பொட்டுக்கடலை மாவு உருண்டை செய்வது எப்படி?

பொட்டுக்கடலை மாவு உருண்டை எங்கள் ஊரில் கார்த்திகை தீப வழிபாட்டின் போது படையலாக படைக்கப்படுகிறது.

இதனை செய்வது எளிது. அதோடு இதன் ருசி அலாதியானது. சிறுவர்களை கவர்ந்திழுக்கும் இது, சத்து நிறைந்த உணவும் ஆகும். 

வீட்டில் பொட்டுக்கடலை மாவு உருண்டை செய்முறை பற்றிப் பார்ப்போம்.

 

தேவையான பொருட்கள்

பொட்டுக்கடலை அல்லது பொரிகடலை – 100 கிராம்

சீனி – 100 கிராம்

முந்திரிப் பருப்பு – 8 எண்ணம்

கிஸ்மிஸ் பழம் – 8 எண்ணம்

ஏலக்காய் – 3 எண்ணம்

தேங்காய் – ¼ மூடி

நெய் – 3 ஸ்பூன்

 

செய்முறை

பொட்டு க‌டலையை வெறும் வாணலியில் போட்டு பொரிகடலை சூடேறும் வரை வறுக்கவும். பொட்டுக்கடலையை வறுக்கும்போது அடுப்பை சிம்மில் வைக்கவும்.

பொட்டுக்கடலை வறுக்கும்போது
பொட்டுக்கடலை வறுக்கும்போது

 

வறுத்த பொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு மையாக அரைக்கவும். பின் அதனை சலிப்பில் போட்டு சலித்துக் கொள்ளவும்.

சீனியை மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.

வாணலியில் சிறிதளவு நெய் விட்டு முந்திரிப் பருப்பு, கிஸ்மிஸ் ஆகியவற்றை வறுக்கவும்.

முந்திரிப் பருப்பு, கிஸ்மிஸ் வறுக்கும்போது
முந்திரிப் பருப்பு, கிஸ்மிஸ் வறுக்கும்போது

 

ஏலக்காயை தூளாக்கிக் கொள்ளவும். தேங்காயை துருவிக் கொள்ளவும்.

சிறிதளவு தண்ணீரை கொதிக்க வைத்து மிதமான சூட்டில் இருக்குமாறு வைத்துக் கொள்ளவும்.

வாயகன்ற பாத்திரத்தில் அரைத்து சலித்து வைத்துள்ள பொட்டுக்கடலை மாவு, பொடியாக்கி சீனி, வறுத்து வைத்துள்ள முந்திரிப் பருப்பு, கிஸ்மிஸ், தூளாக்கிய ஏலக்காய், மீதுமுள்ள நெய், தேங்காய்த் துருவல் ஆகியவற்றை ஒன்றாகக் கொட்டி ஒரு சேரக் கலக்கவும்.

மாவுடன் முந்திரிப் பருப்பு, கிஸ்மிஸ், நெய், தேங்காய் சேர்க்கும்போது
மாவுடன் முந்திரிப் பருப்பு, கிஸ்மிஸ், நெய், தேங்காய் சேர்க்கும்போது

 

பின் அதனுடன் மிதமான சூட்டில் உள்ள தண்ணீரை சிறிது சிறிதாகத் தெளித்து பிசைந்து அழுத்தி வைக்கவும்.

ஒருசேரக் கலந்ததும்

ஒருசேரக் கலந்ததும்

சிறிது நேரம் கழித்து மாவினை ஒரு சேர பிசைந்து வைக்கவும்.

நன்கு பிசைந்த மாவு
நன்கு பிசைந்த மாவு

 

பிசைந்த மாவில் இருந்து எலுமிச்சை அளவு மாவினை எடுத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும். சுவையான பொட்டுக்கடலை உருண்டை தயார். இதனை ஒரு நாள் மட்டும் உபயோகிக்கவும்.

சுவையான பொட்டுக்கடலை மாவு உருண்டை
சுவையான பொட்டுக்கடலை மாவு உருண்டை

 

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் தண்ணீருக்குப் பதிலாக காய்ச்சிய பசும்பாலை உருண்டை தயார் செய்ய உபயோகிக்கலாம்.

இரண்டு நாட்கள் வரை வைத்திருக்க விரும்புவோர் தேங்காய்த் துருவலை வறுத்து அதனை மாவுடன் சேர்த்து உபயோகிக்கலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.