வெட்டுக்காயப்பூண்டு – மருத்துவ பயன்கள்

இரத்தத்தை உறைய வைக்கும் திறன் வெட்டுக்காயப்பூண்டு இலைச்சாற்றுக்கு இருப்பது உயர்நிலை மருத்துவ ஆய்வுகள் மூலமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வெட்டுக்காயப்பூண்டு சிறுசெடி ஆகும். மென்மையான, அடர்த்தியான உரோமங்கள் கொண்ட தாவரம். 1மீ.வரை உயரமானவை, தரையோடு படர்ந்து, நுனிப்பகுதி மட்டும் நிமிர்ந்து வளர்ந்திருக்கும்.

இலைகள், எதிர் அடுக்கானவை, சொரசொரப்பானவை, ஈட்டி, முட்டை வடிவமானவை, இலைத்தாள் முழுமையானது.  பூக்கள், தொகுப்பானவை, தலை போன்ற தோற்றத்துடன் கூடியவை (தாத்தா தலைப்பூ).

மலர்கள், மஞ்சள் நிறமானவை, பிளவுபட்ட நாக்கு போன்றவை. ஆண், பெண் மலர்கள் தனித்தனியாகவும், மற்றும் இருபால் மலர்களும் ஒரே பூங்கொத்தில் காணப்படும்.

காய்கள், வெடித்துச் சிதறும் தன்மையானவை. விதைகள், கருப்பானவை. சிறு மயிரிழை போன்ற உரோமங்களும் காணப்படும்.

சமவெளிகள், கடற்கரையோரங்கள், புதிய நிலங்களில் தீவிரமாகப் பரவுகின்றன. மலர்கள், மழைக்காலத்தில் அதிகமாகவும், கோடைகாலத்தில் குறைந்தும் காணப்படும்.

வெட்டுக்காயங்கள் குணமாக வெட்டுக்காயப்பூண்டு இலைகளைப் பச்சையாக அரைத்து, சாற்றைக் காயத்தின் மீது தடவி, இரத்தம் வருவது நின்ற பின்னர், அரைத்த இலைகளைப் பாதிக்கப்பட்ட இடத்தில் பரப்பி, கட்டுப்போட வேண்டும்.

புண்கள் குணமாக வெட்டுக்காயப்பூண்டு இலை மற்றும் மஞ்சள் ஆகியவற்றைச் சம எடையாக அரைத்து, பசையாக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் பற்றாகப் போட வேண்டும். தினமும் ஒரு முறை, புண்கள் ஆறும்வரை தொடர்ந்து செய்து வரலாம்.