நாட்டிற்கோர் கண்மணி நமது தமிழ்ப் பெண்மணி

பெற்றோர் நெஞ்சம் பெரிதுவக்க

பைந்தமிழ் சாத்திரம் பலவும்

கற்றோர் வாழென வாழ்த்துரைக்க

குறளும் ஔவையும் துணையிருக்க

சுற்றம் யாவும் சூழ்ந்திருக்க வாழ்வில்

சுவைகள் என்றும் நிறைந்திருக்க

குற்றம் குறைகள் எவையுமிலாது

குத்து விளக்காய் ஒளிர்பவளே

நாட்டிற்கோர் கண்மணி நமது

தமிழ்ப் பெண்மணி

 

 

பள்ளி கல்லூரி சென்றிடுவாள் பல்துறை

பட்டமும் அறிவும் பெற்றிடுவாள்

துள்ளி விளையாடி மகிழ்ந்திடுவாள் தன்

தோழியர் யாவரையும் சேர்த்திடுவாள்

தெள்ளு தமிழில் பாடிடுவாள் நம்

தென்னவர் பெருமை பேசிடுவாள், அவளே

நாட்டிற்கோர் கண்மணி நமது

தமிழ்ப் பெண்மணி

 

 

உழவுத் தொழிலைப் புரிந்தாலும் அரசின்

உயர் நிலையை அடைந்தாலும்

அழகுக் கலையில் தேர்ந்தாலும் மண்ணில்

அரிதான மருத்துவராய் மலர்ந்தாலும்

வழக்கு அறிஞர் என்றாலும் கணினி

வங்கிப் பணியும் ஆனாலும்

பழகும் பாங்கில் பணிவும்

பாசமும் படைத்தவளே

நாட்டிற்கோர் கண்மணி நமது

தமிழ்ப் பெண்மணி

 

உடையைக் கண்டு ஆடாமல் பித்த

உரையைக் கேட்டும் ஓடாமல்

நடையை நாடியும் மயங்காமல் வாகனம்

வசதியை கண்டும் வியக்காமல்

படையைப் பார்த்தும் கலங்காமல் தன்

பாதையைப் பார்த்து நடப்பவளே

நாட்டிற்கோர் கண்மணிநமது

தமிழ்ப் பெண்மணி

 

 

பிறந்த வீட்டின் கண்ணாக பின்னர்

புகுந்த வீட்டின் பொன்னாக

உறவினர் யாவரும் போற்றும்

உயர்விற் சிறந்த பெண்ணாக

கறந்த பாலின் குணத்தோடு இந்தக்

கடல்சூழ் உலகில் நிலைப்பவளே

நாட்டிற்கோர் கண்மணி நமது

தமிழ்ப் பெண்மணி

-த. சுப்பிரமணி, சென்னை
9841150759, 9499909657
tsubramani_iit@yahoo.com

 

One Reply to “நாட்டிற்கோர் கண்மணி நமது தமிழ்ப் பெண்மணி”

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.