வன்னியும் கிணறும் லிங்கமும் அழைத்த படலம்

வன்னியும் கிணறும் லிங்கமும் அழைத்த படலம் இறைவனான சொக்கநாதர் வணிகரின் இரண்டாவது மனைவியின் திருமணத்திற்கு சாட்சியாக இருந்த வன்னி,கிணறு,லிங்கம் ஆகியவற்றை திருக்கோவிலின் வளாகத்தில் எழுந்தருளச் செய்ததைக் குறிப்பிடுகிறது.

வணிகரின் இரண்டாவது திருமணம், வணிகரின் இரண்டாவது மனைவி தன்னுடைய அவமானத்தை போக்க இறைவனை வேண்டுதல், இறைவனார் திருமணத்தின் சாட்சிகளை திருக்கோவிலில் எழுந்தருளச் செய்தல் ஆகியவற்றை விளக்குகிறது.

வன்னியும் கிணறும் லிங்கமும் அழைத்த படலம் திருவிளையாடல் புராணத்தின் ஆலவாய் காண்டத்தில் அறுபத்து நான்காவது படலமாக அமைந்துள்ளது.

வணிகரின் இரண்டாவது திருமணம்

ஒருசமயம் கடற்கரையின் அருகே இருந்த பட்டினம் ஒன்றில் வணிகர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு நீண்ட நாட்கள் குழந்தைப்பேறு வாய்க்கவில்லை.

இறைவனின் அருளால் பெண் குழந்தை பிறந்தது. அவ்வணிகருக்கு தங்கையின் மகன் ஒருவன் மதுரையில் வாழ்ந்து வந்தான். அவனுக்கே தன்னுடைய மகளை மணம்முடிக்க இருப்பதாக வணிகர் கூறி வந்தார்.

சிறிதுகாலம் கழித்து வணிகரும் அவருடைய மனைவியும் இறைவனடி சேர்ந்தார்கள். ஆதலால் அவ்வணிகரின் மகள் தனித்து விடப்பட்டாள். வணிகர் மறைந்த சேதியானது வணிகரின் மருகனுக்கு தெரிவிக்கப்பட்டது. அவனும் மாமனின் ஊரினை அடைந்தான்.

சிலநாட்கள் கழித்து மாமன் மகளையும் மாமனின் பொருட்களையும் எடுத்துக் கொண்டு “என்னுடைய மாமன் மகளை உறவினர்கள் முன்னிலையில் மதுரையில் மணந்து கொள்வேன்” என்று கூறிச் சென்றான்.

திருப்புறம்பியத்தை அடைந்தபோது திருக்கோவிலின் அருகில் இருந்த வன்னி மரத்தின் அடியில் உணவு சமைத்து உண்டு உறங்கும்போது கொடிய நஞ்சுள்ள பாம்பு ஒன்று அவனைத் தீண்ட அவன் மாண்டான்.

தாய்தந்தையரை இழந்து அனாதையாகி நின்றபோது ஆதரவளித்தவன் மாண்டதைக் கண்ட இளம்பெண் கதறினாள்.

இளம்பெண்ணின் கதறலைக் கேட்டு அங்குதங்கியிருந்த திருஞானசம்பந்தர் அவளிடம் அழுவதற்கான காரணத்தைக் கேட்டார். அப்பெண்ணும் தனக்கு நடந்தவைகளைக் கூறினாள்.

அப்பெண்ணின் மீது இரக்கம் கொண்ட ஞானசம்பந்தர் இறைவனார் மீது பதிகங்கள் பாடி மனமுருக வழிபட்டார். இறைவனாரும் அப்பெண்ணின் துன்பத்தைப் போக்க அவ்வணிகனை உயிர்ப்பித்தார்.

அவ்வணிகனிடம் ஞானசம்பந்தர் இப்பெண்ணை இங்கேயே திருமணம் செய்து கொள்ளுமாறு கூறினார். “எம் உறவினர்களும், சாட்சிகளும் இல்லாது எவ்வாறு இவளை மணம் முடிப்பேன்?” என்று கேட்டான்.

அதற்கு ஞானசம்பந்தர் “இங்குள்ள வன்னியும் கிணறும் லிங்கமும் சாட்சிகளாகும். உன் மாமனின் விருப்பப்படி இவளை நீ மணந்து கொள்” என்று கூறினார்.

அதற்கு உடன்பட்ட வணிகன் வன்னி, கிணறு, லிங்கம் ஆகியவற்றை சாட்சியாகக் கொண்டு அவளை மணம் முடித்து மதுரைக்கு அழைத்துச் சென்றான்.

வன்னி கிணறு லிங்கத்தைத் தோன்றச் செய்தல்

அவ்வணிகனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருந்தது. வணிகன் தன் இரு மனைவியருடனும் வாழ்ந்து வந்தான். ஒருசமயம் வணிகருக்கு இரு மனைவிகளின் மூலம் பிறந்த பிள்ளைகளுக்கு இடையே சண்டை வந்தது.

அந்த சண்டை இருபெண்களுக்கு இடையே வாக்கு வாதத்தில் முடிந்தது. அப்போது மூத்தவள் இளையவளிடம் “நீ என்னுடைய கணவனை அநியாயமாக திருமணம் செய்து விட்டாய்?. யாரை சாட்சியாகக் கொண்டு திருமணம் செய்தாய்?” என்று கேட்டாள்.

அதற்கு இளையவள் “எங்களுடைய திருமணத்திற்கு வன்னி, கிணறு, லிங்கம் ஆகியவை சாட்சியாக இருந்தன” என்று கூறினாள்.

“உன்னுடைய சாட்சிகளை மதுரைக்கு அழைத்து வந்தால்தான் உன்னுடைய திருமணத்தை முறையானதாகக் கூறமுடியும்.” என்று கூறினாள்.

இதனைக் கேட்டதும் இளையவள் தன்னுடைய திருமணத்தின் சாட்சிகளை எவ்வாறு மதுரைக்கு அழைத்து வரஇயலும் என்று எண்ணினாள். பின்னர் தனக்கு ஏற்பட்ட துயரத்தை போக்குமாறு வேண்டி சொக்கநாதரை மனமுருக வழிபட்டாள்.

இறைவனாரும் அவளின் துயரத்தை நீக்கும் பொருட்டு திருகோவிலின் வடகிழக்குப் பக்கத்தில் திருமணத்தின் சாட்சிகளான வன்னி, கிணறு, லிங்கம் ஆகியவற்றை தோன்றச் செய்தார்.

இதனைக் கண்டதும் மதுரை மக்கள் அதிசயித்தனர். இளையவள் இறைவனாரின் கருணை எண்ணி ஆனந்தம் கொண்டாள். தன்னுடைய திருமண சாட்சிகளை மதுரைக்கு வரவழைத்ததை மூத்தவளுக்கு காண்பித்தாள். அதனைக் கண்ட மூத்தவள் தன்னுடைய தவறினை உணர்ந்தாள்.

விவரம் அறிந்து அவ்விடத்திற்கு வந்த வணிகன் மூத்தவளிடம் கோபம் காட்டி அவளை விரட்டினான். இளையவள் அவனை சமாதானம் செய்து இருவரும் ஒற்றுமையுடன் வாழ உறுதி கொள்வதாகக் கூறினாள். பின்னர் அனைவரும் இனிது வாழ்ந்திருந்தனர்.

இப்படலம் உணர்த்தும் கருத்து

இறைவனை நம்பினார் கைவிடப்படார் என்பதே வன்னியும் கிணறும் லிங்கமும் அழைத்த படலம் கூறும் கருத்தாகும்.

வ.முனீஸ்வரன்

 

முந்தைய படலம் சமணரைக் கழுவேற்றிய படலம்

 

இப்படலத்துடன் திருவிளையாடல் புராணம் நிறைவடைந்தது.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.