சிறந்த மனிதன் வெளிப்படுவான்.

நம்மைச் செதுக்கும் சிற்பியாக நாமே தான் இருக்க வேண்டும்.

 

One Reply to “தேவையற்றதை நீக்கினால்”

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.