ஒரு துளி நீரின் கண்ணீர்க் கதை

பஞ்சபூதங்களில் ஒன்று நான். நீர் என்பது எனது பெயர். மற்ற கணங்களாகிய ஆகாயம், பூமி, காற்று, நெருப்பு ஆகியவற்றை இணைக்கும் இணைப்பும் நான்தான். அவற்றின் செல்லப்பிள்ளையும் நானே.

ஆகாயம் என்னை மேகமாக்கி தாலாட்டும். மேகமாகிய என்னை காற்று அகிலமெங்கும் அழைத்துச் செல்லும். மழையாக நான் பொழியும் போது, பூமி என்னை ஏற்று மனிதகுலத்தை உயிர்ப்பிக்கும். ஆறாக, குளமாக, கிணறாக மகிழ்வுடன் என்னை சீராட்டும். நெருப்பின் கோபக்கனலை, எனது அணைப்பால் அதனைத் தணிப்பேன்.

நதியாக நான் பெருகி ஓடிய இடங்களில் எல்லாம் நாகரீகங்கள் தோன்றின. மாபெரும் எனது கரைகளில்தான் முனிவர்கள் அமர்ந்து வேதங்களை ஓதினார்கள். மக்கள் என்னை கங்கை, யமுனை என்றும், காவேரி என்றும் பாராட்டி, சீராட்டினார்கள்.

ஆடிமாதம் நான் பெருக்கெடுத்து கரை கடந்த வெள்ளமாக ஓடும் போது சிறார்கள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் என்னில் அமிழ்ந்தும், குதித்தும், நீந்தியும் விளையாடினார்கள். அதெல்லாம் பழங்கதையாகிவிட்டன இப்போது.

கற்புடைப் பெண்டிர் பெய் என்றால், மழை பெய்யும் என்றார் வள்ளுவர். மாதம் மும்மாரி பொழிகிறதா என அரசன் கேட்டால், ஆம் அரசே நாட்டில் நீதியும், நேர்மையும் உள்ளவரை மாதம் மும்மாரி பொழியும் என்பாராம் அமைச்சர்.

இன்று ஏன் மாதம் மும்மாரி பெய்யவில்லை? கற்புடைப் பெண்டிர் இல்லையா? அல்லது நீதியும் நேர்மையும் செத்துவிட்டனவா? இல்லை, இல்லை, இல்லவேயில்லை.

கடலிலிருந்து மேகமாக நான் எழும்பி வரும்போது என்னை வரவேற்று, அணைத்து, மழையாக பொழிவிக்க மரங்கள் இல்லை.

பெருகிவரும் தங்கள் தேவையை நிறைவு செய்ய மக்கள் காடுகளை அழித்து கட்டிடங்களாக்கியதால்தான், இன்னு மாதம் முன்மாரி பெய்யவில்லை. காகிதம் செய்ய காடுகளை அழித்ததால் தான் இன்று மாதம் மும்மாரி பெய்யவில்லை.

ஆறாக, நதியாக சீறிப் பாய்ந்து வந்த நான் இன்று சிற்றோடையாக, சிறு கால்வாயாக சிறுமைப்பட்டு செல்கிறேன். தேங்கிய நீர் என்றும், கலங்கிய குட்டை என்றும் என்னை அவமதிக்கிறார்கள்.

கிணற்றில், கையால் நீர் இறைத்த காலம் போய் முழம் முழமாய் கயிறிருந்தாலும் கிணற்றில் நீரில்லை என்ற நிலமை வந்தது எதனால்? மக்களின் கவனக் குறைவால்தான்.

ஆற்றில் போட்டாலும் அளந்து போடு என்ற பழமொழி வழக்கில் இருக்கும் இந்நாட்டு மக்கள் அளக்காமலேயே ஆற்றுத் தண்ணீரை பயன்படுத்தியதால் தான்.

தென்னை இளநீர் போல என்றும், பனை நுங்கு போல என்றும் அன்று பாராட்டப்பட்ட நான் இன்று பச்சைப் பசேல் என்றும், கண்ணங்கரேல் எனவும் பல நிறங்களில் மக்கள் கையால் தொடவே அஞ்சும் தொழு நோயாளியாகிப் போனது எதனால்? மக்கள் கண்மூடித்தனமாக என்னை மாசுபடுத்தியதால்தான். இது தான் நீரின் கண்ணீர்க் கதை

இந்நிலை மாறி பழையபடி நான் சீரும், சிறப்பும் பெற்று விளங்குவது எப்படி? மக்களாகிய நீங்கள் முயற்சி செய்தால் இது முடியும்.

‘விழிமின், எழுமின்’ என விவேகானந்தர் கூறியது போல, விழித்தெழுங்கள்,
விழிப்புணர்வோடு இப்போதாவது செயல்பட ஆரம்பியுங்கள்.

‘மரம் வளருங்கள், மழையை வரவழையுங்கள்’
மழை நீரை அறுவடை செய்யுங்கள்.

‘நோயற்ற வாழ்வு வாழ, மாசற்ற நீர் தேவை’ என்பதனை மனதில்
கொண்டு நீரை மாசுபடுத்துவதை நிறுத்துங்கள்.

‘நீர் மேலாண்மையை கற்றுக் கொள்ளுங்கள். ‘நீர் மறைய
நீர் கட்டினால், நிறைய வரும் நெற்கட்டு’. என்பதை கற்றுணருங்கள்

இரண்டு குழந்தைகளுக்கிடையே மட்டும் இடைவெளி விட்டால் போதாது
இரண்டு கிணறுகளுக்கிடையேயும் இடைவெளி விடுங்கள்.

நிலத்தடி நீர் அளவோடு தேவைக்கு ஏற்ப பயன்படுத்துங்கள்.

நீரைச் சேமியுங்கள் ‘இன்றைய சேமிப்பு, நாளைய பாதுகாப்பு’ என்பது
நீங்கள் ஈட்டும் பொருளுக்கு மட்டுமல்ல, ஈட்டாமலேயே கிடைக்கும் நீருக்கும் தான்.

‘நீரின்றி அமையாது உலகு’ என்பதனை நினைவில் கொள்ளுங்கள். நீரைச் சேமியுங்கள். நீரின் மாசற்ற தன்மையை காப்பாற்றுங்கள். உங்களுக்காக மட்டுமல்ல, வருங்கால சந்ததியினருக்காகவும்.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.