வீசும் தென்றலே மௌனம் தேவையா?
வேசம் என்பது உனக்கும் கூடவா?
நேசம் கொண்டதை மறந்து போவதா?
நெஞ்சில் உனக்கும் வன்மம் தேவையா?
மாசினை நீயும் சுமந்து வருவதா?
மண்ணின் சுவாசத்தை நிறுத்தப் பார்ப்பதா?
வேசியைப் போலவே விலைக்குப் போவதா?
விரும்பும் எம்மையே விலக்கிப் போவதா?
தேசம் முழுவதும் ஒன்றென்ற உண்மையை
தேடித் தேடியே அழிக்கப் பார்ப்பதா?
காசம் தந்திடும் புயலாய் மாறியே
நாளும் தடையினை தந்து போவதா?
பொதிகை சந்தனம் சுமந்து வந்தநீ
புகையினக் கருமையை சுமந்து வருவதா?
மதியின் குளுமையை கொண்டு வந்தநீ
மனதில் வெறுமையை விதைத்துப் போவதா?
– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)