பெருங்காயம் – மருத்துவ பயன்கள்

பெருங்காயம் கைப்பு, கரகரப்புச் சுவைகள் கொண்டது. வெப்பத் தன்மையானது. அஜீரணத்தையும் உடல் வலியையும் கட்டுப்படுத்தும்.

உணவுக் குழலில் ஏற்படும் கடுமையான வலியைக் கட்டுப்படுத்தி சுவாசம், நரம்பு மண்டலம் ஆகியவற்றைத் தூண்டும். நிமோனியா, குழந்தைகளுக்கு ஏற்படும் மூச்சுக் குழல் அழற்சி ஆகியவற்றை நீக்கும்.

பெருங்காயம் சிறு செடி வகையைச் சார்ந்தது. மிகப் பெரிய காரட் வடிவத்திலான வேர்களைக் கொண்ட, உயரமான, ஆண்டு முழுவதும் காணப்படும் தாவரம்.

பெருங்காயம் இலைகள் இரு வகையானவை. கீழ்ப்பகுதி இலைகள் ஒற்றையாக 30-60 செமீ அளவில் நீள்வட்ட வடிவத்தில் காணப்படும். மேற்பகுதி இலைகள் அதிகமான பிரிவுகளுடன் காணப்படும். தளிர் இலைகள் அடர்த்தியான மயிரிழைகளுடன் காணப்படும்.

பெருங்காயம் பூக்கள் சிறியவையாகவும், மஞ்சள் நிறத்திலும் முடிவில் பெரிய கொத்தாகவும் காணப்படும். பெருங்காயம் பழங்கள் 8 மிமீ நீளத்திலும் 4மிமீ குறுக்களவிலும் காணப்படும்.

பெருங்காயம் பிசின் பால் மஞ்சள் நிறமானது. நெடியுள்ள மணமுடையது. இது ஏறக்குறைய வெள்ளைப் பூண்டின் நெடியை ஒத்திருக்கும்.

பெருங்காயம் காஷ்மீரில் அதிகமான அளவு விளைகின்றது. பெருங்காயச் செடியின் வேர்களையோ, வேர் முண்டுகளையோ நறுக்கினால் அதிலிருந்து நீரில் கரையக் கூடிய வாசனையுள்ள பால் கிடைக்கின்றது. இதுவே பெருங்காயம் எனப்படுவதாகும்.

அத்தியாகிரகம், இங்கு, இரணம், கந்தி, காயம், பூத நாகம், வல்லிகம் ஆகிய முக்கியமான மாற்றும் பெயர்களும் உண்டு. மளிகை மற்றும் நாட்டு மருந்து கடைகளிலும் பெருங்காயம் காய்ந்த நிலையில் கிடைக்கும்.

எச்சரிக்கை: பெருங்காயத்தை அதிக அளவில் தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் தொண்டைப்புண், கழிச்சல், வயிற்று உப்புசம், சிறுநீர் எரிச்சல் புளியேப்பம் போன்றவற்றை உண்டாக்கும். உள் மருந்தாக பெருங்காயத்தை உபயோகிக்கும்போது பொரித்து உபயோகிப்பதே நல்லது.

½ கிராம் பொரித்த பெருங்காயத்தை சிறிதளவு பனை வெல்லத்துடன் சேர்த்து சாப்பிட்டு வர வயிற்றுப் பொருமல், வயிற்று வலி குணமாகும்.

2கிராம் பெருங்காயத்தை 20 மிலி நல்லெண்ணெயில் இட்டுக் காய்ச்சி வடிகட்டி ஒரு துளி அளவு காதில் விட காதுவலி குணமாகும்.

தேள் கொட்டு சரியாக பெருங்காயத்தை வெந்நீரில் உரைத்து கொட்டிய இடத்தில் பூச வேண்டும்.

குடலின் இயக்கத்தை அதிகமாக்க, நீரில் உரைத்து பசையாக்கப்பட்ட பெருங்காயம் வயிற்றின் மீது தடவப்படுகின்றது. இதன் உணர்ச்சியைத் தூண்டும் தன்மை இதய பரிசோதனைகள் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.