கார்போஹைட்ரேட் நிறைந்த மரவள்ளிக் கிழங்கு

மரவள்ளி கிழங்கு தமிழ்நாட்டில் குச்சிக் கிழங்கு, குச்சிவள்ளிக் கிழங்கு, மரசீனிக் கிழங்கு, கப்பங் கிழங்கு என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.

இக்கிழங்கிலிருந்து தயார் செய்யப்படும் ஜவ்வரிசி, மரவள்ளி மாவு, சிப்ஸ் ஆகியவற்றை நாம் அடிக்கடி பயன்படுத்துகிறோம்.

இது சோளம், அரிசியை அடுத்து அதிகளவு கார்போஹைட்ரேட்டை கொண்டுள்ள உலகின் மூன்றாவது பெரிய கார்போஹைட்ரேட் மூலம் ஆகும்.

இது மனிதர்களுக்கு உணவாகவும், கால்நடைகளுக்கு தீவனமாகவும் பயன்படுத்தப்படுகிறது.

இக்கிழங்கு பல்வேறு தொழில்துறைகளிலும் மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. எனவே இக்கிழங்கு உலகளவில் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

 

மரவள்ளிக் கிழங்கு மாவு
மரவள்ளிக் கிழங்கு மாவு

 

உலகில் சுமார் 15.7 மில்லியன் பரப்பளவில் இது பயிர் செய்யப்படுகிறது. மழைவளம் குறைந்த சாதாரண மண்ணில் செழித்து வளருவதால் இது வளரும் நாடுகளின் வேளாண்மையில் இது முக்கிய இடத்தைப் பெறுகிறது.

 

மரவள்ளி கிழங்கின் அமைப்பு மற்றும் வளரியல்பு

மரவள்ளி கிழங்கு குற்றுச்செடி வகைத் தாவரத்திலிருந்து பெறப்படுகிறது. இச்செடியானது 3-5மீ உயரம் வரை வளரும்.

 

 மரவள்ளிக் கிழங்குச் செடி
மரவள்ளி செடி

 

விசிறி போன்ற பச்சைநிற இலைகளைக் கொண்டுள்ளது. இச்செடியில் தண்டுப்பகுதி உறுதியாக, சிவந்த பழுப்புநிற மரப்பட்டைகளைக் கொண்டுள்ளது.

மரவள்ளி கிழங்கு மரவள்ளி செடியின் வேர்ப்பகுதியில் கிடைக்கிறது. இக்கிழங்கானது 1-4 அங்குலம் விட்டத்துடன் 8-15 அங்குல நீளத்தில் காணப்படும். இக்கிழங்கின் நடுப்பகுதி பருத்தும் இருமுனைப்பகுதியும் குறுகியும் காணப்படும்.

 

மரவள்ளிக் கிழங்கு
மரவள்ளிக் கிழங்கு

 

இக்கிழங்கின் மேல்தோல் தடிமனாக சாம்பல் அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும். இக்கிழங்கின் உட்பகுதியானது வெள்ளை அல்லது வெளிர் மஞ்சள் நிறத்தில் கெட்டியாக இருக்கும்.

இக்கிழங்கு லேசான இனிப்புடன் கூடிய தனிப்பட்ட சுவையினை உடையது.

இச்செடியானது யூஃபோர்பியேசியே என்ற தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. இதனுடைய அறிவியல் பெயர் மோனிகாட் எஸ்குலண்டா என்பதாகும்.

மரவள்ளி செடியானது வெப்பமண்டலம் மற்றும் மிதவெப்ப மண்டலப் பகுதிகளில் செழித்து வளரும். இச்செடி வளர ஈரப்பதமான வளமான நீர்தேங்காத மணல் தேவை.

மரவள்ளி செடியின் பருத்த தண்டினை வெட்டி நடவு செய்து இது பயிர் செய்யப்படுகிறது. இக்கிழங்கினை சமைத்தே உண்ண வேண்டும்.

 

மரவள்ளியின் வரலாறு

மரவள்ளி 10,000 ஆண்டுகளுக்கு முன்பே பயிர் செய்யப்பட்டதாக வரலாற்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. இதனுடைய தாயகம் தென்அமெரிக்காவைச் சார்ந்த பிரேசில் ஆகும்.

தென்அமெரிக்க பகுதியிலிருந்து போர்த்துகீசியர்கள் மற்றும் ஸ்பானியர்களால் உலகெங்கும் இக்கிழங்கு பரவியது. 1558-ல் போர்த்துகீசியர்கள் இதனை ஆப்பிரிக்காவின் காங்கோவில் அறிமுகம் செய்தனர்.

17-ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் கேரளாவில் இப்பயிர் போர்த்துக்கீசியர்கள் இதனை அறிமுகம் செய்தனர். நைஜீரியா உலகில் அதிகளவு மரவள்ளியை உற்பத்தி செய்கிறது.

 

மரவள்ளி கிழங்கில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

இக்கிழங்கில் விட்டமின்கள் சி,கே,இ, பி1(தயாமின்), பி2(ரிபோஃப்ளோவின்), பி3(நியாசின்), பி6(பைரிடாக்ஸின்), ஃபோலேட்டுகள் உள்ளன.

மேலும் இதில் தாதுஉப்புகளான கால்சியம், மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், துத்தநாகம், இரும்புச்சத்து, பொட்டாசியம் முதலியவை காணப்படுகின்றன.

இக்கிழங்கில் புரோடீன், நார்ச்சத்து, நல்ல கொலஸ்ட்ரால், எரிசக்தி, அதிகளவு கார்போஹைட்ரேட் ஆகியவை காணப்படுகின்றன.

 

மரவள்ளியின் மருத்துவ பண்புகள்

நல்ல செரிமானத்திற்கு

இக்கிழங்கில் உள்ள நார்ச்சத்தானது உணவினை நன்கு செரிக்கச் செய்கிறது. உடலில் உள்ள நச்சுக்களை கழிவாக வெளியேற்றி உடலினை இக்கிழங்கின் நார்ச்சத்து மலச்சிக்கல், குடல் வலி, குடல்புற்றுநோய் ஆகியவை ஏற்படாமல் பாதுகாக்கிறது. எனவே இக்கிழங்கினை உண்டு நல்ல செரிமானத்தைப் பெறலாம்.

 

பிறப்பு குறைபாடுகளைக் களைய

இக்கிழங்கில் காணப்படும் ஃபோலேட்டுகள் உள்ளிட்ட பி தொகுப்பு விட்டமின்கள் கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு நரம்புக்குறைபாடுகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது. எனவே கர்ப்பிணிகள் இதனை உண்டு பலன் பெறலாம்.

 

ஆரோக்கியமான இரத்த ஓட்டத்திற்கு

மரவள்ளி கிழங்கில் உள்ள இரும்பு சத்து இரத்த சிவப்பணுக்களை உற்பத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் இரத்த சிவப்பணுக்கள் குறைபாட்டினால் ஏற்படும் அனீமியா உள்ளிட்ட நோய்களை இக்காய் குணப்படுகிறது.

இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியின் காரணமாக அதிக ஆக்ஸிஜன் உடல் உறுப்புகளுக்கு செலுத்தப்படுகிறது.

மேலும் செல்களின் மறுவளர்ச்சி, பராமரிப்பு மற்றும் காயங்களை மேம்படுத்துதல் ஆகிய பணிகள் சீரான இரத்த ஓட்டத்தின் காரணமாக மேம்படுத்தப்படுகின்றன. எனவே இக்காயினை உண்டு ஆரோக்கியமான இரத்த ஓட்டத்தைப் பெறலாம்.

 

எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு

வயதாகும்போது நமது உடலில் உள்ள எலும்புகள் நெகிழ்தன்மையை, உறுதி, அடர்த்தி ஆகியவற்றை இழந்து விடுகின்றன. இதனால் ஆஸ்டியோபோரேஸிஸ் உள்ளிட்ட எலும்பு சம்பந்தமான நோய்கள் ஏற்படுகின்றன.

மரவள்ளியில் உள்ள இரும்புச்சத்து, கால்சியம், விட்டமின் கே ஆகியவை எலும்புகளின் உற்பத்தி மற்றும் பராமரிப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே இக்கிழங்கினை உண்டு எலும்புகளின் ஆரோக்கியத்தைப் பெறலாம்.

 

மூளையின் நலத்திற்கு

மரவள்ளியில் உள்ள விட்டமின் கே-வானது மூளைக்கு செல்லும் நரம்புகளைப் பலப்படுத்துகிறது. இதனால் அல்சீமர் உள்ளிட்ட மூளை சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. எனவே இக்கிழங்கினை உண்டு மூளையின் நலத்தினைப் பேணலாம்.

 

சீரான இரத்த அழுத்தத்தைப் பெற

மரவள்ளியில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகிறது. பொட்டாசியம் இதய நரம்புகளில் குழல் விரிப்பானாக செயல்பட்டு இரத்தம் ஓட்டம் சீராக நடைபெற உதவுகிறது. இதனால் உடலின் இரத்த அழுத்தம் சீராகிறது.

மரவள்ளியில் உள்ள நார்ச்சத்து நரம்புகளில் உள்ள கெட்ட கொழுப்பினை கழிவுகளாக வெளியேற்றுகிறது. இதனால் இரத்த குழாய்களில் அடைப்பு, மாரடைப்பு உள்;ளிட்ட இதய நோய்கள் ஏற்படுவது தடை செய்யப்படுகிறது.

 

உடலின் எடையை அதிகரிக்க

மரவள்ளியானது அதிகளவு கார்போஹைட்ரேட்டைக் கொண்டுள்ளது. இதனால் உடல் எடையினை அதிகரிக்க விரும்புவோர் இக்கிழங்கினை உண்டு பயன் பெறலாம்.

 

மரவள்ளி கிழங்கினைப் பற்றிய எச்சரிக்கை

இக்கிழங்கானது சயனோஜெனிக் கிளைகோசைட் சேர்மம் என்ற நச்சு வேதிப்பொருளைக் கொண்டுள்ளது. இந்த நச்சு சேர்மம் இக்கிழங்கின் தோலில் அதிகளவு உள்ளது.

எனவே இக்கிழங்கினை முறையாக சமைத்து தோல் நீக்கி உண்ண வேண்டும்.

இக்கிழங்கில் உள்ள நச்சு வேதிப்பொருளின் பாதிப்பால் வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு சில நேரங்களில் மரணம் ஏற்படலாம்.

இக்கிழங்குடன் இஞ்சி சேர்த்து சமைக்கக்கூடாது. இக்கிழங்குடன் இஞ்சி சேர்த்த உணவுப்பொருட்களை உண்ண நேரிட்டால் மரணம் நேரிடலாம். எனவே இதனை தவிர்த்து விடவும்.

 

மரவள்ளி கிழங்கினை வாங்கும் முறை

மரவள்ளி கிழங்கு எல்லா காலங்களிலும் சாதாரண கடைகளிலும் கிடைக்கிறது.

கிழங்கினை வாங்கும்போது புதிதான, விறைப்பான, சதைப்பற்று மிக்க கிழங்கினை தேர்வு செய்ய வேண்டும்.

கிழங்குத் தோலில் காயங்கள், கீறல்கள் உள்ளவற்றை தவிர்க்க வேண்டும்.

அறையின் வெப்பநிலையில் நான்கு, ஐந்து நாட்கள் இக்கிழங்கினை வைத்து பயன்படுத்தலாம்.

இக்கிழங்கின் தோலினை உரித்து தண்ணீரில் போட்டு குளிர்பதனப் பெட்டியில் மூன்று நாட்கள்வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

மரவள்ளி கிழங்கானது சமையலில் பயன்படுத்தப்படுகிறது.

சூப்புகள், சாலட்டுகள், சிப்ஸ்கள், பிரட், கேக், இனிப்புகள் தயாரிக்க இக்கிழங்கு உபயோகப்படுத்தப்படுகிறது.

கார்போஹைட்ரேட்டுடன் சத்துகள் உள்ள மரவள்ளியை உணவில் அளவுடன் சேர்த்து வளமான வாழ்வு வாழ்வோம்.

– வ.முனீஸ்வரன்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.