பாலைவனம் உண்டானது ஏன்?

பாலைவனம் உண்டானது ஏன்? என்ற கதை நம்முடைய செயல்பாடுகளை சிறந்ததாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற உண்மையை உணர்த்துவதாக அமைந்துள்ளது. இதனைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

கடவுள் முதலில் உலகத்தைப் படைக்கும்போது எங்கும் பச்சை பசேலென காடுகளும், கண்ணுக்கு இனிமையான பூஞ்சோலைகளும் கனிகள் கொண்ட மரங்களும் நிறைந்து பூமி மிகவும் ரம்மியமாக இருந்தது.

அப்போது பூமியில் வறண்ட பாலைவனங்கள் எங்கும் இல்லை.
பின்னர் கடவுள் இப்பூமியை பொறுப்பாக பார்த்துக் கொள்ள மனிதனைப் படைத்தார்.

மனிதனிடம் கடவுள் “நீ ஒவ்வொரு முறை பாவம் செய்யும் போதும் வானத்தில் இருந்து சிறிதளவு மணல் பூமியில் கொட்டும். எனவே கவனமாக நடந்து கொள்” என்று கூறிவிட்டு மறைந்தார்.

‘இவ்வளவு பெரிய பூமியில் சிறிதளவு மணல் விழுவதால் என்ன கெடுதல் நிகழ்ந்து விடப்போகிறது? என் விருப்பம் போல் வாழ்வதால் எந்த தவறும் இல்லை’ என்று மனதிற்குள் எண்ணி பாவங்களைச் செய்யத் தொடங்கினான்.

இதனால் மனிதனுடைய பாவங்களுக்கு ஏற்றவாறு மணல் பூமியில் கொட்டி பாலைவனம் தோன்றத் தொடங்கியது.

நாளுக்கு நாள் மனிதனின் பாவங்கள் அதிகரிக்கத் தொடங்கியது. அதனால் பூமியில் பாலைவனத்தின் அளவும் அதிகரித்தது.

இன்னும் பாவங்கள் அதிகரித்தால் உலகம் முழுவதும் பாலைவனமாகி விடும்.

 

பாலைவனம் உண்டானது ஏன்? என்ற இக்கதையிலிருந்து நல்ல செயல்களை நாம் எப்போதும் செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

நம்முடைய செயல்கள் பூமிக்கு பாதிப்பை உண்டாக்குவதாக அமைந்தால் பூமியின் இயற்கை வளங்கள் பாதிக்கப்படுவதோடு நம்மால் பூமியில் வாழ இயலாமல் போய்விடும்.

ஆதலால் எல்லோருடைய செயல்பாடுகளும் பூமியைக் காப்பதாக அமைய வேண்டும்.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.