63 நாயன்மார் 9 தொகையடியார்

63 நாயன்மார் மற்றும் 9 தொகையடியார் யார் யார் என்று பார்ப்போம்.

63 நாயன்மார்

1. திருநீலகண்டர்: சிவனடியார்களுக்கு திருவோடு கொடுத்து அறம் புரிந்த குயவர்.

2.இயற்பகையார்: இல்லையென்னாது எதையும் அளித்தவர். தம் மனைவியையே சிவனடியார்க்கு மனமுவந்து அளித்த வணிகர்.

3.இளையான்குடி மாறர்: வறுமையிலும், நள்ளிரவிலும் அடியார்க்கு அமுது அளித்த வேளாளர்.

4.மெய்பொருள் நாயனார்: அடியார்கள் திருவேடத்தையே மெய்பொருளாகக் கொண்டவர்.

5.விறன்மிண்ட நாயனார்: தேவாசிரிய மண்டபத்தில் வீற்றிருந்த சிவனடியார்களை வணங்காமையால் சுந்தரரையும் பகைத்த வேளாளர்.

6.அமர்நீதி நாயனார்: அடியார் கொடுத்த கோவணம் மறைந்ததற்காக ஈடு செய்ய தன் மனைவி, மக்கள், சொத்துக்களுடன் தன்னையும் சிவனடியார்க்கு அர்ப்பணம் செய்த வணிகர்.

7.எறிபத்த நாயனார்: கையிலிருந்த மழுவாயுதத்தால் சிவனடியார்களின் பகைவரைக் (பட்டத்து யானையை) கொன்று சைவத்தை வளர்த்தவர்.

8.ஏனாதிநாத நாயனார்: திருநீற்றின் பொலிவைக் கண்டு அதிசூரனைக் கொல்லாமல் தாமே இறந்தவர்.

9.கண்ணப்ப நாயனார்: சிவபெருமானுக்குத் தம் கண்களையும் கொடுத்த வேடுவர்.

10.குங்கிலியக் கலய நாயனார்: நாடோறும் சிவபெருமானுக்குக் குங்கிலியத் தூபமிட்ட மறையவர்.

11.மானக்கஞ்சாற நாயனார்: தம் மகளின் நீண்ட கூந்தலைச் சிவனடியாரின் பஞ்சவடிக்காக அளித்த வேளாளர்.

12.அரிவாட்டாய நாயனார்: பூசைப் பொருள்கள் தவறித் தரையில் உள்ள நிலவெடிப்பில் சிந்தியமையால் தம் ஊட்டியை தாமே அறுக்க முனைந்த வேளாளர்.

13.ஆனாய நாயனார்: பஞ்சாட்சரத்தை வேய்ங்குழலில் இசைத்து முக்தி பெற்ற யாதவர்.

14.மூர்த்தி நாயனார்: சந்தனக் கட்டை கிடைக்காதபோது தம் முழங்கையைத் தேய்த்து இறைவனுக்கு காப்பிட முனைந்த வணிகர்.

15.முருக நாயனார்: மலர் மாலைகள் தொடுத்து இறைவனை வழிபடும் திருப்பணியில் ஈடுபட்ட மறையவர்.

16.உருத்திர பசுபதி நாயனார்: நாடோறும் திருவுருத்திர மந்திரங்களை ஓதி முக்தியடைந்த மறையவர்.

17.திருநாளைப் போவார் நாயனார்: பறையர் குலத்தில் தோன்றியவர். தில்லையில் தீக்குள் புகுந்து வேதியராகி முக்தியடைந்தவர்.

18.திருக்குறிப்புத் தொண்டர் நாயனார்: அடியார்களின் ஆடைகளின் அழுக்கு நீக்கி உதவியவர்.

19.சண்டேசுவர நாயனார்: சிவபூசைக்குரிய பாற்குடங்களை உதைத்த தந்தையின் கால்களை வெட்டிய மறையவர்.

20.திருநாவுக்கரசு சுவாமிகள்: சைவமும், தமிழும் தழைக்கத் தேவாரம் பாடியவர். புறச் சமய இருளை நீக்கிய வேளாளர்.

21.குலச்சிறை நாயனார்: பாண்டிய மன்னனின் முதல் அமைச்சராக இருந்து சைவ நெறியைக் காத்தவர்.

22.பெருமிழலைக் குறும்ப நாயனார்: சுந்தரமூர்த்தி நாயனாரையே தொழுது அவரோடு சிவப்பேறு பெற்றவர்.

23.காரைக்காலம்மையார்: இறைவனருளால் இருமுறை மாயமாங்கனி பெற்றவர். இறைவனால் அம்மையே என அழைக்கப்பட்டவர்.

24.அப்பூதியடிகள்: திருநாவுக்கரசரின் திருப்பெயரை ஓதிச் சிவப்பேறு பெற்றவர்.

25.திருநீலநக்க நாயனார்: திருஞான சம்பந்தரின் திருமணத்தை தரிசித்துச் சிவப்பேற்றை அடைந்த மறையவர்.

26.நமிநந்தியடிகள் நாயனார்: சமணர்கள் எண்ணெய் தர மறுத்தமையால் குளத்து நீரையே கொண்டு விளக்கு எரித்த மறையவர்.

27.திருஞானசம்பந்தர்: இறைவி தந்த ஞானப்பால் உண்டவர். தேவாரம் பாடிச் சைவமும், தமிழும் தழைக்கச் செய்த மறையவர்.

28.ஏயர்கோன் கலிக்காம நாயனார்: சுந்தரர் சிவபெருமானைத் தூது அனுப்பியதால் அவரைப் பகைத்துப் பின்னர் சூலைநோய் அடைந்து சுந்தரரின் தொடர்பைப் பெற்ற வேளாளர்.

29.திருமூல நாயனார்: திருமந்திரம் பாடிய சித்தர்.

30.தண்டியடிகள் நாயனார்: திருவாரூர்க்கமலாலயக் குளத்தை பிறவிக் குருடராக இருந்தும் திருத்தும் பணியில் ஈடுபட்டவர்.

31.மூர்க்க நாயனார்: சூதாடி வென்ற பொருளால் சிவனடியார்க்கு அன்னதானம் செய்த வேளாளர்.

32.சோமாசி மாற நாயனார்: சிவ வேள்விகள் புரிந்து சுந்தரரை வழிபட்டுச் சிவபதம் அடைந்த மறையவர்.

33.சாக்கிய நாயனார்: நாடோறும் கற்களையே மலராகச் சிவலிங்கத்தின் மீது எறிந்து தம் பக்தியை வெளிப்படுத்திய வேளாளர்.

34.சிறப்புலி நாயனார்: திருவைந்தெழுத்தை ஓதித் தாம் புரிந்த வேள்வியைச் சிவபெருமானுக்கே தத்தம் செய்த மறையவர்.

35.சிறுத்தொண்ட நாயனார்: இல்லை எனாமல் பிள்ளைக் கறி சமைத்துச் சிவனடியாரை வழிபட்டவர்.

36.கழறிற்றறிவார் நாயனார்: உவர்மண் பூசிய சலவைத் தொழிலாளனைச் சிவ வேடத்தை நினைவூட்டியதாக வணங்கியவர்.

37.கணநாத நாயனார்: திருஞானசம்பந்தரை வழிபட்டுத் திருக்கயிலையை அடைந்த மறையவர்.

38.கூற்றுவ நாயனார்: நடராசப் பெருமானின் திருவடியே தம் மணி முடியாக வழிபட்டவர்.

39.புகழ்ச்சோழ நாயனார்: தாம் வெட்டிய பகையரசர்களின் தலை ஒன்று சடைமுடி தரித்திருப்பதை அறிந்து மனம் நொந்து தீப்புகுந்தவர்.

40.நரசிங்க முனையரைய நாயனார்: போலிச் சிவனடியாரிடமும் அன்பு காட்டிய பெருந்தகையர்.

41.அதிபத்த நாயனார்: நாடோறும் தம் வலையில் அகப்படும் முதல் மீனை இறைவனுக்குப் படைத்த மீனவர்.

42.கலிக்கம்ப நாயனார்: சிவ வேடம் கொண்ட பணியாளனையும் வழிபட்டவர். மறுத்த மனைவி கையை வெட்டிய வணிகர்.

43.கலிய நாயனார்: எண்ணெயும் விறகும் இல்லாத போது தமது ரத்தத்தால் விளக்கு எரித்து கோயிலில் ஒளி உண்டாக்கிய வாணியர்.

44.சக்தி நாயனார்: சிவனடியார்களை இகழ்ந்தவர்களை நாவைத் தண்டாயம் என்னும் குறடு போலும் கருவியால் இழுத்து கத்தியால் அரிந்த வேளாளர்.

45.ஐயடிகள் காடவர்கோன் நாயனார்: ஆட்சியைத் துறந்து சிவத் தலங்களை வழிபட்டு “ஷேத்திர வெண்பா” என்னும் நூலை இயற்றியவர்.

46.கணம்புல்ல நாயனார்: கணம்புல்லை விற்று நெய் வாங்கி தீப திருப்பணி புரிந்தவர். நெய் இல்லாததால் தலைமயிரையே எரித்தவர்.

47.காரிநாயனார்: “காரிக்கோவை” என்னும் நூல் இயற்றி அதன் ஊதியத்தைக் கொண்டு தமிழ்ப் பணி புரிந்தவர்.

48.நின்றசீர் நெடுமாற நாயனார்: சமண சமயத்தவராக இருந்து திருஞானசம்பந்தரால் சைவ சமயத்துக்க திரும்பப் பெற்றவர்.

49.வாயிலார் நாயனார்: சிவபெருமானுக்கு மனத்தினாலேயே திருக்கோயில் அமைத்து திருமஞ்சனம் தூப தீபம் பெற்றவர்.

50.முனையடுவார் நாயனார்: கூலிக்கு போர் செய்து திரட்டியபொருளை அடியார்க்கு வழங்கிய வேளாளர்.

51.கழற்சிங்க நாயனார்: பூ மண்டபத்தில் கீழே இருந்த மலரை முகர்ந்து பார்த்த தம் மனைவியாரின் கையை வெட்டியவர். பல்லவ மன்னர்.

52.இடங்கழி நாயனார்: தம் செல்வத்தையும் அம்பாரத்தையும் சிவனடியார்கள் கொள்ளை கொள்ள விட்டு விட்ட ஒரு குறுநில மன்னர்.

53.செருத்துணை நாயனார்: கழற்சிங்கரின் மனைவி பூமண்டபத்திலிருந்த மலரை முகர்ந்து பார்த்ததால் அவ்வம்மையாரின் மூக்கை அறுத்த வேளாளர்

54.புகழ்த்துணை நாயனார்: சிவபெருமான் திருவருளால் பஞ்சத்தில் நாடோறும் ஒவ்வொரு பொற்காசு பெற்றவர்.

55.கோட்புலி நாயனார்: சிவபெருமானுக்குப் படைப்பதற்காகத் தாம் சேமித்து வைத்த நெல்லை உண்ட சுற்றத்தினரைக் கொன்று நேர்மையை நிலை நாட்டிய வேளாளர்.

56.பூசலார் நாயனார்: மனக்கோயில் கட்டிச் சிவபெருமானை பிரதிட்டை செய்த மறையவர்.

57.மங்கையர்கரசியார்: நின்றசீர் நெடுமாறனாரின் மனைவியாவார். திருஞானசம்பந்தரை மதுரைக்கு வரவேற்றுத் தம் கணவரைச் சைவராக்கினார்.

58.நேச நாயனார்: சிவனடியார்களுக்கு உடை, கோவணம்,கீள் முதலியன கொடுத்துக் காத்த சாலியர்.

59.கோச்செங்கட் சோழ நாயனார்: திருவானைக்கா திருமதில் பணிகளைச் செய்தவர். 70 சிவன் கோயில்களைக் கட்டியவர்.

60.திருநீலகண்ட யாழ்பாணர்: திருஞானசம்பந்தரின் பாடல்களை யாழில் அமைத்துப் பாடியவர்.

61.சடைய நாயனார்: சுந்தரரின் தந்தையார்.

62.இசைஞானியார்: சுந்தரரின் அன்னையார்.

63.சுந்தரமூர்த்தி நாயனார்: சடையனார், இசை ஞானியார் ஆகியோரின் மைந்தர். சிவபெருமான் தோழர், தேவாரம் பாடிச் செந்தமிழ் வளர்த்த ஆதி சைவர்.

9 தொகையடியார்

1.தில்லைவாழ் அந்தணர்: தில்லையில் நடராசப் பெருமானுக்கு வழிபாடு புரியும் அந்தணர்

2.பொய்யடிமை இல்லாத புலவர்: சங்க காலப் புலவர் நாற்பத்தொன்பதின்மர்.

3.பத்தராய்ப் பணிவார்: திருவாரூரில் புற்றிடங்கொண்ட பெருமானை முழுமுதல் கடவுளாய் வழிபட்ட தொகையடியார்கள்.

4.பரமனையே பாடுவார்: சிவபெருமானை மட்டுமே பாடுபவர்கள். பிற தெய்வத்தை பாடாதவர்கள்.

5.சித்தத்தை சிவன்பாலே வைத்தார்: சிவயோக நெறியில் சித்தத்தை வைத்து முக்தியடைந்தவர்கள்.

6.திருவாரூர்ப் பிறந்தார்: திருக்கயிலாயத்தில் உள்ள சிவகணங்களே இவர்கள்.

7.முப்போதும் திருமேனி தீண்டுவார்: மூன்று காலங்களில் சிவபெருமானை அபிஷேகம் செய்து அர்ச்சிப்பவர்கள்.

8.முழுநீறு பூசிய முனிவர்: உடல் முழுவதும் திருநீறு பூசி சிவபெருமானையே பூசித்து வருபவர்கள்.

9.அப்பாலும் அடிசார்ந்தார்: முத்தமிழ் நாடுகளுக்கு அப்பால் உள்ள நாடுகளில் வாழ்ந்த சிவனடியார்கள்.

63 நாயன்மார் 9 தொகையடியார் சிவபெருமானுக்கும் அவருடைய அடியவர்களுக்கும் தொண்டு செய்து வாழ்ந்தவர்கள். சுந்தரர் இயற்றிய திருத்தொண்டர் தொகை மூலம் 63 நாயன்மார் 9 தொகையடியார் பற்றி அறிந்து கொள்ளலாம்.

நாயன்மார்கள் வரலாறு வெளிவந்த கதை

சிவாலயத்தில் வழிபாடு செய்வது எப்படி?

திருநீறு – ஒரு பார்வை

Comments are closed.