நீலவான இரவிலே

 

நீலவான இரவிலே

மெல்ல நடக்கும் நிலவே

பால்வண்ண நிறம் உனதோ – அந்த

பன்னீரின் மணம் உனதோ

 

மாலை மஞ்சள் உடல்முழுதும்

உனக்கெனவே கொண்டவளே

சோலைப்பூக்கள் இரவு முழுதும்

பூத்திடவும் செய்பவளே

 

அந்த பக்கம் மலைகள் எங்கே

என நீயும் கேட்கின்றாய்

இங்கு ஓடும் ஆறுகளும்

மலடாச்சே என்கின்றாய்

 

என் பூமி எங்கேயென

கதறி நீயும் அழுகின்றாய்

உன் கண்ணீரைத் துடைப்பதற்கே

எவருமில்லை புலம்புகின்றாய்

 

பிள்ளை நிலா என்று உன்னை

கொஞ்சுபவர் சிலருண்டு

பேரிளம் பெண் காதலியாய்

காண்பவரும் பலருண்டு

 

கொஞ்ச காலம் தாயெனவே

மாறிடு நீ வெண்ணிலவே

அங்குஇங்கு நடக்கும் தவறை

தடுத்திடு நீ வெண்ணிலவே

 

நல்ல பூமி இங்கில்லை

நல்ல காற்றும் கிடைக்கவில்லை

நல்ல நீரும் இருப்பதில்லை

அல்லல் துன்பம் குறைந்திடத்தான்

வழியொன்றும் தெரியவில்லை

 

நீ கொஞ்சம் கோபப்படு –உன்

குளிர்ச்சியையும் குறைத்துவிடு

நேயமற்ற மனிதகூட்டம்

மாறிடுமா பார்த்துவிடு

இராசபாளையம் முருகேசன்

கைபேசி: 9865802942

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.