வசம்பு – மருத்துவ பயன்கள்

வசம்பு காய்ச்சலைக் குறைக்கும்; குடல் வாயுவைக் கலைக்கும்; வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும்; ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும்.

வசம்பு காரச்சுவையும், வெப்பத்தன்மையும் கொண்டது. உடல் வெப்பத்தை அதிகரிக்கும்; பசியுண்டாக்கும்; வயிற்று உப்புசம், வயிற்றுப் பொருமல், வயிறு கனமான உணர்வு போன்றவற்றுக்கு மருந்தாகும்.

வசம்பு செடி வகையைச் சார்ந்தது. வசம்பு மணமுள்ள வேர்த்தண்டுகளுடன் கூடிய, நீண்ட, அதிகமான கிளைகளுடன் படர்ந்து வளரும் தாவரம்.

வசம்பு பூ மொட்டுகள் இலை போன்ற மடல்களின் உட்புறமாகத் தோன்றுகின்றன. வசம்பு பூக்கள், சிறியவை, 5 முதல் 10 செ.மீ. வரை நீளமானவை. வசம்பு பழங்கள், மஞ்சள் நிறமானவை.

வசம்பு இந்தியா முழுவதும், பரவலாக 200 மீ. உயரத்தில் காணப்படுகின்றது. ஈரப்பசை நிறைந்த இமயமலையின் கிழக்கு, வடக்குப் பகுதிகளிலும் காணப்படுகின்றது. கர்நாடகம் மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளில் ஏற்றுமதிப் பயன்களுக்காக வசம்பு பயிர் செய்யப்படுகின்றது.

கலாமஸ் எனப்படும் இதன் தாவரவியல் சிற்றினப் பெயர் இனிப்பு இலை எனப் பொருள்படுவதாகும். உக்கிரம், வசம், உரைப்பான், பிள்ளை வளர்த்தி, பிள்ளை மருந்து ஆகிய முக்கியமான மாற்றுப் பெயர்களும் வசம்புக்கு உண்டு.

வேர்த்தண்டுகளே (வசம்பு) மருத்துவத்தில் பயன்படுபவை, இவை காய்ந்த நிலையில் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். வசம்பு தாவரத்தின் இலைகளும், வேர்முண்டுகளும், பான வகைகளுக்கு நறுமண மூட்டவும், வாசனைப் பொருளாகவும், பூச்சிக்கொல்லி மருந்துகள் தயாரிப்பதிலும் பயன்படுகின்றன.

எச்சரிக்கை: வசம்பை அதிக அளவில் நீண்ட காலத்திற்கு உட்கொண்டால் கடுமையான வாந்தியையும், வயிற்றுக்குமட்டலையும் தூண்டும்.

 

பிள்ளை வளர்த்தி

வசம்பைச்சுட்டு, கரியைத் தேனில் குழைத்து, குழந்தைகளின் நாக்கில் பூச, நன்றாகப் பேசுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்; குழந்தைகளுக்கு ஏற்படும் வாந்தி, பேதி கட்டுப்படும்.

தாவரத்தின் உலர்ந்த வேர்த்தண்டுகளில் கலாமஸ் எனப்படும் நறுமணமுள்ள மருந்துப்பொருள் நிறைந்து காணப்படுகின்றது.

வசம்பை விளக்குத் தீயில் சுட்டு, தாய்ப்பாலில் 3 முறை உரைத்து தொப்புளைச் சுற்றி தடவலாம் அல்லது வசம்பைச் சுட்டு கரியாக்கி 100 மி.கி. அளவு, 1 பாலாடை அளவு தாய்ப்பாலில் கலக்கி உள்ளுக்குள் கொடுக்க குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு குணமாகும்.

வசம்பை விளக்குத் தீயில் சுட்டு, தாய்ப்பாலில் 3 முறை உரைத்து குழந்தைகளின் நாக்கில் தடவ நாக்குத் தடுமாற்றம் (திக்குவாய்), வாயில் நீரொழுகல் ஆகியன தீரும்.

பசி அதிகமாக வசம்பைச் சுட்டு பொடியக்கி 1/4 கிராம் அளவு தேனில் குழைத்து ஒவ்வொரு வேளை உணவுக்குப் பின்னரும் சாப்பிட்டு வர வேண்டும்

வாந்தியுணர்வு கட்டுப்பட வசம்பு  சுட்ட சாம்பலை தேனில் குழைத்து நாக்கில் தடவ வேண்டும்

வசம்பின் வேர் முண்டுகளிலிருந்து பெறப்படும் எண்ணெய்ப் பொருள் நரம்புகளுக்குக் கிளர்ச்சியூட்டி, அவற்றைத் தூண்டக்கூடியதாகும்.

மனதையும், உடல் உறுப்புகளையும் அமைதிப்படுத்தும் மருந்தாகவும், வலி நீக்கியாகவும் இந்த எண்ணெய் பயன்படுகின்றது.

வேர் முண்டுகளின் நுண்ணுயிர் எதிர்ப்புத் திறன் ஆய்வுகள் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.