மல்லிகை – மருத்துவ பயன்கள்

மல்லிகை மலர்கள் கைப்புச் சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டவை. மல்லிகை பால் சுரப்பை நிறுத்தும்; உடல் வெப்பத்தை அதிகரிக்கும்; குடல் புழுக்களை வெளியேற்றும்.

மல்லிகை வீக்கத்தை கரைக்கும்; சிறுநீரைப் பெருக்கும்; மாதவிடாயைத் தூண்டும்; தலை நோய், உடல் வெப்பம், கண் நோய்கள் மனக் கலக்கம் போன்றவற்றை குணமாகும்.

மல்லிகை சிறுசெடியாகவோ அல்லது ஏறுகொடியாகவோ காணப்படும். எதிர் அடுக்கில் அமைந்த கரும்பச்சை நிறமான தனித்த இலைகளையும் மிகுந்த மணமுள்ள வெள்ளை நிறமான மலர்களையும் உடைய தாவரம்.

மல்லிகை இலைகள் நீள் வட்டம் அல்லது தலைகீழ் முட்டை அல்லது தலைகீழ் ஈட்டி வடிவமானவை. மல்லிகை மலர்கள் பெரியவை. ஒரு மலர் கொத்தில் 3 மலர்கள் வரை காணப்படும்.

மல்லிகை பழங்கள் 1.5 செமீ வரை சுற்றளவுள்ளவை. கோள வடிவமானவை. பச்சை செங்கருநீல நிறமானவை. மல்லிகை விதைகள் கோள வடிவமானவை.

சமவெளிகள், சோலைகளில் அதிகமாகக் காணப்படுகின்றன. தமிழகமெங்கும் மல்லிகை அதன் மலர்களுடைய முக்கியத்துவம் கருதி பெருமளவில் வளர்க்கப்படுகின்றன. மல்லிகை மலர்களே மருத்துவத்தில் அதிகமாக உபயோகப்படுகின்றன.

பால் சுரப்பு நிற்க, மார்பக வீக்கம் குறைய நன்றாக மலர்ந்துள்ள மல்லிகை பூக்கள் 20 ஐ பாலூட்டும் தாய்மார்களின் மார்பில் வைத்துக் கட்ட வேண்டும். தினமும் மாலையில் 3 நாள்கள் இவ்வாறு செய்ய வேண்டும். அல்லது 20 பூக்களை அரைத்து மார்பகத்தில் இரவில் பூச வேண்டும்.

மல்லிகை பூவை அரைத்து தொடையில் புண் உள்ள பகுதியில் இரவில் பூசி வர தொடைப்புண் குணமாகும்.

மல்லிகையில், காட்டு மல்லிகை, சாதி மல்லிகை, ஊசி மல்லிகை, குடமல்லிகை போன்ற வகைகளும் உள்ளன. இவைகளின் மருத்துவப் பயன்கள் பெரும்பாலும் ஒன்றாகவே உள்ளன. காட்டு மல்லிகை இலையை அரைத்துப் பூசினால் வெண் குஷ்டம் கட்டுப்படும்.

Comments are closed.