நஞ்சறுப்பான் மூலிகை – மருத்துவ பயன்கள்

நஞ்சறுப்பான் இலை விஷ நச்சுகளை முறிக்கும்; வாந்தி உண்டாக்கும். உலர்ந்த வேர்கள் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்த பயன்படுகின்றன. வேரின் சாறு ஆஸ்துமாவை கட்டுப்படுத்துகின்றது.

இது நீண்ட சதை நிறைந்த வேர்களுடைய, சுற்றிப்படரும் கொடி வகைத் தாவரமாகும். இலைகள் முட்டை வடிவமானவை. எதிர் எதிராக தண்டில் அமைந்திருக்கும் 5 –10 செமீ நீளத்தில் பெரும்பாலும் நுனியை நோக்கியிருக்கும்.

பூக்கள் வெளிறிய மஞ்சள் நிறத்துடன் உட்பக்கம் இளஞ்சிவப்பாக சிறிய கொத்துகளில் காணப்படும். பழங்கள், பல நுண்ணிய விளிம்பு கோடுகளுடன் காணப்படும். தென்னிந்தியாவில் பொதுவாக சமவெளிகள் மலைப் பகுதிகளில் 1000 மீ உயரம் வரை பரவிக் காணப்படுகின்றது.

கரிப்பாலை, நஞ்சு முறிச்சான் கொடி, கொடிப்பாலை, அந்தமூல், காகித்தம் ஆகிய மாற்றுப் பெயர்களும் இந்த தாவரத்திற்கு உண்டு. இலை, வேர், ஆகியவை சிறப்பான மருத்துவப் பயன் கொண்டவை.

நஞ்சறுப்பான் இலை, வேர், கைப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை. வியர்வையைப் பெருக்கும்; கோழையகற்றும்; விஷ நச்சுகளை முறிக்கும்; வாந்தி உண்டாக்கும்.

உலர்ந்த வேர்கள் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்த பயன்படுகின்றன. வேரை காய்ச்சி வடித்த சாறு மூச்சுக்குழல் அழற்சிக்கு உபயோகமாகின்றது. மேலும் இதன் வாந்தியை உண்டாக்கும் குணத்தால் ஆஸ்துமாவை கட்டுப்படுத்துகின்றது.

ஆஸ்த்மாட்டிகா என்கிற தாவரவியல் சிற்றினப் பெயர் இது காசநோய்க்கு சிறப்பாக உபயோகப்படும் என்பதை குறிக்கின்றது.

ஆஸ்துமா கட்டுபட நஞ்சறுப்பான் இலைகளை நிழலில் உலர்த்தி, தூள் செய்து வைத்துக் கொண்டு ¼ முதல் ½ கிராம் அளவு தினமும் 3 வேளைகள் தேனில் குழைத்து சாப்பிட்டு வரவேண்டும்.

நஞ்சை வெளியாக்க இலைகளை நன்கு அரைத்து, எலுமிச்சம் பழ அளவு உள்ளுக்கு கொடுக்க வேண்டும். அல்லது இலை, வேர் ஆகியவற்றை உலர்த்தி தூள் செய்து வைத்துக் கொண்டு, 2 தேக்கரண்டி அளவுடன் சிறிதளவு மிளகுத் தூள் கலந்து தேனில் குழைத்து உள்ளுக்கு கொடுக்க வேண்டும்.

குழந்தைகளுக்கான கக்குவான் குணமாக இலைச் சூரணம் ¼ தேக்கரண்டி அளவு தேனில் குழைத்து உள்ளுக்கு கொடுக்க வேண்டும்.