பக்தியினாலே தெய்வ பக்தி யினாலே

பக்தி செய்தால் என்ன நன்மை என்று பாரதியார் சொல்லக் கேளுங்கள்!

 

பக்தியி னாலே – இந்தப்

பாரினி லெய்திடும் மேன்மைகள் கேளடீ!

சித்தந் தெளியும் – இங்கு

செய்கை யனைத்திலும் செம்மை பிறந்திடும்,

வித்தைகள் சேரும் – நல்ல

வீர ருறவு கிடைக்கும், மனத்திடைத்

தத்துவ முண்டாம் – நெஞ்சிற்

சஞ்சலம் நீங்கி உறுதி விளங்கிடும்                 (பக்தியி னாலே)

 

காமப் பிசாசைக்-குதி

கால்கொண் டடித்து விழுத்திட லாகும்; இத்

தாமசப் பேயைக் – கண்டு

தாக்கி மடித்திட லாகும்; எந் நேரமும்

தீமையை எண்ணி – அஞ்சுந்

தேம்பற் பிசாசைத் திருகி யெறிந்துபொய்ந்

நாம மில்லாதே – உண்மை

நாமத்தி னாலிங்கு நன்மை விளைந்திடும்            (பக்தியி னாலே)

 

ஆசையைக் கொல்வோம், – புலை

அச்சத்தைக் கொன்று பொசுக்கிடுவோம், கெட்ட

பாச மறுப்போம்,-இங்குப்

பார்வதி சக்தி விளங்குதல் கண்டதை

மோசஞ் செய்யாமல் — உண்மை

முற்றிலுங் கண்டு வணங்கி வணங்கியொர்

ஈசனைப் போற்றி – இன்பம்

யாவையு முண்டு புகழ்கொண்டு வாழ்குவம்             (பக்தியி னாலே)

 

சோர்வுகள் போகும் – பொய்ச்

சுகத்தினைத் தள்ளிச் சுகம்பெற லாகும், நற்

பார்வைகள் தோன்றும் – மிடிப்

பாம்பு கடித்த விஷமகன் றேநல்ல

சேர்வைகள் சேரும் – பல

செல்வங்கள் வந்து மகிழ்ச்சி விளைந்திடும்,

தீர்வைகள் தீரும் – பிணி

தீரும், பலபல இன்பங்கள் சேர்ந்திடும்                        (பக்தியி னாலே)

 

கல்வி வளரும் – பல

காரியங் கையுறும், வீரிய மோங்கிடும்,

அல்ல லொழியும் – நல்ல

ஆண்மை யுண்டாகும், அறிவு தெளிந்திடும்,

சொல்லுவ தெல்லாம் — மறைச்

சொல்லினைப் போலப் பயனுள தாகும், மெய்

வல்லமை தோன்றும் – தெய்வ

வாழ்க்கையுற் றேயிங்கு வாழ்ந்திடலாம், உண்மை      (பக்தியி னாலே)

 

சோம்ப லழியும் – உடல்

சொன்ன படிக்கு நடக்கும், முடி சற்றுங்

கூம்புத லின்றி-நல்ல

கோபுரம் போல நிமிர்ந்த நிலைபெறும்,

வீம்புகள் போகும் – நல்ல

மேன்மை யுண்டாகிப் புயங்கள்

பருக்கும், பொய்ப் பாம்பு மடியும் – மெய்ப்

பரம் வென்று நல்ல நெறிகளுண் டாய்விடும்               (பக்தியி னாலே)

 

சந்ததி வாழும் – வெறுஞ்

சஞ்சலங் கெட்டு வலிமைகள் சேர்ந்திடும்,

‘இந்தப் புவிக்கே – இங்கொர்

ஈசனுண் டாயின் அறிக்கையிட் டேனுன்றன்

கந்த மலர்த்தாள் – துணை;

காதல் மகவு வளர்ந்திட வேண்டும், என்

சிந்தை யறிந்தே – அருள்

செய்திட வேண்டும்’ என்றால் அருளெய்திடும்             (பக்தியி னாலே)

– பாரதியார்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.